திருமதி எக்ஸ்


பாஷ்யத்தின் அந்த அறையில் ஒருவர் உட்கார்ந்துள்ளார். அவரைக் கனவான் ஒன்று என அழைக்கலாம். செய்தித்தாள் படித்தபடி யாருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார். அவர் வயதானவர். இன்னொரு வயதான நபர் கனவான் இரண்டு வருகிறார். முதலாமவர் எழுந்து மரியாதையோடு வரவேற்கிறார். இருவரும் அமைதியாக இருக்கின்றனர். பேச்சை யார் ஆரம்பிப்பது என்ற தயக்கம் முதலாமவரே அமைதியைக் குலைக்க விரும்பியவராய்

முதலாமவர்
நான் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறேன்
இரண்டாமவர்
அது நல்ல பழக்கம்
முதலாமவர்
உலகத்தைப் பற்றித் தெரிய வேண்டுமென்றால்..
இரண்டாமவர்
சினிமாவைப் பற்றி, நாடகத்தைப் பற்றி, விளையாட்டைப் பற்றி. இலக்கியம் பற்றி
முதலாமவர்
அரசியல் குறித்தும், வன்முறை குறித்தும், குற்றவாளிகள் குறித்தும்
இரண்டாமவர்
டி.வி.பற்றி, கம்யூட்டர் பற்றி, வியாபாரம் பற்றி மார்க்கெட் நிலவரம் பற்றி
முதலாமவர்
கற்பழிப்பு குறித்தும், தாதாக்கள் குறித்தும், கலாசாரம் குறித்தும்
இரண்டாமவர்
தகவல் தருவன செய்தித்தாள்கள் தான்; ஒரு நாள் பட்டினி கிடைக்கச் சொன்னால் கூட என்னால் முடியும்; பத்திரிகை வாசிக்காமல் என்னால் இருக்க முடியாது.
முதலாமவர்
நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் கூடப் போகலாம்; ஆனால் அது தான் உண்மை. ஒரு தடவை காய்ச்சல் வந்து டாக்டரிடம் போனேன். அதிகம் சாப்பிட்டதால் அந்தக் காய்ச்சல் என்று அவர் சொன்னார். அது உண்மையல்ல என்பது எனக்குத் தெரியும். அன்று பத்திரிகை வரவில்லை. அதனால் தான் அந்தக் காய்ச்சல் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.
(சிறிது நேரம் அமைதி)
இரண்டாமவர்
செய்தித்தாளில் என்னவெல்லாம் வாசிப்பீர்கள்?
முதலாமவர்
மணமேடையைத் தான் – மேட்ரிமேனியல்- மணமகன் – மணமகள் தேவை பக்கத்தை.
இரண்டாமவர்
வித்தியாசமானது தான். ஆனால் அதுவுங்கூட எனக்கும் பிடித்த பகுதி தான்.
முதலாமவர்
உங்களுக்குத் திருமணம் நடந்து விட்டது என்றே நினைக்கிறேன்.
இரண்டாமவர்
(கூச்சத்துடன்) ம்ம்.. நல்லது. எனக்கு… எனக்கு.. 16 வயதிலேயே திருமணம் நடந்து விட்டது. அதற்குப் பிறகுதான் அந்தப் பகுதியை வாசிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன்.
முதலாமவர்
நானும் கூட அப்படித்தான்.. திருமணம் என்பதை ஒருவனின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று என்றே நினைக்கிறேன்.
இரண்டாமவர்
எல்லா உயிர்களுக்கும் அது முக்கியமான ஒன்று தான். ( திரும்பவும் அமைதி)
சரி மணமேடையில் ரொம்பவும் பிடித்தமான பகுதி என எதை நினைக்கிறீங்க?
முதலாமவர்
வர..
இரண்டாமவர்
வர..
முதலாமவர்
(விருப்பமில்லாமல்) வரதட்சணை…
இரண்டாமவர்
ஆம்.. வரதட்சணை தான். ஆனால்..
முதலாமவர்
நீங்கள் வரதட்சணையை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்பலாம் தானே…?
இரண்டாமவர்
முழுவதும் அப்படிச் சொல்லி விட முடியாது. அது வந்து..
முதலாமவர்
எனக்கும் கூட முழுமையான எதிர்ப்பு உண்டு என்று சொல்ல முடியாது.
இரண்டாமவர்
வரதட்சணையில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
முதலாமவர்
எனக்கும் கூடத் தான்.,, வரதட்சணை சமூகத்திற்கு ஒரு களங்கம்..
இரண்டாமவர்
கதற வைக்கும் அவமானம்..
முதலாமவர்
வரதட்சணை ஒழிக.
இரண்டாமவர்
திருமணத்தில் வரதட்சணைக்கு இடமே இல்லை.
முதலாமவர்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் ஒன்று.
இரண்டாமவர்
அதாவது நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள்.
(இருவரும் கண்களை மூடி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட தங்கள் திருமணங்களை நினைவு கூர்கின்றனர். சுதாங்கன் நுழைகிறான். அவர்கள் கண்களைத் திறக்கவில்லை. சுதாங்கன் இருமுகிறான். அவர்கள் விழித்துப் பார்க்கின்றனர்.)
சுதாங்கன்
நீங்கள் எனது தந்தையின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எதாவது கேட்க வேண்டுமா..?
முதலாமவர்
இல்லை
இரண்டாமவர்
சரி வேறென்ன.? நான் அவரிடம் சொல்றேன். ( அவன் உள்ளே போகிறான்)
முதலாமவர்
நீங்கள் தான் பாஷ்யம் என்று நினைக்கிறேன்.
இரண்டாமவர்
நீங்கள் தான் பாஷ்யம் என்று நம்புகிறேன். அவர் ஒரு பைத்தியம் போல் இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
முதலாமவர்
நீ என்ன சொல்கிறாய்? நான் ஒரு பைத்தியம் போலவா இருக்கிறேன்.. உன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததில்லையா..?
இரண்டாமவர்
அப்படியானால்.. நீங்கள் பாஷ்யம் இல்லை என்பதைத் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கலாமே? அவருக்குத் தர வேண்டிய மரியாதையை உங்களுக்குத் தராமல் இருந்திருப்பேனே..
முதலாமவர்
நீ என்னைப் பைத்தியம் போல் இருக்கிறேன் என்று சொல்லி விட்டாய்…
இரண்டாமவர்
செய்திப் பத்திரிகையோடு உன்னைப் பார்த்தவர்கள் பாஷ்யம் என்றே நினைப்பார்கள்..
முதலாமவர்
நீ என்னைப் பைத்தியக்காரன் போல் இருக்கிறேன் என்று சொன்னால், உன்னையும் அப்படிப் பட்டவன் என்று தான் நான் சொல்வேன். ( இருவரும் கத்துகின்றனர், மூன்றாவதாக ஒருவர் – பாஷ்யம் வருகிறார், அவரது பார்வை சமாதானம் உண்டாக்குவதாக இருக்கிறது)
இரண்டாமவர்
நீங்கள் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ? (அவர்கள் அவரை வணங்கி விட்டு உட்காருகின்றனர்)
முதலாமவர்
நிச்சயமாக நீங்கள் தெரிந்து கொண்டாக வேண்டும்.
இரண்டாமவர்
நீங்கள் எல்லாம தெரிந்தவர்.
முதலாமவர்
நீங்கள் கடவுள்.
இரண்டாமவர்
(இதையெல்லாம் ஒதுக்கி விட்டு) என்ன முடிவுக்கு வந்துள்ளீர்கள்.? லக்கி ஒன்பதா..? அல்லது பேகம் குட்டியா..?
முதலாமவர்
லக்கி பேகம்
இரண்டாமவர்
குட்டி ஒன்பது
முதலாமவர்
( பாஷ்யம் எழுந்து நிற்க, அவர்களும் எழுந்து நிற்கின்றனர்.)
பாஷ்யம்
(முதலாமவரிடம்) யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறாய்?.. ;லக்கி ஒன்பதா..? குட்டி பேகமா..?
முதலாமவர்
(தீர்மானம் இல்லாமல்) பேகம் குட்டி
பாஷ்யம்
ஹஹ்ஹா .. சிரிப்புத்தான் வருகிறது.. பேகம் குட்டி.. உனக்கு ஒன்றுமே தெரியாதா..?
இரண்டாமவர்
(உறுதியுடன்) குட்டி பேகம் ஜெயிக்குமென்று யார் சொன்னது? லக்கி ஒன்பதுதான் ஜெயிக்கும்.
பாஷ்யம்
ஹஹ்ஹா .. நீயும் ஒரு கோமாளி தான்.. லக்கி ஒன்பது.. நீ சொல்வதை முழுவதும் ஒதுக்கி விடலாம்.
முதலாமவர்
யார் ஜெயிப்பது என்று நீங்கள் சொல்லுங்கள்.
பாஷ்யம்
அப்படிக் கேளுங்கள். இந்தத் தடவை வெற்றி எக்ஸுக்குத் தான்.
இரண்டாமவர்
எக்ஸ்.. என்ன.. எக்ஸ்..
பாஷ்யம்
நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருக்கிறீர்களே!
முதலாமவர்
இல்லை. நான் செய்தித்தாள் படிக்கிறேன்
பாஷ்யம்
அதாவது நீங்கள் செய்திப் பத்திரிகை எல்லாம் படிக்கிறேன் என்கிறீர்கள்.
இரண்டாமவர்
இல்லை. இல்லை. நான் இங்கு வந்த போது இந்தக் கனவான் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.
முதலாமவர்
யார் இதைப் படிப்பார்கள்?. விசிறிக் கொள்வதற்காக இதை வைத்திருந்தேன். பொட்டலம் மடிக்க மட்டும் தான் செய்தித்தாளை பயன்படுத்துவேன்.
(பாஷ்யம் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. உட்கார்ந்து விடுகிறார்)
பாஷ்யம்
சரி.. நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்..?
முதலாமவர்
உங்கள் மகன் சங்கரை எனக்குத் தெரியும்.
இரண்டாமவர்
சங்கர்.. எனது இனிய நண்பன்.
பாஷ்யம்
அவன் ஏற்கெனவே இன்ஸுயூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டானே.
முதலாமவர்
இல்லை. வந்து எனது மகள் மீரா அவரது மாணவி..
இரண்டாமவர்
எனது மகள் கலா கூட அவரது மாணவி தான்
பாஷ்யம்
ஆஹா.. அவர்கள் ஒழுங்காகப் பரீட்சை எழுதவில்லை. சங்கர் அவர்களுக்கு உதவ வேண்டும். அப்படித்தானே.. இல்லை ரொம்பவும் நன்றி. நீங்கள் போய் வரலாம்.
முதலாமவர்
இல்லை. அதில்லை. சங்கர் மீராவைத் திருமணம் செய்ய விரும்புகிறார்.
இரண்டாமவர்
இல்லை. அவர் கலாவை விரும்புகிறார்.
முதலாமவர்
கலாவையா..? இருக்காது. கலா அசிங்கமானவள்..
இரண்டாமவர்
மீராவின் முதுகு கூன் முதுகு.
முதலாமவர்
கலாவின் கால்கள் நொண்டி
இரண்டாமவர்
மீரா குருடி
முதலாமவர்
கலா ஊமை, செவிடி
இரண்டாமவர்
எப்படி இருந்தாலும் சரி. இரண்டு மனைவிகள் என்பது சட்டவிரோதமானது.
முதலாமவர்
இல்லை சங்கர் மீராவைத் தான் மணந்து கொள்வார்.
இரண்டாமவர்
இல்லை . கலாவைத்தான் மணப்பார்
பாஷ்யம்
இதில் நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?
முதலாமவர்
சங்கர் தேர்வு தான் செய்வார். நீங்கள் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இரண்டாமவர்
உங்கள் ஒப்புதல் – சம்மதம் இல்லாமல் எப்படித் திருமணம் நடக்க முடியும்?
(பாஷ்யம் உட்கார்கிறார்)
பாஷ்யம்
நல்லது.. ம்.. உங்களுக்கு வரதட்சணையில் நம்பிக்கை உண்டா..?
(இருவரும் அமைதியாகின்றனர். அவரின் விருப்பம் என்னவென்று அறியும் மனநிலை)
எனக்கு உண்டு
முதலாமவர்
எனக்கும் நம்பிக்கை உண்டு
இரண்டாமவர்
யாருக்குத் தான் இல்லை
பாஷ்யம்
அப்புறம் என்ன? நேரடியாக விசயத்துக்கு வருவோம். உங்களால் எவ்வளவு தர முடியும்?
முதலாமவர்
ஐம்பதாயிரம்.. ( பாஷ்யம் கனவான் இரண்டைப் பார்க்கிறார்)
இரண்டாமவர்
எழுபதாயிரம்
முதலாமவர்
எண்பதாயிரம்..
இரண்டாமவர்
ஒரு லட்சம்
பாஷ்யம்
கொஞ்சம் பொறுங்கள்.. இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்.
(உள்ளே போய் விடுகிறார்)
முதலாமவர்
ஒன்னே கால் லட்சம்
இரண்டாமவர்
ஒன்றரை லட்சம்
(சுதாங்கன் வருகிறான். கோட், சூட்டில் அவன் இருந்ததால் சங்கர் அவன் தான் என நினைக்கிறார்கள்)
முதலாமவர்
மிஸ்டர் சங்கர்
சுதாங்கன்
நான் சங்கர் இல்லை. அவரது தம்பி.. எனது திருமணம் நடக்க சில வருடங்கள் ஆகலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
முதலாமவர்
நாங்கள் மிஸ்டர் சங்கரின் திருமணம் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
சுதாங்கன்
சங்கரோட திருமணமா..? அவனுக்கு ஏற்கெனவே ஹீராவோட நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. ( சொல்லி விட்டு வெளியேறுகிறான்)
முதலாமவர்
அந்தக் கடவுளுக்கு நன்றி.. சங்கர் என் மகள் மீராவை மணக்கப் போகிறார்.
இரண்டாமவர்
அவன் சொன்னது மீரா அல்ல.. ஹீரா..
முதலாமவர்
இல்லை. உறுதியாகச் சொல்வேன். மீரா என்று தான் சொன்னார்.
இரண்டாமவர்
இல்லை. நீரா தான். நான் வரதட்சணையாக எதுவும் தரப் போவதில்லை.
முதலாமவர்
வரதட்சணை யார் தரப் போகிறார்கள்.. சங்கரே மீராவை மணப்பது என்று முடிவு செய்துவிட்டார்.
இரண்டாமவர்
( தனக்குள்) எனக்குத் தெரியும். அவன் சொன்னதைக் கேட்டேன். நீரா என்று தான் சொன்னான்.   ( இருவரும் அமைதியாக உள்ளனர்).
முதலாமவர்
எனக்குத் தெரியும். ஜெயிக்கப் போவது எக்ஸ் என்று.
இரண்டாமவர்
என்ன எக்ஸ்? ( தனக்குள்) ஆமாம் எல்லாருக்கும் தெரியும். வெல்லப் போகும் அந்த எக்ஸ் யார் என்று ..
முதலாமவர்
ஆனால் நீங்கள் கூடச் சொன்னீர்கள். லக்கி பேகம் ஜெயிக்கும் என்று.
இரண்டாமவர்
அப்படியானால், அந்த எக்ஸ் என்னவென்று சொல்லுங்கள்.
முதலாமவர்
(சிரித்து) ஆகா.. உனக்குத் தெரியாதுல்ல… உனக்கு நான் ஏன் சொல்ல வேண்டும்.?
இரண்டாமவர்
அதாவது.. உனக்குத் தெரியாது. (அமைதி. செய்தித் தாளைப் படிக்க ஆரம்பிக்கிறார். பாஷ்யம் வர, அவர்கள் எழுந்து நிற்கவில்லை. இம்முறை பாஷ்யம் கீழே உட்காருகிறார்)
பாஷ்யம்
உங்கள் பொறுமை முடிந்து விட்டதா..?
முதலாமவர்
உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். எனக்கு வரதட்சணையில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.
இரண்டாமவர்
வரதட்சணை சமூகத்தில் படிந்துள்ள களங்கம்.
முதலாமவர்
அது ஒரு கதற வைக்கும் அவமானம்.
இரண்டாமவர்
சங்கர் நீராவை திருமணம் செய்யப் போகும் முடிவு குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி தானே..
நீரா இல்லை மீரா..
முதலாமவர்
இல்லை…  அது நீராதான்
பாஷ்யம்
ஓ.. அப்படியா.. சங்கர் தீர்மானம் தானே செய்துள்ளான். இன்னும் அவன் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து விடவில்லையே.. அவனது தீர்மானம் என்பது ஒன்றும் இல்லை. கடைசியில் முடிவு செய்ய வேண்டியது நான்  தான்.
இரண்டாமவர்
ஓ.. அப்படியா..? ஒன்றரை லட்சம்..
முதலாமவர்
என்னை மன்னிக்கவும்.. தப்பிதமாகச் சொல்லி விட்டேன். வரதட்சணையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒன்னே முக்கால் லட்சம். ( கடிகாரம் எட்டு அடிக்கிறது)
பாஷ்யம்
நான் இரவு உணவுக்காகப் போகிறேன். உங்களுக்குள் முடிவுசெய்து வையுங்கள்.
(அவர் உள்ளே போக.. இருள். திரும்பவும் ஒன்பது அடிக்கிறது. வெளிச்சம். அவர்கள் அப்படியே உள்ளனர்)
இரண்டாமவர்
இரண்டே கால் லட்சம்.
முதலாமவர்
இரண்டரை லட்சம்.
இரண்டாமவர்
இரண்டே முக்கால் லட்சம்
முதலாமவர்
மூன்று லட்சம்
(விளக்குகள் இல்லை. கடிகாரம் பத்தடிக்கிறது. வெளிச்சம்)
இரண்டாமவர்
இங்கே பாரு.. நீயொரு கஞ்சன். உன்னோடு பொறுமையா பேசிக் கொண்டிருக்க முடியாது. மெதுவாப் போறது நமக்குப் பிடிக்கல. பாஷ்யம் வரும்வரை காத்திருப்பேன்.
முதலாமவர்
சரி பார்ப்போம். நான் சொல்லப் போற தொகையப் பார்த்து உனக்கு மாரடைப்பு வரப் போகுதா இல்லையான்னு பாரு. ( பாஷ்யம் வருகிறார்)
பாஷ்யம்
ஆக என்ன முடிவானது?
முதலாமவர்
ஐந்து லட்சம்
இரண்டாமவர்
எட்டு லட்சம்
முதலாமவர்
( முடிவாகி விட்டது என்று அறிந்து) நான் வருகிறேன்.. எனக்கு ரொம்ப நேரமாகி விட்டது.        ( அவன் போக சுதாங்கன் வருகிறான். அவர்கள் அவனைப் பார்க்கவில்லை)
இரண்டாமவர்
நீங்கள் விரும்பினால் இப்போது காசோலை எழுதித் தருகிறேன். (செக் புத்தகம் எடுத்து எழுதத் தொடங்குகிறார்)
சுதாங்கன்
ஜெயிக்கப் போவது எக்ஸ் தான்.
பாஷ்யம்
சரியாகச் சொன்னாய்.. நான் நினைத்தது போலவே போலவே..
இரண்டாமவர்
ஆனால் இங்கே என்ன நடக்கிறது.
முதலாமவர்
நாம் இங்கே சங்கரின் திருமணத்தை முடிவு செய்கிறோம்
சுதாங்கன்.
சங்கரின் திருமணமா..? (சிரிக்கிறான்) இன்று மாலை தான் அவனது திருமணம் நடந்து விட்டதே. அந்த விழாவில் இருந்துதான் நான் வருகிறேன். பானங்களும் சாப்பாடும் அருமையாக இருந்தன.
பாஷ்யம்
யாரைத் திருமணம் செய்தான். மீராவையா..?
இரண்டாமவர்
இல்லை.. அது நீராவாகத் தான் இருக்கும். ( செக் மீது கண்ணீர் விடுகிறான்)
சுதாங்கன்
மீராவும் இல்லை நீராவும் இல்லை. அவன் மணந்து கொண்டது ஹீராவை..
இரண்டாமவர்
எனக்கு நேரமாகி விட்டது. நான் வருகிறேன்
பாஷ்யம்
எனக்கு அப்பொழுதே தெரியும். ஜெயிக்கப் போவது யாரென்று..? ( உள்ளே போகிறார்)
இரண்டாமவர்
( வெளியே போய்த் திரும்பி வந்து) அந்த எக்ஸ் என்பது ஹீராவின் புனைபெயரா,,? ( சுதாங்கன் சிரிக்கிறான்,, அவன் போதையில் குதிரையின் மீது நடக்கிறான்.)
இரண்டாமவர்
இப்பொழுது எனக்குத் தெரியும். ஜெயிப்பது எந்தக் குதிரையென்று.. ( அவன் வெளியேறுகிறான், சுதாங்கன் காசோலையின் மீதிருந்த கண்ணீர்த் துளிகளைத் தட்டுகிறான்)
சுதாங்கன்
எட்டு லட்சம் .. சங்கர் என்ன மாதிரியான ஆள்.. முட்டாள்.. நான் அப்படி இருக்க மாட்டேன்.. எனக்கு எட்டு லட்சம் வேண்டும்.. காதல் எல்லாம் நமக்கு வேண்டாம்.. எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கையும் இல்லை.
அப்படியே உறைந்து நிற்க குரல் மட்டும் வருகிறது. அரங்கத்தை இருள் சூழ்கிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்