இந்தியத்தன்மை உருவாக்க நினைக்கும் சினிமாக்காரர்கள் குறிப்பான வெளிகளைத் தவிர்த்து, இந்தியப் பரப்பில் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடிய கதைகளைத் தேடுகின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்தியத்தன்மை, காலனியக்காலத்து நடைமுறைகளுக்கு எதிராக நிறுத்தும் பார்வைக்கோணம் அவர்களிடம் வெளிப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி, மேற்குலகச் சிந்தனை போன்றவற்றிற்கு எதிராக இந்தியத்தனம், இந்தியச் சிந்தனை என்பதை முன்வைக்கும்போது பின் காலனியக் கோபம் இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் பின் காலனியக் கோபம், இந்தியச் சாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் தவிர்க்க நினைப்பது சமகாலச்சிந்தனை ஆகாது. அண்மையில் வந்த கேப்டன் மில்லரும் ஏழெட்டு மாதங்களுக்கு முன் வந்த 1947 ஆகஸ்டு 16 என்ற படமும் இந்தக் கோணத்தில் பார்க்கவேண்டிய படங்கள்.