தனித்தன்மையான கல்வி; தனித்துவமான வாழ்க்கை: எதிர்நீச்சலடிக்கும் எதிர்பார்ப்பு.
வார்சாவில் நான் முழுமையான மொழியாசிரியனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கசப்போடு தான் முதலில் ஏற்றுக் கொண்டேன். கசப்புக்கான முதல் காரணம் முழுமையான மொழி ஆசிரியனாக என்னை எப்போதும் கருதிக் கொண்டதில்லை. அத்துடன் மொழிக்கல்வியில் ஒரே விதமான கற்கை முறையை எல்லா இடத்திலும் பின்பற்ற முடியாது. ஒருவரின் தாய்மொழியைக் கற்பிக்கும் அதே முறையை எல்லா நிலையிலும் பின்பற்றக் கூடாது என்பது மொழியாசிரியர்களுக்குத் தெரியும். தாய்மொழியாக அல்லாமல் ஒரு நாட்டின் இன்னொரு மாநிலமொழியைக் கற்பிக்கும் முறையைக் கூட அயல் தேசத்தில் மொழி கற்பிக்கும்போது பின்பற்ற முடியாது. வார்சாவில் தமிழ் கற்பிக்கப்போகும் முன்பு இந்த முறைகளையெல்லாம் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவனாக நான் செல்லவில்லை.