எளிய மனுசியின் இலக்கு : மீரான் மைதீனின் கவர்னர் பெத்தா
மேல் நோக்கிய பயணம் – இந்த வாக்கியத்தைப் பலரும் சொல்கிற போது ஆன்மீகம் சார்ந்த வாக்கியமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நமக்குக் கிடைத்திருக்கிற – நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற - இந்த வாழ்க்கை அவ்வளவு இனிமையானது அல்ல என்ற நினைப்பு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. இந்த எண்ணமும் தவிப்பும் இருப்பதில் அப்பாவிகள் என்றும், அறிவார்ந்தவர்கள் என்றும் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மேலான வாழ்க்கை என்பதைப் புரிந்து வைத்திருப்பதிலும், அதை அடைய முடியும் என நம்புவதிலும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிடைத்திருக்கும் வாழ்க்கை மீதான அதிருப்தியின் அளவும், அதனை மாற்றிட வேண்டும் என்ற விருப்பமும், அதற்கான எத்தணிப்புகளும் எல்லாரிடமும் ஒன்று போல இருப்பதில்லை. அறிவார்ந்த தளத்திலும், நம்பிக்கைகளோடு கூடிய நடைமுறைகளைப் பின்பற்றுபவதிலும் கவனமாக இருக்கும் மனிதர்களின் எத்தணிப்புகளிலிருந்து திட்டமிட்டு வாழ்க்கையை முன்னகர்த்தும் வழியற்ற அப்பாவிகளின் எத்தணிப்புகள் பெருமளவு விலகியே இருக்கிறது.