தற்காலிகத்தைக் கொண்டாடுதல்

இதுதான் கவிதையின் வடிவம்; நாடகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும்; சிறுகதையின் தொடக்கமும் முடிவும் இப்படித்தான் இருக்கவேண்டுமென வலியுறுத்தும் நபர்களைப் பின்னுக்குத்தள்ளி எழுத்தும் பனுவல்களும் கடந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களில் மட்டுமல்ல; எல்லாவகையான செயல்பாடுகளிலும் இயங்குநிலையிலும் வடிவச்சீர்மையை வலியுறுத்தும் போக்கு முடிந்துவிட்டது. நெகிழ்ச்சியும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதாகவும், மாறாமலேயே தோன்றுவதாகவும் இருக்கும் வடிவங்களே கொண்டாடப்படும் வடிவங்களாக நம்முன்னே அலைகின்றன.

தரையிலோடும் மகிழ்வுந்தாக இருக்கும் பொம்மை, அதன் ஓட்டப் போக்கிலேயே கடலில் மூழ்கிவிரையும் நீர்மூழ்கிப் படகாகவும், விண்ணில் பறக்கும் ராக்கெட்டாகவும் மாற்றத்தக்கதாக இருக்கவேண்டுமென விரும்பும் சிறார்களின் விருப்பங்களைப் பெற்றோர்கள் மறுதலிப்பதில்லை. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுதலில்தான் தாய்மையும் தந்தைமையும் முழுமையாகிறது; வாழ்க்கையின் அர்த்தம் உருவாகிறது எனப் பெற்றோர்கள் நம்புகிறார்கள். அதன்மூலம் தாங்கள் வடிவவிரும்பிகள் என்பதை நிரூபிக்கிறார்கள். கச்சிதமான வடிவத்தில்தான் வாழ்க்கை அர்த்தமாகிறது என நம்பவில்லையென்றால், குழந்தைகள் விரும்பும் பொம்மைகளையும் புனைவுகளையும் ஏன் அவர்களுக்குப் பரிசளிக்கப் போகிறார்கள்?
பசித்த வயிறை நிரப்பிக்கொள்ள இரையைத்தேடுவதைப் போல, கிளர்ந்தெழும் இச்சையைத் தீர்த்துக்கொள்ள எதிர் பாலின உடலை நாடும் அடிப்படை உணர்வின் அர்த்தத்தை மறைத்துவைத்திருக்கும் தமிழ்ச்சொல் காமம். மறைப்பைக் கொஞ்சம் கசியவிடும் நெகிழ்ச்சியான சொல் காதல். அதனையும் தாண்டித் தளர்வான சொல்லாக இருப்பது அன்பு. அன்பு, காதல், காமம் என்னும் சொற்களை விளக்கும்போது ஒன்றிற்கு மேற்பட்ட உடல்கள் பற்றிப்பேசியாகவேண்டும். இவற்றிலும் காதலையும் காமத்தையும் விளக்க ஓராணுடலும் பெண்ணுடலும் விளக்கப்பட்டாக வேண்டும். காமத்தை விளக்க இவ்விரு உடல்களின் சேர்க்கையைச் சொல்லியாக வேண்டும். இத்தகைய தொடர்ச்சியான சொல்லாடல்களின் பின்னணியில் ஏற்கப்பட்ட அமைப்பாக இருப்பது குடும்பம். அதனை உருவாக்கிக்கொண்டபின் அதன்வழியாக விளக்கப்படும் காமமும் காதலும் அன்பும் ஏற்புடையன; நிரந்தரத்தன்மைகொண்டன; புனிதமானவை. குடும்ப அமைப்பை உருவாக்கிக்கொள்ளாமல் காட்டப்படும் அன்பும் காதலும் காமமும் ஏற்புடையனயல்ல; தற்காலிகமானவை; தண்டனைக்குரியன.

பெண்ணுடலும் ஆணுடலும் அவாவிக்கொண்ட உறவை வரையறைகளுடனும் கருத்தியல் தள விளக்கங்களுடன் நிறுவிக்கொண்ட குடும்ப வடிவம் தரும் நிரந்தரம் எப்போதும் ஏற்கத்தக்கதாக இருப்பதில்லை. நிரந்தரத்தை விரும்பியேற்கும் கணத்திலிருந்து விடுபட நினைக்கும் மனமும் உடலும் விலகலை அவாவிக்கொண்டே இருக்கிறது. ஆனால் விலகலை ஏற்காத நுண்ணலகான குடும்பமும், அதன் மேல் எழுப்பி நிலைநிறுத்திக்கொண்ட சமயம், அரசு போன்ற பேரலகு நிறுவனங்கள் குடும்பத்தின் நிரந்தரத்தைப் பொருள் உறவுகளாலும், பண்டமாற்றுச் சடங்குகளாலும் இறுக்கமாக்கியுள்ளன. இறுக்கமான அக்குடும்பவடிவத்தை நிரந்தரமானதாகக் காட்டக் கலை இலக்கியங்களின் துணையோடு புனிதத்தையும் கற்பித்துவந்துள்ளன. குடும்ப அமைப்பை நிரந்தரக் கட்டமைப்பாக்க உதவிய கலை இலக்கியங்களின் தொடர்ச்சிகளே அதனை நிரந்தரமில்லையென நிறுவவும் முயல்கின்றன என்பது விநோதமுரணல்ல; காலத்தின் இயக்கம்.

ஒரு விளையாட்டுப் பொம்மையின் வடிவத்திலேயே நெகிழ்ச்சித் தன்மையையும், தற்காலிகத் தன்மையைக் கொண்டாடும் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கும் நம் காலத்து வாழ்க்கைமுறையும் தேவைகளும் எல்லா வகையான வரையறைகளையும் வடிவங்களையும் வலியுறுத்துவதற்குப் பதிலாக அவற்றைக் கைவிடச்சொல்லி வலியுறுத்துகிறது. கைவிட்டவர்களின் களிப்பையும் கொண்டாட்ட நிலையையும் உணர்ந்துகொள்ள மறுப்பவர்களுடன் பேசும் நோக்கத்தோடு கூடிய பிரதிகளை நவீனத்துவ, பின் நவீனத்துவ வெளிப்பாடுகளுடன் கூடிய பனுவல்கள் தருகின்றன.

விளிம்புக்கு அப்பால் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெர்ஃப்யூம் என்னும் கதையை ரமேஷ் ரக்‌சன் எழுதியுள்ளார். ஜெமிலா என்னும் மாடலிங் பெண் - அவளைப் படமெடுப்பதற்காகச் சந்தித்த ஆண் ஆகியோரிடையே ஏற்பட்ட அனைத்தும் தீர்மானித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவுகள் அல்ல. நான்கு + நான்கு மணிநேர போட்டோ ஷுட்டில் தன்னைப் படம் எடுப்பவனிடம் தன்னை ஒப்படைத்துக் கணவன் - மனைவியாகிவிடும் வேகம் நிரந்தரத்தை விரும்பும் நிதானமல்ல. மாடலிங்கைக் கைவிட்டு, போட்டோ கிராபி கற்றுக்கொள்ளத் தொடங்கி, காதலியாகி, மனைவியாக மாறிய விளையாட்டு அது. அந்தந்த நேரத்தையும் -ஒவ்வொரு கணத்தையும்- முன்னதின் தொடர்ச்சியாக நினைக்காமல், இன்னொன்றின் புதிதாக நினைத்துக்கொண்டாடும் மனநிலை. இவனிடம் போட்டோ ஷூட்டிற்கு வருவதற்கு முன்னால், இவனைப்போலவே நான்கு காமிராக்காரர்களிடம் மாடலிங் செய்யப்போனவள் அவள். அவர்களிடம் மாடலிங் பொருளாக இல்லாமல், மனமும் ஆசையும் விருப்பமும் கொண்ட பெண்ணாக இருந்திருப்பாளா என்ற கேள்வி ஐந்தாவதாகப் படம்பிடித்த இவனுக்குத்தான் இருக்கிறது; ஜெமிலாவுக்கு இல்லை.
ஆண்-பெண் இணைந்து உருவாக்கிய குடும்ப அமைப்பின் புனிதமும் நிரந்தரத்தனமும் நேர்த்தியான மொழி நடையிலும், கச்சிதமான கதைகூறல் முறையிலும் எழுதப்பெற்ற தமிழ்ச்சிறுகதைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அதே நேரத்தில் குடும்ப அமைப்பின்மீது விசாரணைகளை முன்வைக்கும் கதைகளும் இணையான எண்ணிக்கையில் கிடைக்கின்றன. அவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் கதையில் உருவாக்கப்படும் பெண் பாத்திரங்களின் சார்பில் நின்று, ஆணின் அதிகாரம் செல்லுபடியாகும் அமைப்பாக இருக்கிறது என்ற விமரிசனத்தை முன்வைத்துள்ளனர். பாலினச் சமத்துவத்தை மறுக்கும் குடும்ப அமைப்பில் நெகிழ்ச்சியும் சமத்துவம் பேணும் கூறுகளும் உருவாக்கப்படவேண்டும் என்ற நிலைபாட்டையும் அக்கதாசிரியர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் ரமேஷ் ரக்சனின் கதை அத்தகைய மரபான சொல்லாடல்களுக்குள்ளோ, நவீனத்துவக் கேள்விக்குள்ளோ நுழையாமல், நேரடியாகத் தற்காலிகத்தைக் கேள்விகளற்ற சொல்லாடலாக முன்வைக்கிறது.
ஜெமிலாவிடம், மர்லின் மன்றோவிற்கும் அவளது தந்தைக்குமிடையே இருந்த உறவினை நினைவூட்டும் கணவனாகிய கதைசொல்லி, தன்னை ‘டாடி’ என்று அழைத்துக்கொண்டே அவள் நெருங்கும்போதுச் சின்னதான பண்பாட்டுச் சிக்கலில் மனம் தடுமாறுகிறான். அந்தத் தடுமாற்றம் இந்திய ஆணின் தவிர்க்கமுடியாத தடுமாற்றம். ஜெமிலாவின் அருகிருப்பையும் உடலின் ஈர்ப்பையும் தன் கழுத்தில் தொங்கும் காமிராவைப்போலவே கருதுபவன் அவன். திரும்பத்திரும்பக் கையாளாமல் காமிராவை விட்டுவைப்பதில்லை. துடைத்துச் சுத்தம் செய்வதற்காகவாவது அதன் மீது கவனம் செலுத்திக் கொண்டே இருப்பது அவனது வாடிக்கை. கதையில் இடம்பெறும் இரண்டு பேரில் ஆண் பாத்திரத்தின் கோணத்தில் சொல்லப்படும் பெர்ஃம்யூம் என்ற தலைப்பே தற்காலிகத்தின் முழுமையான குறியீடாக நிற்கிறது.
தமிழில் இவ்வகையான கதைகளை எழுதியவர்கள் பெரும்பாலும் ஒருவகையான எச்சரிக்கைக் குறிப்புகளையும் தங்களை விலக்கிவைக்கும் முன் அனுபந்தங்களையும் சொல்லிக்கொண்டு கதையை முன்வைப்பார்கள். ஆனால் ரமேஷ் ரக்சன், அத்தைகைய முன் அனுபந்தங்களையே விலகி நிற்கும் குறிப்புகளையோ எழுதாமல், கச்சிதமான வடிவத்தில் எழுதியுள்ளார். தன்மைக்கூற்றில் அமைந்துள்ள பெர்ஃம்யூம் கதையின் தொடக்கம் இப்படி இருக்கிறது:
நானும் அவளும் ஆன்லைனில் பெர்ஃப்யூம் தேடிக்கொண்டிருந்தோம். யூனிசெக்ஸ் பாடி ஸ்ப்ரே இந்தமுறை வாங்கலாம் என்றாள். நான் மறுப்பேதும் சொல்லாமல் சரி என்றேன். அவள் ஒரு முடிவுக்கு வருவதாய்த் தெரியவில்லை.தேடிக்கொண்டே இருந்தாள். முன்னெப்போதோ தேடியவற்றில் யுனிசெக்ஸ் வாட்ச் இருக்கவும் வாட்ச்சுக்குச் சென்றாள். ’நீ ஒரு முடிவுக்கு வருவதாய்த் தெரியவில்லை’ என்றேன். என்னைத் தேர்வுசெய்யச் சொன்னாள். லேப்டாப்பில் டேப்களின் எண்ணிக்கை ஓடிக்கொண்டே போனதே தவிர, வாட்ச்சும் பாடி ஸ்ப்ரே-வும் மாதிரி தெரியவில்லை.
இந்தத் தொடக்கம் தரும் தகவல்களை
நான் அந்த நாலு பேர் யார் என்றத் தகவலைக் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலிருந்தேன். அவள் மேலேறி இயங்கத் தொடங்கியிருந்தாள்.
என்ற கதையின் முடிவுக்கூற்றோடு இணைத்துப் பார்க்கும்போது கச்சிதமான சிறுகதை வடிவமும் ரமேஷ் ரக்சனுக்குக் கைவந்துள்ளதைக் காணமுடிகிறது.
ஜெமிலாவின் உடலையும் விருப்பங்களையும் வருணிக்கும்போது உருவாக்கப்பட்டுள்ள மொழியும் அது உருவாக்கும் கற்பனை வெளிகளும் தமிழை நவீனப்படுத்தும் மொழிக்காரராக ரமேஷ் ரக்சனை அடையாளம் காட்டியுள்ளது. நிரந்தரமானவை என நினைத்த அமைப்புகளைத் தற்காலிகமாக்ககாட்டுவதும், அதன் இருப்பைக் கொண்டாடுவதும் பின் நவீனத்துவ வெளிப்பாட்டுக்கூறுகளில் ஒன்று. அந்தவகையில் குடும்பத்தை ஆண்- பெண் சேர்க்கையால் உருவாக்கப்படும் பிணைப்பின் நிரந்தரத்தைத் தற்காலிகமானது என்ற புரிதலோடு அணுகும் மனிதர்களால் ஆனது எனச் சொல்லும் இந்தக் கதையை அந்த வகைக்கதை எனச் சொல்வதற்குத் தயங்கவேண்டியதில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்