துறையும் பல்கலைக்கழகமும் - சில நினைவுகள்


தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: 


பல்கலைக்கழகங்களின் தகுதிமதிப்பீட்டைப் பரிசீலனை செய்து தரமதிப்பீட்டை உருவாக்கும்- NAAC- நோக்கத்தோடு தேசியத் தரமதிப்பீட்டுக்குழு பல்கலைக்கழகத்திற்கு வருகைதர உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வருவார்கள். அவர்கள் வரும்போது ஒவ்வொரு துறையும் தங்களின் சிறப்புக்கூறுகளையும் செயல்பாடுகளையும் ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும்.

இப்போது வருவது மூன்றாவது வருகை. 2012 முதல் 2017 காலத்தை மதிப்பிடுவார்கள்.. இதற்குமுன் வந்த போதெல்லாம் துறை நடத்திய கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் முன்வைப்போம். எழுத்தாளர்களை வகை பிரித்துப் பட்டியலிடுவோம். இந்தப் பட்டியலில் இருக்கும் எழுத்தாளர்கள் மற்ற பல்கலைக் கழகஙக்ளுக்குப் போயிருக்க வாய்ப்புகள் குறைவு. 20 ஆண்டுகளில் 100 -க்கும் அதிகமான எழுத்தாளர்கள் எனப் பட்டியல் காட்டுகிறது. இவ்வளவு கவிகளும் புனைகதையாளர்களும் செயல்பாட்டாளர்களும் கல்விப்புலப் பேராசிரியர்களும் துறைக்கு வந்து போயிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தோப்பில் முகம்மது மீரான், பூமணி போன்றவர்கள் சாகித்திய அகாடெமி விருதுபெற்றபோது கருத்தரங்குகள் நடத்திக் கொண்டாடியிருக்கிறது. எழுத்தாளர் கி.ரா.வுக்குப் பேரா.சுந்தரனார் விருது அளித்துப் பெருமைப் பட்டுக்கொண்டது. சுந்தரராமசாமியின் எழுத்துகள் குறித்தொரு கருத்தரங்கையும் நடத்தியிருக்கிறது துறை. தொ.மு.சி., தி.க.சி.,போன்ற மூத்த திறனாய்வாளர்களும் ந.முத்துமோகன், தமிழவன், ஞாநி, ரவிக்குமார், ராஜ்கௌதமன், ப்ரேம், க;பஞ்சாங்கம், அழகரசன், க.பூரணச்சந்திரன், தி.சு.நடராசன், அ.மார்க்ஸ், பொ. வேலுசாமி, ந.முருகேசபாண்டியன், ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற திறனாய்வாளகளும் ஓரிருமுறை வந்திருக்கிறார்கள், கலாப்ரியா, இமையம், ஜெயமோகன், சோ.தர்மன், பா. செயப்பிரகாசம், தோப்பில் முகம்மது மீரான் முதலானவர்கள் இரண்டு மூன்றுமுறையாவது வந்திருக்கக்கூடும். தமிழ்ச்செல்வன், கோணங்கி, பெருமாள் முருகன், ஜெ.பி.சாணக்கியா, குமாரசெல்வா, முருகவேள், ஏக்நாத், செல்லமுத்து குப்புசாமி, சந்திரா, நாறும்பூநாதன் போன்றவர்களும் வந்தார்கள்.

விக்கிரமாதித்தியன் தொடங்கி யவனிகா ஸ்ரீராம், பழமலய், ஹெச். ஜி. ரசூல், சுகுமாரன், யுவன் சந்திரசேகர்,அறிவுமதி, இன்குலாப், பாலா, கனல் மைந்தன், சிபிச்செல்வன், சல்மா, சுகிர்தராணி, தமிழச்சி, சக்தி ஜோதி, உமா மகேஸ்வரி, என்.டி.ராஜ்குமார், யாழன் ஆதி, போகன் சங்கர், சமயவேல் எனக் கவிகள் பலரும் வந்தார்கள்; சென்றார்கள். , தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்சு எனப் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். வில்வரத்தினம், சேரன், மௌனகுரு, சோபா ஷக்தி, பால. சுகுமார், அ.சிதம்பரநாதன்  போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

புதிய நோக்கில் எழுதக்கூடிய பேரா.அ. அ. மணவாளன்,பேரா.தி.சு.நடராசன், பேரா. மருதநாயகம், பேரா.துரை சீனிச்சாமி, பேரா. ம.திருமலை, பேரா. இ. முத்தையா, பேரா. பக்தவச்சல பாரதி, பேரா. ஆ. செல்லப்பெருமாள், பேரா. செ.சாரதாம்பாள், பேரா. ஆ. ஆலிஸ், பேரா. ஆ. திருநாகலிங்கம், பேரா. ஆனந்தகுமார்,  பேரா.இரா.ஜெயராமன், பேரா. வீ. அரசு போன்றவர்களுடன் புதிய தலைமை முறைக்கல்வியாளர்களான பாண்டிச்சேரி பாரவிக்குமார்,பழனிவேலு, சம்பத், ய.மணிகண்டன் போன்றவர்களும் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசித்திருக்கிறார்கள். நாடகத்துறையில் அறியப்பட்ட பேரா.சே.ராமானுஜம், பேரா.மு.ராமசுவாமி, செ.ரவீந்திரன், பார்த்திபராஜா, ம.ஜீவா, சிபு எஸ்.கொட்டாரம் போன்றோர் பங்கெடுத்திருக்கிறார்கள்.மொழி, கணினிப் பயன்பாடு குறித்துப் பேசும் பத்ரி சேஷாத்ரி, ஆழி. செந்தில்நாதன் போன்றோரோடு மொழியில் புலத்திலிருந்து முனைவர் எல். ராமமூர்த்தி, இளங்கோவன் போன்றோரும் வந்ததுண்டு. ஓவியா, அருள்மொழி, கமலி, இரா.பிரேமா, அரங்கமல்லிகா போன்ற பெண்ணியச் சொல்லாடல்காரர்களும் அழைக்கப்பட்டதுண்டு.

மற்ற பல்கலைக் கழகங்களின் துறைகள் இப்படிப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. எம் துறையின் பாடத்திட்டக்குழுவில் பிரபஞ்சன், கார்மெல், காலச்சுவடு கண்ணன், தோப்பில் முகம்மது மீரான் போன்றவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். பின்னை நவீனத்துவம், பெண்ணியம், அமைப்பியல், தலித்தியம், பண்பாட்டு ஆய்வுகள், திறனாய்வுப் போக்குகள், புனைகதைப்போக்குகள், கோட்பாடுகளும் இலக்கியமும், கவிதையின் செல்நெறிகள்,புலம் பெயர் இலக்கியம், புனைகதைப் பார்வைகள், ஆராய்ச்சி நெறிமுறைகள், அணுகுமுறைகள் என ஒவ்வொரு வகையிலும் எழுத்தாளர்களும் திறனாய்வாளர்களும் தொடர்ச்சியாகப் பங்கேற்றுள்ளனர். இதனைத் துறை தொடங்கிய 1997 முதல் தொடர்ச்சியாகச் செய்து நவீனத்தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடைய துறை என அடையாளப்படுத்தியிருக்கிறோம். இந்த அடையாளம் உருவாக எனது இருப்பு ஒரு காரணம்.

இந்த அடையாளத்திற்கு இணையாகப் பண்பாட்டுப் பொருட்கள் சேகரிப்பையும் நடத்தி வந்தோம். பொருட்களை நிரல்படுத்தத் தனியிடம் தேவை என்ற காரணத்தால் கூடுதலாகக் காட்சிப்படுத்தல் இயலாமல் இருந்தது. இந்த முறை இதனோடு புதிதாகச் சேகரித்துள்ள ஆவணக்காப்பகப் பொருள்களை முன்வைக்கப் போகிறோம்.எம் துறையில் பண்பாட்டாய்வுகளை நெறிப்படுத்தும் பேரா.ஸ்டீபன் இதற்கு முதன்மையான காரணம்.

கருத்துகளுக்கும் கருத்தியல்களுக்கும் கிடைக்கும் மதிப்புகளை விடப் பழம்பொருட்களுக்கு மதிப்பு கூடுதல் உண்டு என்பது நடப்பியல் உண்மை.வரப்போகும் தேசியத் தரமதிப்பீட்டுக்குழு -NAAC- தரப்போகும் புள்ளிகள் துறையின் வளர்ச்சிக்கு உதவலாம்.


வெள்ளிவிழாக் கொண்டாடிய எமது பல்கலைக்கழகம்

நேற்று (19-07-2015) ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளாக இல்லாமல் வேலைநாளாகிவிட்டது. நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தனது 25 ஆண்டுவிழாவை - வெள்ளிவிழா நிகழ்வை இந்த ஓய்வு நாளில் தான் கொண்டாடியது. தமிழக மக்களுக்காக ஓய்வு ஒளிச்சலின்றிப் பணியாற்றும் அமைச்சர்களுக்கு ஓய்வு நாட்களே இல்லை என்பதைப் புரிந்து கொண்டதால் விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன்.
1990 செப்டம்பர் 7 ஆம் தேதியில் சட்டப்படி தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்திற்குக் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே வெள்ளிவிழா ஆண்டு தொடங்கிவிட்டது. என்றாலும் அதன் தொடக்கவிழா நிகழ்வு நேற்றுதான் நடந்தது. காரணங்கள் பலப்பல. அதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் உள்ளரசியல் சொல்லாடல்களாகவும் வெளியரசியல் நெருக்கடிகளாகவும் மாறிவிடும்.
இந்தப் பல்கலைக்கழகத்தோடு எனது தொடர்புக்கு வயது 18 ஆண்டுகள் . 1997 பிப்பிரவரி 14 இல் தமிழியல் துறையின் இணைப்பேராசிரியராக இணைந்த நான் 2 ஆண்டுகள் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்குப் போய்விட்டேன். இங்கிருந்த காலம் 16 ஆண்டுகள். இப்போது இந்தப் பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர்களில் ஒருவன். இந்தப் பல்கலைக் கழகத்தின் பலவிதச் செயல்பாடுகளில் - பொறுப்புகளில் - இருந்தவன் அதன் ஏற்ற இறக்கங்களை அறிந்துள்ளேன். என்னைவிடவும் மூத்த உறுப்பினர்கள் இங்கே இருக்கிறார்கள். தங்கள் வாழ்வின் கால் நூற்றாண்டு வாழ்க்கையை இதன் சுகதுக்கங்களில் இணைத்துக் கொண்ட ஆசிரியர்களும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் இதன் இயக்கம் என்னவகையான நினைவுகளை உண்டாக்கியிருக்கும் என்று கேட்கவேண்டும்; பதிவு செய்ய வேண்டும். அதனை நேற்று நடந்து விழாவில் தவற விட்டுவிட்டார்கள். இங்கிருந்து ஓய்வுபெற்றுப் போனவர்கள், முன்னாள் மாணவர்கள், வளர்ச்சியில் பங்கெடுத்த துணைவேந்தர்கள், அதிகாரிகளென ஒருவரும் பங்கெடுக்காமல் வந்துபோகும் மனிதர்களால் நிரம்பியிருந்த நேற்றைய நிகழ்வை ஒரு பகல்கனவாக நினைத்து மறந்துவிடவே விரும்புகிறேன். இதனை வைகறைக்கனவாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. பகலில் கண்ட கனவு.
என்னை இலக்கியமாணவனாக உருவாக்கிய அமெரிக்கன் கல்லூரியின் 125 ஆம் ஆண்டுவிழாச் சிறப்பு மலரில் அலையும் நினைவுகளை எழுதியது நினைவுக்கு வருகிறது. மதுரைப் பல்கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு(பொன்) விழாக் கருத்தரங்கில் கட்டுரை வாசித்த நினைவும் வந்துபோகிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் தந்த நினைவுப்பரிசு இன்னும் இருக்கிறது. வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை ஆரம்பிக்கப்பட்ட 80 ஆவது ஆண்டு நிகழ்வின் நினைவும், தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்ட 40 ஆவது ஆண்டுவிழாக் கருத்தரங்கில் நான் வாசித்த கட்டுரை அடங்கிய தொகுப்பும் என்னிடம் இருக்கின்றன. ஆனால் எனது 16 ஆண்டுகளைத் தின்று தீர்த்த இந்தப் பல்கலைக்கழகம் வெள்ளிவிழா நினைவாக எதையும் தரவில்லை.

ருஷ்ய எழுத்தின் ஓரடையாளம் மார்க்சிம் கார்க்கி. மொழி பெயர்ப்பில் நான் வாசித்த முதலும் முதன்மையுமான தாய் நாவலின் ஆசிரியன். அந்நாவலை வாசித்தபின் அவனது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன். தாய் நாவலைவிடவும் கூடுதலாக என் மனதில் தங்கியிருப்பது அவன் எழுதிய “ யான் பயின்ற கல்வி நிறுவனங்கள்” என்ற நூல். ஆய்வுமுடித்து அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகப் பணியேற்றபோது எடுத்த ஒரு முடிவு ஒன்று உண்டு. நானும் கார்க்கியைப் போல - “ யான் பயின்ற கல்வி நிறுவனங்கள்” என்றொரு நூலை எழுதவேண்டும் என்பது அந்த முடிவு. ஆனால் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறை எனச் சுற்றிவிட்டுத் திரும்பவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என வந்துவிட்ட போது எழுத நினைத்துள்ள அந்த நூலின் பொருள் “ கல்விநிறுவனங்களும் நானும்” என்பதாக மாறிவிட்டது.

பொருளும் தலைப்பும் மாறியதால் எழுதத் தொடங்கும் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்தேன். இன்னும் 4 ஆண்டுகளில் பணி ஓய்வுக்குப் பின் முக்கியமான வேலை அது எனக் கணக்கு. அந்தக் கணக்கை நேற்றைய பகல் கனவு கலைத்துவிட்டது. நாளை முதலே எழுதத்தொடங்கிவிடச் சொல்கிறது. பெருமையாக நினைத்துப் பேசிக்கொள்ள ஏதாவது இருக்கும்போதே எழுத முடித்துவிடு எனச் சொல்கிறது. இப்போது எழுதத்தொடங்கினால் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் உயிர்ப்புமிக்க கல்வித்துறையின் துன்பியல் கதையொன்று கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்கிறது மனம். இன்னும் தள்ளிப்போனால் அபத்தங்களால் நிரம்பிய அர்த்தமற்ற புலம்பல்களால் நிரம்பி வழியும் எழுத்துக்குவியல்களே மிஞ்சும் என்பது மனம் சொல்லும் எச்சரிக்கையின் தொடர்ச்சி.
தேவை துன்பியல் கதையா? அபத்த நாடகத்தின் குறியீடுகளா? இதை முடிவு செய்துவிட்டால் எழுதுவதும் உறுதியாகிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்