தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு பல்வேறு திசை வழிகளில் சென்று கொண்டிருக்கிறது.நாட்டார் வழக்காற்றியலைப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் உள்ளிட்ட வாய்மொழி மரபு (Oral Tradition) எனவும், சடங்கு சார்ந்த, பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கூத்து, ஆட்டமரபுகள் அடங்கிய கலைகள் (Folk Arts) எனவும், சமய நம்பிக்கையோடு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், அவை சார்ந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஊர்ப்பெயர், மக்கட்பெயர் உள்ளிட்ட பண்பாட்டுக் கோலங்கள் (Customs and Manners) எனவும் பகுத்துக் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகின்றன. முறைப்படுத்து வதற்காகவும், ஆய்வு முறைகளுக்காகவும், இப்படிப் பிரிக்கப்பட்டாலும் நாட்டார் வழக்காற்றியல் அனைத்திற்கும் பொதுவான கூறு ஒன்று உண்டு. நிலம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட மக்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து பிரிக்க முடியாதவை இவ்வழக்காறுகள் என்பதுவே அப்பொதுக்கூறு.