சுஜாதா - நினைவுகளில் நிற்பார்
மாணவர்களுக்கு உரைநடைகளின் மாதிரிகளைக் காட்டுவதற்காகப் பலரின் உரைநடைகளைத் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சில பெயர்களைக் குறித்து வைத்துத் தேடிக் கொண்டிருந்தேன். அந்தப் பெயர்ப்பட்டியலில் சுஜாதாவின் பெயரும் இருந்ததால் அவரது கட்டுரைக்காகப் பழைய கணையாழியின் கடைசிப் பக்கங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அந்தக் குறுஞ்செய்தி வந்தது. அப்போது இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். எனது கைபேசியின் திரையில் தெரிந்த அந்தச் செய்தி எழுத்தாளர் சுஜாதா இறந்து விட்டார் என்று காட்டியது. அதைப் பார்த்த பின்பு எனது தேடல் நின்று போய்விட்டது.