தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...
முன்னுரை தொல்காப்பியம் எழுத்து , சொல் , பொருள் என முப்பொருண்மையை விரிவாகப் பேசும் இலக்கணம் என்பது நமது கல்விபுலம் சொல்லும் தகவல். பின்னர் யாப்பு , அணி என இரண்டும் தனி இலக்கணங்களாக விரிவுபட்டதின் தொடர்ச்சியாகத் தொல்காப்பியத்திலேயே ஐந்திலக்கணம் குறித்த செய்திகள் உண்டு எனப் பேசத்தொடங்கியது தமிழ்க் கல்விப்புலம். இன்று உலக அறிவு விரிவடைந்துள்ள நிலையில் தொல்காப்பியத்தை இலக்கண நூலாகக் கற்பிப்பதைத் தாண்டி ஓர் அறிவுத் தோற்றவியல் நூலாகக் கற்பிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. ஐரோப்பியர்கள் அரிஸ்டாடிலின் எழுத்துகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு ஐரோப்பிய அறிவின் தொடக்கமாக முன்வைக்கிறார்கள். அப்படியொரு ஆளுமையாகத் தொல்காப்பியரை முன்வைக்க முடியும் . தொல்காப்பியப் பனுவலுக்குள் மனித அறிவுருவாக்கம் குறித்த விளக்கங்கள், சமூகவியல் அறிவு, உடலைப் பயன்படுத்தி உணர்வுகளைக் காட்டும் நடிப்புக்கோட்பாடு, நூலறிவியல் சிந்தனைகள், இடம்பெற்றுள்ளன.