அகத்திலிருந்து புறம்நோக்கிய நகர்வு

ஔவையும் கபிலனும் செவ்வியல் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கவிதை மரபை இன்றும் தொடர்வது யாரெனத்தேடியது மனம்.
செவ்வியல் மரபாக நாம் நினைத்துக்கொள்ளும் - கட்டமைத்துக்கொள்ளும் - தொடக்கத்தின் முதன்மை ஆளுமைகளாக யாரையெல்லாம் சொல்லலாம் என்ற தேடலைச் செய்தது மனம். முதல் பெயராக வந்தவள் கவி
ஔவை.
அவளைத்தொடர்ந்து நின்றவன் கவி கபிலன். வெள்ளிவீதி, அள்ளூர் நன்முல்லை, காக்கைபாடினி நச்செள்ளை, மாறோக்கத்து நப்பசலை, பொன்முடி போன்ற பெண்கவிகளும்,அரிசில்கிழான், அம்மூவன்,உலோச்சன், பரணன், கடியலூர் உருத்திரங்கண்ணன், பெருங்குன்றூர் பெருங்கௌசிகன், மாங்குடி மருதன், மாமூலன், நப்பூதன்,நல்லந்துவன் போன்ற ஆண்கவிகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதியவர்களாக இருக்கின்றனர். என்றாலும் ஔவைக்கும் கபிலனுக்கும் தனித்துவமான அடையாளங்களைச் சொல்லக்கூடிய அளவுக்குக் கவிதைகள் கிடைக்கின்றன. தொகைநூல்கள் ஒவ்வொன்றிலும் இவ்விருவரது பங்களிப்பு இருக்கின்றன.
அகத்திலும் புறத்திலும் அதிகமான எண்ணிக்கை, மனத்தின் அலைவுகளை மட்டுமல்லாமல், உடலின் அலைவுகளையும் எழுதிக்காட்டிய கவி ஆளுமைகள். காலத்தைப் பதிவுசெய்தல், ஆதரவை உறுதியாகக் காட்டுதல் புறக்கவிதைகளின் முதன்மை அடையாளமான. நேரடிக்கூற்று, அங்கதம், எச்சரிக்கைத் தொனி என்பன ஔவை, கபிலன் -இருவரின் புறக்கவிதைகளுக்குள்ளும் ஓடும் நுட்பக் கூறுகள். ஔவையின் புறக்கவிதைகளுக்கு அதியமானை ஆதரிக்கும் அரசியல் நிலைபாடு காரணமென்றால், கபிலனுக்குப் பாரியைக் காப்பாற்ற நினைத்த அரசியல் சார்பு காரணம். இப்படியான இணைத்தன்மைகள் கொண்ட இருவரும் அகக்கவிதை எழுதியதிலும் இணைத்தன்மைகொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
புறக்கவிதைகளின் எந்தத் தன்மைகளும் வெளிப்படாதவை அவர்களின் அகக்கவிதைகள். அகக்கவிதைகளின் அழகியல்கூறுகள் ஒவ்வொன்றையும் புணர்ச்சிக்கான தவிப்பு, ஏக்கம், புணர்ச்சிக்குப் பின்னான களிப்புநிலை என இன்பத்தையும், பிரிவின் துயரங்களை அதன் பலதள நிறவேறுபாடுகளோடும் படிமத்தளங்களோடும் தனிக்கவிதைகளாக எழுதித்தந்தவர்கள். அதிலும் கபிலனது குறிஞ்சிப்பாட்டோ , மலையையும் அதன் வனப்பையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பெற்ற ஆகச்சிறந்த நிலவியல் கவிதை. அந்த வகையில், கபிலனைப் போல் இன்னொரு கவியை - இணையாகப் பேசத்தக்க கவியைச் செவ்வியல் பரப்பில் சொல்லமுடியவில்லை.
செவ்வியல் நிலையிலிருந்து மாறியபின்னர் தமிழின் அகம், புறமென்னும் இருநிலையையும் ஒன்றிணைக்க முடியுமெனக்காட்டியவன் கவி இளங்கோ. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளான சிலப்பதிகாரம் தமிழ்க்கவிதை மரபை நாடகத்தன்மைக்குள் நகர்த்தியதின் முதன்மை வெளிப்பாடு.வள்ளுவன் அறம், பொருள் என புறநிலைகளின் மீதான வரையறைகளை விளக்கிய அளவுக்கு, அகநிலையின் தளங்களையும் எழுதியவனாக இல்லை என்பதாகத் தோன்றியது. அகக்கேள்விகளின் தளங்களை காமமென்ற ஒற்றைத் தளத்துக்குள் சுருக்கி நிறுத்திய முன்னோடியாகவே வள்ளுவனைப் படிக்கமுடிகிறது. அப்படிச் சுருக்காமல் ஒன்றிரண்டு தளங்களுக்கு விரித்தவள் ஆண்டாள். ஆனால் அவள் புறநிலையைக் கண்டுசொன்னவள் இல்லை. அவளைக் கடந்தால், பாரதியின் அடையாளம் முழுமையாகப் பொருந்தத்தக்கது. அவனைத்தாண்டிய தமிழ்க்கவிதை வரலாற்றில், அவரவர் காலத்து புறநிகழ்வுகளையும் அகக்கேள்விகளையும் எழுதிப்பார்த்தவர்களின் அடையாளங்களை
நினைத்துநினைத்துக் கடந்துவந்துநின்றது கவி மனுஷ்யபுத்திரனிடம்.
அகவுணர்வை மனதின் கேள்விகள் என்னும் இருத்தலிய நகர்வுகளாக்கி ஏராளமான கவிதைகளை - பலநூறு கவிதைகளைத் தந்த கவி மனுஷ்யபுத்திரன், மிக அண்மையில் புறநிலையை விசாரிப்பவராக மாறிவருகிறார். குறிப்பாகத் தன்னையொரு அரசியல் இயக்கத்தின் பகுதியாக அறிவித்துக்கொண்டபின் அவர் எழுதும் கவிதைகள் நிகழ்கால அரசியலை விசாரிக்கும் கவிதைகளாக மாறிவருகின்றன. அந்த விசாரணை முழுமையாக அவரது கட்சி ஆதரவு நிலைபாட்டிற்கு ஒத்துப்போகும் நோக்கத்தில் வெளிப்படவேண்டுமென நினைக்காமல் தவிர்த்துக்கொண்டே இருக்கிறார். அதனைக் கவனமாகத் தவிர்க்கும் தன்மை கொண்டவையாகக் கவிதையின் தொனியை மாற்றிவிடுவதின் வழியாகப் பெருந்திரளின் மனச்சாட்சியாகவும், அத்திரளின் மனச்சாட்சியைத் தூண்டும் கவியின் குரலாகவும் மாறிமாறிப் பேசுகிறார். தொடர்ச்சியாக நம்காலத்தின் பலதரப்பட்ட நிகழ்வுகளின் மீது, அதிகாரத்தின் முன்வைப்புகள் மீதும், அவற்றின் பின்னியங்கும் ரகசியச் சதிகளின்மீதும் ஒருவகையான திறப்புகளைச் செய்கின்றன அவரது கவிதைகள். ஒவ்வொரு மாதமும் உயிர்மை இதழில் அச்சிடப்படும் கவிதைகளில் அத்தகைய அரசியல் விமரிசன, விவாதக் கவிதைகளே அதிகம் இருக்கின்றன. நாள் தவறாமல் முன்னிரவு தொடங்கி நள்ளிரவுக்கும் பின்னால் முகநூலில் எழுதிப்போடும் கவிதைகள் முழுமையாக அந்தப் பக்கம் நகர்ந்துவிடுவதில்லை. அவை அவர் வாழும் சென்னைப் பெருநகரம் தரும் நெருக்கடிகளை,ஆசுவாசத்தை, குதூகலத்தை, அச்சுறுத்தலையெல்லாம் சொல்லப்பார்க்கின்றன. இந்த வேறுபாடும் தன்னுணர்வுடன் நிகழ்கிறது என்று சொல்லமுடியவில்லை.
அகத்தைக் காதல் அல்லது காமமென்னும் தளத்திலிருந்து விரித்து தன்னிலை தன்னோடும் தனக்குச் செவிமடுக்கும் இன்னொரு பாத்திரத்தோடும் உறவாடும் கவிதை வடிவமெனப் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் புறத்தைத் தனது மேதைமையை -அறிவை- வாழ்க்கைக் கோட்பாட்டை உணர்ந்த ஒருவன் பலரோடும் கூட்டத்தோடும் பேசும் கவிதை வடிவம் என்று புரிந்துகொள்ளவேண்டும். அப்படிப்பட்ட புரிதலே தமிழ்ச்செவ்வியல் கவிதைமரபு இன்றளவும் நீள்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலையாகும். அந்த நிலையிலிருந்து பார்க்கும்போது, ஒருநேரத்தில் அகத்தையும் புறத்தையும் எழுதிக்காட்டும் கவி மனுஷ்யபுத்திரனை நம் காலத்தின் ஔவையாக, கபிலனாக வாசிக்க முடிகிறது.
இந்த மாத உயிர்மையில் 6 கவிதைகள் வந்துள்ளன. 1.நிற்காதே 2.நக்சலைட், 3.நீங்கள் எப்போது ஒரு ஃபிட்ஜிட் ஸ்பின்னராக மாறினீர்கள், 4.பிரபலமான குசு 5. மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் 6. மன்னரின் பெயர்கொண்ட மலர். இந்த ஆறில் நான்கு வெளிப்படையான புறநிலைக் கவிதைகள். ” நிற்காதே” முழுமையான அகநிலைவெளிப்பாடு. இந்த ஆறில் அகமாகவும் புறமாகவும் மாறிமாறி நகரும் அந்தக் கவிதையை - நீங்கள் எப்போது ஒரு ஃபிட்ஜிட் ஸ்பின்னராக மாறினீர்கள் - என்ற கவிதையை எழுதிய மனநிலையைப் பிடிப்பதற்கு ஒருவர் படும் அவஸ்தை, முற்றிலும் தனித்துவமான ஒன்று.
============================================================
நிற்காதே
==========
நடந்துகொண்டே இருந்தால்
துக்கத்தின் சுமை
குறைந்துவிடும் என்கிறார்கள்.
நான் என் சக்கரநாற்காலியில்
நகர்ந்துகொண்டே இருக்கிறேன்
என் துக்கம் கொஞ்சம் கொஞ்சமாக
எடையற்றதாகிக் கொண்டிருக்கிறது
நடப்பதோ
நகர்வதோ
நமக்கிருப்பது
அவ்வளவு சின்ன வட்டங்கள்
அவ்வளவு சின்ன சதுரங்கள்
இந்த இரவின் காலடியில்
சற்றே ஓய்ந்தமர்கையில்
துக்கத்தின் உறுமல்
எங்கோ அருகாமையில்
கேட்கத்துவங்குகிறது.
நிற்காதே.
நடந்துகொண்டே இரு.
நகர்ந்துகொண்டே இரு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்