சாகித்திய அகாதெமி: இலக்கியவியலின் போர்க்களம்
“சாகித்திய அகாதெமியின் விருதுகளைத் திரும்பத்தருதல்” என்பதற்குள் இப்போது நுழைய வேண்டியதில்லை. ‘திருப்பித் தந்தேயாக வேண்டும்’ என்று எதிர்பார்க்கவும் தேவையில்லை. அது அவரவர் விருப்பமும் நிலைபாடும் சார்ந்தது. அதேநேரத்தில் அரசதி காரமும், அதன் துணையில் வளரும் பிளவுசக்திகளும் தொடர்ந்து சகிப்பின்மையை விதைக்கும்போது எழுத்தை வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்டியங்கும் ஓர் எழுத்தாளன், தனது எதிர்ப்புணர்வைக் காட்டாமலும் இருந்து விடக்கூடாது. சகிப்பின்மையையும் தேசத்தின் பல்லிணக்க நிலைக்கெதிரான கருத்துநிலையையும் முன்வைத்து இந்தியா முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் தானே முன்வந்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எந்தத் தமிழ் எழுத்தாளரும் பங்கேற்கவேண்டுமென நினைக்கவில்லை என்பது தமிழ் எழுத்துலகத்திற்கு ஒரு களங்கம் என்பதிலும் சந்தேகமில்லை.