தமிழ்கற்பிக்க ஒருகனவுநிறுவனம்.



வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையிலிருந்து திரும்பி வந்து ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. 2011 அக்டோபரில் போலந்தில் இந்தியவியல் துறை தொடங்கப்பெற்ற 80 -வது ஆண்டு விழா கொண்டாடப்பெற்றது. அதிலும் கலந்து கொண்டேன். நான் திரும்புவதற்கு மூன்று மாதம் முன்பு 2013- ஆம் ஆண்டு ஏப்ரலில் தமிழ்ப் பிரிவுக்கான 40 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பெற்றது. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் இருப்பது போல இந்தியவியல் துறைகள் உலகநாடுகள் பலவற்றில் இயங்குகின்றன.
இந்தியாவைத் தாண்டி தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தங்கள் நாட்டுத் தமிழர்களுக்காகத் தமிழ்த்துறைகளை நடத்துகின்றன. அவையெல்லாம் இந்தியவியல் துறைகள் அல்ல. நம்மூரில் இருப்பது போலத் தமிழ்த்துறைகள். ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ஜெர்மன், ருஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவீடன் போன்ற நாடுகளில் இருக்கும் ஒருசில பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் துறைகள் இருக்கின்றன.
இந்தியவியல் துறைகளின் ஒரு பகுதியாகத் தமிழ் மொழியும், இலக்கியங்களும் கற்றுத் தரப்படுகின்றன. அங்கெல்லாம் முழுநேரத்தமிழ்ப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த நாடுகளுக்குச் செல்லும் நபர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கும் இருக்கிறது. ஆனால் வார்சாவிற்கு மட்டும் இந்திய அரசாங்கத்தின் பண்பாட்டு அமைச்சகம் விருந்துநிலைப் பேராசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. அத்தகைய விருந்துநிலைப் பேராசிரியராகவே நான் வார்சா போயிருந்தேன். இப்போது எனது பயணம் பற்றிப் பேசி முடித்துவிட்டேன். இப்போது நான் பேசநினைப்பது இந்தியவியல் துறைகள் ஏன் அயல் தேசங்களில் மட்டும் இருக்கவேண்டும் என்ற கேள்வியோடு தமிழ் வளர்ச்சி பற்றிச் சில ஐயங்களையும் எழுப்ப விரும்புகிறேன். ஒரு கனவு நிறுவனம் வேண்டும் எனச் சொல்லி முடிக்க விரும்புகிறேன்.



அயல்தேசங்களில் இருக்கும் இந்தியவியல் துறைகள் பெரும்பாலும் தென்னாசியவில் படிப்பு (SOUTH ASIAN STUDIES)அல்லது தென்கிழக்காசியவியல் படிப்பு (SOUTH EAST ASIAN STUDIES) என்ற பிரிவின் கீழ் செயல்படுகின்றன. அங்குக் கற்பிக்கப்படும் படிப்பு வெறும் மொழிக்கல்வி மட்டும் அல்ல என்பதைச் சொல்ல வேண்டும். இந்தியவியல் துறையில் சேரும் ஒரு மாணவிக்கு அல்லது மாணவனுக்கு இந்தியப் பொதுமனத்தைப் புரிந்து கொள்ள உதவும் அரசியல், சமுதாய, பண்பாட்டு வரலாறுகள் அடங்கிய இந்திய வரலாற்றைக் கற்றுத்தருகிறார்கள். அதே போல் இந்திய மதங்களைப் பற்றியும் இந்திய தத்துவ மரபு பற்றியும் தாள்கள் உள்ளன. இவற்றுக்கப்பால் தான் மொழிக்கல்வியும் இலக்கியக்கல்வியும் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை அவர்களின் தாய்மொழி வழியாகக் கற்பிக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. தமிழ் இலக்கணம் கூட போல்ஸ்கி வழியாகவே கற்பிக்கப்படுகிறது. பேச்சுமொழி மட்டுமே வருகைதரு பேராசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன.
 
இந்தியவியல் புலத்திற்குள் தமிழ்ப்படிப்பை விருப்பமாகத் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்குக் கூடுதலாகத் தமிழின் மொழி, இலக்கிய, அரசியல் வரலாறுகளோடு பேச்சுத்தமிழும் அதன் பன்முகத்தன்மையும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அதனூடாக நிகழ்காலத்தில் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் அடைந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஓரளவு கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்ள வேண்டும் என மிகுந்த ஆர்வத்தைக் காட்டும் மாணாக்கர்கள் முழுமையாகக் கற்றுத் தேர்கிறார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அப்படியான நோக்கம் அந்தப் பாடத்திட்டங்களிலும், கற்பிக்கும் முறையிலும் இருக்கின்றன.
 
வார்சா போவதற்கு முந்திய 25 வருட ஆசிரியப் பணியில் ஏழரை ஆண்டுகள் புதுச்சேரியில் நாடகத்துறை ஆசிரியனாக இருந்தேன். அங்கு உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்திலும் இப்படியான ஒருங்கிணைப்புத் தன்மை இருந்ததைக் கவனித்திருக்கிறேன்.. புதுவை நாடகப்பள்ளி ஆசிரியர்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைப்புடன் கற்றுத்தராத போதும் அங்கிருந்து நாடக ஆசிரியர்களும், விமரிசகர்களும் சங்கீத் நாடக அகாடெமியின் விருது பெற்ற நாடகக் கலைஞர்களும் உருவாகியிருக்கிறார்கள். இந்தியாவெங்கும் இருக்கும் நாடகத்துறைகளுக்கான ஆசிரியர்களும் கிடைத்திருக்கிறார்கள். அப்படியானவர்கள் உருவாகக் காரணம் நாடகப்பள்ளியின் பாடத்திட்டமே. ஆனால் பதினேழு ஆண்டுகளாகத் தமிழ் கற்பிக்கும் நான் அப்படியான பெயர்கள் எதையும் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இத்தனைக்கும் தமிழ்க் கல்விக்கான இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களை உருவாக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறேன். அங்கெல்லாம் ஒருங்கிணைப்புத் தன்மையோடு கூடிய பாடங்களை உருவாக்கும் முறையைப் பற்றிய விவாதத்திற்கே வழி ஏற்பட்டதில்லை .
 
தன்னாட்சித் தன்மை கொண்ட பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் கூட தமிழின் இலக்கிய, பண்பாட்டுப்போக்குகளைக் குறித்த சொல்லாடல்களையும் கருத்தோட்டங்களையும் விவாதிக்கும் வகையிலான பாடத்திட்டங்களை உருவாக்கவோ, கற்பிக்கும்படி தூண்டவோ முடியவில்லை. இத்தனைக்கும் பல்கலைக்கழகத்தின் உயர்ந்த நிலையான துறைத்தலைவர், மொழிப்புல முதன்மையர் போன்ற உச்சபட்சப் பதவிகளில் இருந்தவன் நான். எனக்கே இது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் அதன் பின்னணிக் காரணங்கள் பலவிதமானவை. காரணங்கள் பல்கலைக்கழகங்களுக்குள்ளேயும் பாடத்திட்டங்களிலும், கற்பிக்கும் முறையிலும் மட்டுமே இருப்பதாகவும் சொல்ல முடியாது.
 

கல்விப் புலத்தில் மொழி இலக்கியப் பாடங்களை தகவல்கள் நிரம்பிய பிரதிகளாகக் கருதும்போக்கு நிலவுகிறது. முதலில் அது மாற்றப்பட வேண்டும். அப்படியொரு எண்ணம் – கருத்து உருவாகக் கல்விப் புலம் மட்டுமே காரணமல்ல. அரசியல் இயக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் அதனதன் அளவில் பங்குண்டு. திராவிட இயக்கங்கள் பண்பாட்டு நடவடிக்கைகளை அரசியல் நடவடிக்கைகளாக மாற்றும் போக்கில் தொடங்கி வைத்த இந்தப் பார்வையைப் பின்னர் பொதுவுடமை இயக்கக் கலை இலக்கிய அமைப்புகளும் விலகாமல் தொடர்கின்றன. அவற்றின் நீட்சியாகத் தலித் இயக்கங்களும் விலகாமல் பயணிக்கின்றன.
 
இலக்கியப் புரிதல் பற்றிய இந்த மாற்றத்தை இப்போது பணியாற்றும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டு உருவாக்க நினைப்பது பரிதாபமான முயற்சி என்பதை நானறிவேன். ஓர் இலக்கியப் பிரதிக்குள் இருக்கும் தகவல்களைக் கண்டு சொல்லும் வேலையைக் கூட அவர்களாகச் செய்யாமல், முன்னோர் கண்டு சொல்லியபடி சொல்லும் கிளிப்பிள்ளைகளாக வளர்ந்துள்ளவர்கள் அவர்கள். பல கல்லூரிகளில் தங்கள் ஆசிரியர் கொடுத்த குறிப்புகளையே இன்னும் பொக்கிஷமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடத்தில் மொழி மற்றும் இலக்கியத்தின் வடிவத்திற்குள் கட்டமைக்கப்பட்ட படிமங்களும் அதன் வழிப் பயணம் செய்யும் மனித மனங்களும் மிதந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்லிப் புரியவைப்பது எளிய காரியமன்று. அப்படியானால் என்ன என்ன செய்யலாம்? புதிய நிறுவனங்களையும் புதிய மனிதர்களையும் தான் இதற்கு நாட வேண்டும்.
 
இந்த நிலையில் தான் இந்தியாவில் – தமிழகத்தில் – இந்தியவியல் துறைகளைத் தொடங்கும் யோசனையை முன் வைக்கிறேன்.. நமக்கு நாமே பெருமை பாராட்டிக் கொள்வதால் தமிழ் வளர்ந்து விடாது. தமிழின் வளர்ச்சி என்பது அதன் இலக்கண, இலக்கியத்தைப் புத்தாக்கம் செய்வதோடு முடிந்து போவதில்லை. தமிழின் பாரம்பரியத்தையும் வளத்தையும், அடைந்துள்ள மாற்றங்களையும் நவீனப்போக்கையும், இவற்றிலெல்லாம் செயல்பட்ட ஆளுமைகளையும் உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் கொண்டு செல்ல வேண்டும். இதனை நமது அரசுகள் முதலில் உணர வேண்டும்; ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை பேராசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இருக்கிறது.
 

நான் சொல்வதை மட்டும் வைத்துக் கொண்டு கனவு நிறுவனத்தை அமைத்திட வேண்டுமெனச் சொல்லவில்லை வெளிநாடுகள் சிலவற்றிற்கு குழுக்கள் செல்ல வேண்டும். அக்குழுக்களில் தமிழ் மொழி, இலக்கிய அறிஞர்கள் மட்டுமல்லாமல் கலை இலக்கியத்துறையில் முக்கியமான பங்களிப்புச் செய்துள்ள மூத்த எழுத்தாளர்களையும் இளைய எழுத்தாளர்களையும் அனுப்ப வேண்டும். அரசு அதிகாரிகளும் போக வேண்டும். அப்படிச் செல்லும் குழுக்களில் ஒன்றைக் கட்டாயம் போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவுக்கும் அனுப்ப வேண்டும். அங்கே போலந்து நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். ஜெயகாந்தன் பற்றி முனைவர் பட்டத்தை முடித்துள்ளார். போலிஷ், ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளும் அவருக்கு அத்துபடி. சமஸ்கிருதமும் கூட அவருக்குத் தெரியும். தமிழ் பயிலும் மாணவ மாணவிகள் பத்துபேர் இருக்கிறார்கள். அவர்களும் உடன் வருவார்கள். இந்தியவியல் துறையில் இந்தி, வங்காளம், பஞ்சாபி என இந்திய மொழிகள் தெரிந்த போலிஷ் ஆசிரியர்களும் மாணவர்களும் கூட இருக்கிறார்கள்.
போலந்து நாட்டு அறிவுசார் மண்டலத்தைத் தேடி வேறு எங்கும் போக வேண்டியதில்லை. வார்சா பல்கலைக்கழகமே ஓர் அறிவுமண்டலம் தான். இந்தியாவில் இருக்கும் எல்லாப் பல்கலைக்கழகங்களையும் விட வயதில் மூத்தது. 1816 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் இருக்கும் பல்கலைக் கழகங்களில் பெருமைமிகுந்தது. எல்லாப் பாடங்களும் போலிஷ் மொழியில் தான் கற்றுத்தரப்படுகின்றன. தேவை கருதிச் சில பாடங்களை ஆங்கிலம் வழியாகவும் படிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழிக்கல்வியை உள்ளடக்கியுள்ள தென்ஆசியவியல் புலத்திற்குள்ளேயே இந்தியவியல், ஜப்பானியவியல், தென்கிழக்காசியவியல் (சீனம், கொரியா, வியட்நாம், மலேசியா, மியான்மார், தாய்லாந்து) அரேபியவியல் (துருக்கி, ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான்) படிப்புகளில் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாறு பற்றிய பாடங்கள் கற்றுத் தாப்படுகின்றன. மொழிக்கல்வியை வெறும் மொழிக்கல்வியாகப் பார்க்காமல் கலை, இலக்கியம், மெய்யியல், வரலாறு, பண்பாடு பற்றிய கல்வியின் பகுதியாகக் கற்றுத் தருகிறார்கள். எல்லாத் துறைகளுக்குமான பொது நூலகம் விரிந்து பரந்து கிடக்க, ஒவ்வொரு துறையும் தங்களுக்கான சிறப்பு நூல்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கும் துறை நூலகங்களும் இருக்கின்றன. இந்தியவியல் துறையில் இருக்கும் இந்தியாவைப் பற்றிய நூல்கள் பலவற்றை நான் அங்கு பார்த்திருக்கிறேன். பழையதும் புதியனவுமாக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மரஅடுக்குகள் ஒவ்வொரு வகுப்பறையின் மதில்களாக இருக்கின்றன. தேவைப்பட்டால் நகர்த்திக் கொண்டு பெரிய அறைகளாக அவற்றை மாற்றிக் கொள்ளும் வசதியோடு இயங்குகின்றன. இவற்றையெல்லாம் அறிவுசார் மண்டலமாக - கனவு நிறுவனமாக ஒன்றை அமைக்கப் போகும் குழு பார்க்க வேண்டும்.
தமிழின் திறமான வளர்ச்சி சாத்தியமாக வேண்டுமென்றால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் இந்தியவியல் துறைகளைப் போன்ற அமைப்புடைய – நோக்கங்கள் கொண்ட- புலங்களைத் தமிழ்நாட்டிலேயே தொடங்க வேண்டும். அவற்றை எல்லாப்பல்கலைக்கழகங்களிலும் தொடங்குவதைவிடத் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் அல்லது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் போன்ற சிறப்பு நிறுவனங்களில் தொடங்கவேண்டும். அவற்றில் சேர்வதற்குக் கடும் போட்டி நிலவும் வகையில் உதவித் தொகைகளை அந்நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதற்கான நிதியாதாரங்களை மைய மாநில அரசுகள் உருவாக்கித் தர வேண்டும். தொடங்கப் போகும் இந்தியவியல் துறைகளில் பணியாற்றத் தேவையான ஆசிரியர்களை இப்போது உலகெங்கும் உள்ள இந்தியவியல் துறைகளிலிருந்து அதிகச் சம்பளம் கொடுத்துக் கடன் வாங்கியாக வேண்டும். நிரந்தரமாகவும் குறுகிய காலத்திற்கும் ஆசிரியர்களைக் கடன் பெற்றே அந்த மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மொழியைப் பத்துப் பேருக்குக் கற்றுக் கொடுக்க வளர்ந்து கொண்டிருக்கும் போலந்து நாடு செலவழிக்கும் தொகையைப் போல ஒரு தொகையைப் போல்ஸ்கி கற்றுக் கொள்ள நாம் ஏன் செலவழிக்கக் கூடாது?.
 
போலந்து நாட்டு வார்சாப் பல்கலைக்கழகத்து இந்தியவியல் துறை என்பது ஒரு மாதிரி மட்டும்தான். நமக்கு ஏராளமான அயல்படிப்புத்துறைகள் தேவைப்படுகின்றன. தமிழ்-இந்திய மொழிகளுக்குள் மட்டும் போதாது என நினைக்கும் போது இயல்பாகவே ஆசியவியல் துறைகளையும், ஐரோப்பிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க, மத்தியகிழக்கு நாடுகளுக்கான படிப்புகளையும் தொடங்க வேண்டும் என்ற தேவை உருவாகும். ஏனென்றால் உலகமயமாகி விட்ட இன்றைய சூழலில் ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டாக வேண்டும். அப்போது தான் தமிழர்கள் வெறும் சேவைப் பணியாளர்களாக இல்லாமல், மூலதன உற்பத்தியைக் கையாள்பவர்களாகச் சீனத்துக்கும், ஜப்பானுக்கும் பிரேசிலுக்கும், ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் போக முடியும். இவை எல்லாவற்றையும் ஆங்கிலம் வழியாகவே நான் கற்றுக் கொள்வேன் என்ற பிடிவாதம் காட்டினால் ஆங்கிலம் மட்டுமே வளர்ச்சி அடைந்த மொழியாக இருக்கும். தமிழின் தனித்துவத்தை –தமிழர்களின் ஆளுமையை உலகிற்குச் சொல்ல முதலில் தேவை அந்தந்த நாடுகளையும் பண்பாட்டையும் நமது மொழியில் சொல்ல நூல்கள் வேண்டும். அதே நேரத்தில் நமது பண்பாட்டையும் இலக்கியத்தையும் பிறமொழிகளில் சொல்லவும் நூல்கள் வேண்டும். இவை இன்று தமிழ் கற்பிக்கப்படும் முறையில் சாத்தியமாகாது ஒன்று என்பதைத் திரும்பத்திரும்பச் சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி / அம்ருதா , ஜனவரி 2015

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்