இவனே இல்லையென்றால் யார்தான் மாகவி?
கவி பாரதி எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பலவிதப் பதிப்புகளில் கிடைக்கின்றன. கவிதைகள் அனைத்தும் இணையம் வழியாக வாசிக்கக் கிடைப்பதும், அவனது கவிதை சார்ந்த கருத்துக்கள் நேரடி மொழிபெயர்ப்பாகவும், சாராம்சம் சார்ந்த சுருக்கமாகவும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அதன் காரணமாக அவனது படைப்புகளும், படைப்பு வழியே முன் வைக்கப்பட்ட கருத்துக்களும் உலகம் தழுவிய இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமாயுள்ளன. விரிவான விமரிசனங்களும் வெளி வந்துள்ளன. ஆனால் அவனது கவிதைகளில் அவனைப் பற்றியும், அவனது கவிதைகளின் இலக்குகள் பற்றியும் எழுதி வைத்துள்ள குறிப்புகள் விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப் படவில்லை. இன்னும் சொல்வதானால் கவி பாரதி என்னும் தனிமனிதத் தன்னிலையை அடையாளப்படுத்தும் அப்பிரதிகள் பொருட்படுத்தத் தக்க பிரதிகளாகக் கூடக் கருதப்படவில்லை. அதற்கு மாறாக அவன் மகாகவி அல்ல என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கலைக்கோட்பாடு: ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப் பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக்கோட்பாடு அல்லது இலக்கியக் கோட்பாடு என்ற சொல் உள்ளது. படைப்பியக்கம் என்பது படைப்பு சார்ந்த ந