புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

இந்தக் கவிதையை மாணாக்கர்களிடம் வாசிக்க்க் கொடுத்தபோது அவர்கள் புரியவில்லை என்று சொன்னார்கள். புரியவில்லை என்றால் எது புரியவில்லை என்று கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “ கவிதை, நவீனக் கவிதை புரியவில்லை” எனச் சொல்லும் பலரிடமும் ‘எது புரியவில்லை ‘ என்ற கேள்விக்குப் பதில் இருப்பதில்லை. மரபான முறையில் செய்யுளை அர்த்தப்படுத்துவதற்காகத் தேடிக் கண்ட்டையும் அருஞ்சொல் எதுவும் இக்கவிதையில்  இல்லைஅப்படி இருந்தால் அதன் பொருளைச் சொல்வதன் மூலம் கவிதையை அர்த்தப்படுத்தலாம். அப்படிப் பொருள் சொல்வது அல்லது அர்த்தப்படுத்துவதுதான் கவிதையின் புரிதலா? என்ற அடுத்த கேள்வி எழும்

ஆடுபாம்பே
அந்த நாகப்பாம்பு அடிக்கடி என் தோட்டத்திற்கு வருகிறது
பிச்சிப்பூவின் வாசனைக்கு வருகிறது என்கிறான்
தோட்டக்காரன்

பாம்பாட்டியை அழைத்து மகுடி வாசித்து
பெட்டிக்குள் அடைத்துவிடத் திட்டமிட்டேன்.
அவனுக்குப் புரியவில்லை இப்போதெல்லாம்
பாம்புகள் மகுடி இசைக்கு மயங்குவதில்லை என்பது
நேற்று அதே பாம்பு என் கழுத்தில் மாலையாகி
என்னை அலங்கரித்தது
அந்த மயக்கம் தெளிவதற்குள் என் அரைஞாண் கயிற்றில்
சுற்றிக்கொண்டு ஆட்டம் போட்டது.
விடிவதற்குள் பாம்பை அடக்கிவிட வேண்டும்.
வெறிகொண்டு எழுகின்றேன்.
கண்விழித்துப் பார்க்கும்போது பாம்பு காணவில்லை
என் உடலில் இருந்து சிதறிய
நீலநிற ஒளியில் அந்த அறை எங்கும்
ஆகாயத்தின் துண்டுகள் சிதறிக் கிடந்தன.

இது புதிய மாதவியின் ஒரு கவிதை. எழுத்து வெளியிட்ட மௌனத்தின் பிளிறல் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

கவிதைச் செயலை அறிதல் அல்லது புரிதல் என்பதைத் தொடங்க அதன் தலைப்பு தொடங்கி நகர்ந்துகொண்டே இருக்கும் செயலின் வினையைப் பின்பற்றவேண்டும். இதனைக் கவிதையை ரசித்தல் என்றுகூடச் சொல்லலாம். புதிய மாதவி இந்தக் கவிதையில், கவிதையின் தலைப்பு தொடங்கி ஒவ்வொரு வரியிலும்பாம்புநகர்ந்துகொண்டே இருக்கிறது என்பதாகக் கவிதைச் செயலை உருவாக்குகிறார். பாம்பு, பிச்சிப்பூவின் வாசனை, பாம்பாட்டி, மகுடி இசை, கழுத்தில் வாசம், இடுப்பில்  அரைஞாண்கயிறு எனப் பல நிலைகளில், பல உருவங்களில் பாம்பு நகர்கின்றது. அப்படி உருமாறும்போது, பாம்பு வெறும் பாம்பாக இல்லாமல், இன்னொரு அரூபமாக - கருத்தாக- அக்கருத்தின் விளைவாக அல்லது செயலாக மாறிக் கவிதைச் செயலை முழுமையாக்க நினைக்கிறது. அக்கவிதைச் செயல் உடலின் நிறத்தை நீலவண்ண ஆகாயமாகவும், அதில் ஜொலிக்கும் நட்சத்திரக்கூட்ட்த்தின் சேர்க்கையையும் காட்சிப்படுத்துகிறது. இப்படியான காட்சிப்படுத்தலை நினைத்துக்கொள்ளும் ஒரு பாத்திரம் அக்கவிதைக்குள் வாழ்கிறது அல்லது இயங்குகிறது எனப் புரிகின்றபோது கவிதை ரசனைக்குரிய ஒன்றாகவும், அக்கவிதைக்குள் இயங்கும் மனிதத் தன்னிலை ஒருவிதச் சிறப்பான மனநிலைகொண்ட தன்னிலையாகவும் ஆகிவிடுகிறது.

ந்தத் தன்னிலை கவி புதிய மாதவியா? என்ற கேள்வியைக் கேட்டு, ‘ஆம்என்று விடையை உருவாக்கிக்கொண்டால் கவிதையின் வாசிப்புத்தளத்தை ஒருநபருக்குள் சுருக்கிவிடும் வேலையைச் செய்தவராக நாம் ஆகிவிடுவோம். எந்தவொரு பொருளும் உருவாக்கியவருக்கு மட்டுமே உடைமையானது என்ற நிலையிலிருந்து உருவாகும் மனநிலை அது. அதற்குமாறாக, அந்தக் கவிதைச் செயலும், அதனைச் செய்பவரும் நானாகவும், என்னைப்போன்ற இன்னொருவராகவும், ஒருவருக்குப் பதிலாகப் பலராகவும் ஆகமுடியும் என நம்பினால் அந்தக் கவிதை, பலரின் கவிதையாக மாறிவிடும்.

நவீனத்துவக் கவி ஒருவரால் எழுதப்படும் ஒரு நவீனக் கவிதையை அவரின் கவிதையாக இல்லாமல், பலரின் கவிதையாக ஆக்குவதற்கு முதல்படியாகச் செய்யவேண்டியது  அக்கவிதைக்குள் இயங்கும் குறியீட்டுச் சொற்கள் தரும் அர்த்தத்தை அதன் நேரடிப்பொருளில் மட்டும் யோசிக்காமல், அவரவர் அறிவுத் தளத்திற்கேற்ப நகர்த்தவேண்டும் என்பதே. அப்படி நகர்த்திவாசிக்கும்போதுதான் கவிதையின் பரிமாணங்கள் விரிவடையும். கவிதைக்குள் இருக்கும் குறியீட்டுச் சொற்களுக்குக் கவி உருவாக்கிய சூழல் அர்த்தம் ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடித்துக் கொள்வதும், அதிலிருந்து வாசிப்பவர் உருவாக்கும் சூழல் அர்த்தத்திற்கு நகர்த்துவதும் கவிதைச் செயலில் விரிந்த பரிமாணம். இப்படியொரு விரிந்த பரிமாணம் கவிதை வாசிப்பில் இருப்பதால்தான், கவிதை வாசிப்பும் கவிதை எழுதுவதற்கிணையான செயலாக ஆகிறது என்கிறோம்.

குறியீடுகளை அதிகம் பயன்படுத்தும் இலக்கியவடிவம் கவிதை. எல்லாக் குறியீடுகளும் எல்லாருக்கும் நேரடியாகச் சூழல் அர்த்தங்களைத் தந்து விடுவதில்லை. ஒரு சொல்லின் குறியீட்டு அர்த்தம் என்பது எந்தத்துறை சார்ந்த பயன்பாடு என்பது தெரியாத நிலையில் அந்தச் சொல்லைக் கடத்தல் இயலாமல் போய்விடும். ”விரிவாகச் சொல்லக்கூடாது; விளக்கிச் சொல்லக்கூடாது; ஒற்றைச் சொல்லின்வழியாக வாசிப்பவர்களின் மனதை வேறொரு வெளிக்கும் காலத்திற்கும் அழைத்துச் செல்லும் தன்மைகொண்டது கவிதை” போன்ற நெருக்கடிக்குள் தவிக்கும் கவி, அதனைச் செறிவாக்கவே நினைக்கிறார். செறிவாக்கும் மனநிலையில் தான் ஒரு கவிதையில் மையமாக ஒரு சொல்லை உருவாக்குகிறார். ஆனால் அதே ஒரு சொல் கவிதைகளை வாசிக்கும்போது பலருக்கும் தடைகள் என்ற  நினைப்பையும் உண்டாக்கும். அந்தத் தடையைத் தாண்டிவிட்டால் கவிதையைப் போல வாசிப்பு அனுபவம் தரும் இன்னொரு இலக்கியவடிவம் இல்லையென்றே சொல்லலாம்.

மரபுக்கவிதைகளும்கூட குறியீடுகளைப் பயன்படுத்தவே செய்தன. உவமை, உள்ளுறை, உருவகம் போன்ற அணிகளாக அறியப்பட்டவையே நவீன கவிதையில் குறியீடுகளாகவும் படிமங்களாகவும் ஆகிவிடுகின்றன. அத்தோடு அவை உருவாகும் களன்களும் விரிவாகியிருக்கின்றன. வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப்படையாக உவமை உருவாகும் என வரையறைகள் இருப்பதால் மரபுக்கவிதை வாசகர்களுக்குப் புரிதலில் பெரிய அளவு சிக்கல் ஏற்படுவதில்லை. அத்தோடு அவை அறியப்பட்ட வரலாறு, தெரிந்த தொன்மம், படித்த நிலவியல், வாழ்ந்தபண்பாட்டுத்தளங்கள் என அறிந்த நிரந்தரங்களிலிருந்தே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நவீனக் கவிதைகள் உருவாக்கும் குறியீடுகள் அறியப்பட்டவைகளாக மட்டும் இருப்பதில்லை. சமகால அரசியல், வரலாறு, நிலவியல், பண்பாட்டுக் கூறுகளை மட்டுமல்லாமல் அவற்றால் ஏற்படும் முரண்பாடுகளையும் எழுப்பும் கேள்விகளையும் குறியீடுகளாக்குகிறார்கள் கவிகள், அந்தக் குறியீடுகளைக் குறிப்பான பின்னணியில் நிறுத்துவதற்காக அவர்களின் மனவெளிக்குள் உருவாகும் காட்சிக்கூறுகளைப் படிமங்களாக மாற்றுகிறார்கள். அப்படிமங்கள் விரிவான தளத்திற்கு வரும்போது வெவ்வேறு அர்த்தங்களைத் தருவனவாக மாறிவிடும் வாய்ப்புகள் இருப்பதால், கவிதையின் புரிதல் மேலும் சிக்கலாக மாறிவிடுகிறது. இவையெல்லாம் கவிதைகளின் பொதுவான புரிதல் சிக்கல்கள். இவையில்லாமல் சில கவிகளின் பாணிகாரணமாகச் சிறப்பான தடைகளும் சிக்கல்களும் உருவாவதும் உண்டு.

நவீனத் தமிழ்க் கவிதைகளில் இடம்பெறும் குறியீடுகளிலும் படிமங்களிலும் பெரும் மாற்றத்தைத் தொடங்கிவைத்த இலக்கியப்போக்குகளாகத் தலித்தியமும் பெண்ணியமும் இருக்கின்றன.  இவற்றின் வரவால், அதுவரை அதிகமாகப் பயன்பட்டுவந்த இந்தியத்தனம்/ இந்து சமயத்தன்மைகொண்ட  புராணப்பாத்திரங்களும் தொன்ம நிகழ்வுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வட்டாரத்தலைவர்களும் குறிப்பான வெளிகளின் நிகழ்வுகளும் படிமங்களாக மாறின. புதிய மாதவி தனது கவிதைகளில் இந்தியத் தொன்மங்களுக்குப் பதிலாகத் தமிழ் இலக்கிய மரபிலிருந்து அதற்கேயுரிய தொன்மங்களையும் நிகழ்வுகளையும் தேடிக்கண்டுபிடித்துப் பயன்படுத்துவதன் மூலம், மற்றவர்களின் கவிதைகளிலிருந்து தனது கவிதையை -கவிதை பாணியை வேறுபடுத்திக் காட்டுகிறார். அப்படிப்பட்ட கவிதைகள் பலவற்றை அவரது மௌனத்தின் பிளிறல் தொகுப்பில் வாசிக்க முடிகிறது. சிவதாண்டவம், ??? சிவனின் வெற்றி, ஓம் நமச்சிவாய, பராசக்தி சிவகாமி ஆனாள், புனிதவதி தொலத்த மாங்கனி, மூவுடையா, நான்முகன், திருமகளாய் நானும், விறலியின் சபதம், நெய்தல் தலைவி, பாம்பாட்டி இந்தத் தலைப்பில் இருக்கும் கவிதைகள் எல்லாம் அத்தகையன. இன்னொரு கவிதையை உங்களுக்கு வாசிக்கத்தருகிறேன். அதன் தலைப்பு : காக்கைகள்

விழித்திருக்கும்போதும் தூக்கத்திலும்
என்னைத் துரத்துகின்றன
காக்கைகள்
தனியாகவோ கூட்டமாகவோ.

விழித்திருக்கும்போது
சிறகுகளை விரித்து
என்னைச் சிறைப்பிடிக்க வருகின்றன
தூக்கத்திலோ என் கபாலத்தைப் பிளந்து
நினைவுகளின்
ஒவ்வொரு ரகசிய அறைக்குள்ளும்
பூட்டுகளை உடைத்துக் கொண்டு
புகுந்துவிடுகின்றன.
அணுஅணுவாய்க் கொத்திக் குதறி
சிடுக்குகளை மேலும் சிடுக்குகளாக்கி
நரம்பு மண்டத்தை நாசப்படுத்தி விடுகின்றன
என் செயல்பாடுகளை என் கட்டுப்பாடுகளை
இழந்துவிடும் அச்சத்தில்
கனவுகளை விலக்கி வைக்க நினைத்து
தோற்றுப் போகிறேன்.
என் தோல்வியைத்
தன் வெற்றிக்கு அடையாளமாக்கி
விழா எடுக்கின்றன காக்கைகள்

என் முப்பாட்டி காக்கைப் பாடினிக்கு
விருந்தினர் வருகையை
அறிவித்த காக்கைகள்
இப்போதெல்லாம் மாறிவிட்டன
மனிதர்களைப் போல
===================
இந்தக் கவிதையை வாசிக்க தமிழ்ச்செவ்வியல் கவிதைத் தொகுப்பிலிருக்கும் காக்கைபாடினி நச்செள்ளையின் 12 கவிதைகளையும் வாசித்திருந்தால் நல்லது. சேரமன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய பதிற்றுப்பத்தில் 10 கவிதைகளில் நிலவியல் சார்ந்த தகவல்கள், அவனின் பெருமைகள், வீரம், இல்லறவாழ்வில் பின்பற்ற அறம் போன்றன வெளிப்படுகின்றன.  இன்னொரு புறப்பாட்டில் தான் ஈன்ற மகன் முதுகில் புண்பட்டு உன் மகன் இறந்துபட்டான் என்று கேள்விப்பட்டுப் போர்க்களம் சென்று தேடச் சென்ற ஒரு தாயைக் காட்டுகிறார். அச்செய்தி உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டியமுலையறுத்திடுவேன்என்பது அவளது சபதம். ஆனால் மகனோ, உடல் முழுக்கச் சிதைந்து கிடந்தான். அதைக்கண்டுஈன்றஞான்றினும் பெரிது உவந்தன்றேஎன வியப்பவளாக இருக்கிறாள். இதையும் கூட நீங்கள் வாசிக்காமல் விட்டுவிடலாம். ஆனால் நச்செள்ளையின்
குறுந்தொகைப்பாடலை (210),
திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது - என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே

என்ற ஆறுவரிகளின் கவிதைச் செயலை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தலைவனின் வரவைச் சொல்லும் காக்கைக்குப் பலியாக - தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகச் சிறப்பான உணவை விருந்தாகத் தர நினைக்கிறாள் அந்தக் கவிதையின் செயல்படு பாத்திரமாக இருக்கும் தோழி. நச்செள்ளையால் கொண்டாடப்பட்ட காக்கைகள் கூட நிகழ்காலத்தில் பெண்களுக்கு ஆதரவாக இல்லை; எதிர்நிலையிலேயே இருக்கின்றன என்பது புதிய மாதவி உருவாக்கும் குறியீட்டின் எதிர்நிலை. தலைவனைப் பிரிந்திருக்கும்போது ஆறுதலாக இருந்த காக்கைகள் இப்போது இல்லை. அந்தக் காக்கைகள் மனதில் தோன்றும் அலைகளாகவும் நினைவுகளாகவும் மாறிவிட்டன. தனித்திருக்கும் ஒரு பெண்ணிற்குத் துன்பங்களையே வலிகளையே தருகின்றன. இரவு பகல் எனக் காலம் பார்க்காமல், என்னுடலுக்குள் புகுந்து ரணப்படுத்துகின்றன; கொத்தித்துளைத்து எனது தோல்வியில் அவை கூத்தாடுகின்றன என்கிறாள் தனிமையில் இருக்கும் ஒருபெண்.
நச்செள்ளையால் உருவாக்கப்பட்ட பெண் தனித்திருத்தலில் காக்கையின் கரைதலில் ஆறுதலோடு இருக்கிறாள். புதிய மாதவி உருவாக்கும் பெண் தனித்திருத்தலில் வலியோடும் தவிப்போடும் இருக்கிறாள். இந்த மாற்று மனநிலையை அறிய ’முப்பாட்டி காக்கைப்பாடினி’ என்ற சொல்லைக் குறியீடாகவும் , தொன்மப் படிம்மாகவும் மாற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது வேறொன்றுமில்லை அதனை ரசிப்பதுதான். ரசிக்கத்தக்க கவிதைகள் பலவற்றைக் கொண்ட தொகுப்பாக இருக்கிறது புதிய மாதவியின் மௌனத்தின் பிளிறல்.
=============================================================
மௌனத்தின் பிளிறல்
புதியமாதவி

எழுத்து, 3 சி, எல்டோரடா, 112, நுங்கம்பாக்கம் ஹைரோடு, சென்னை, 600 034

கருத்துகள்

இராய செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு தேர்ந்த மொழியறிஞர், ஒரு சிறந்த கவிதை நூலுக்கு மனமுவந்து வழங்கும் திறனாய்வு இது. புதிய மாதவி அதிர்ஷ்டம் செய்தவர்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து. (http://chellappatamildiary.blogspot.com)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்