ஆறு மாதத்தில் தமிழ் நெடுங்கணக்கைக் கற்றுக் கொண்டார்கள்


வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்த அனுபவம் சுகமானது. இங்கிருந்து போன முதல்வருடம் புதிய மாணாக்கர்கள் இல்லை. இரண்டாம் ஆண்டில் 7 பேரும், மூன்றாம் ஆண்டில் 3 பேருமாகப் 10 பேர் தான். அவர்களுக்குப் பேச்சுத் தமிழ் கற்பிப்பதுதான் எனது வேலை. தமிழ் நெடுங்கணக்கு ஏற்கெனவே அவர்களுக்குத் தெரியும் . அதைக் கற்பிக்கும் வாய்ப்பு அந்த வருடம் வாய்க்கவில்லை.

ஆனால் இரண்டாவது வருடம் அந்த வாய்ப்பு கிடைத்தது. முதலாம் ஆண்டு தமிழ்ப் பிரிவில் முதலில் சேர்ந்தவர்கள் 15 பேர். 10 பேர் தான் முதல் பருவம் முடியும்போது தொடர்ந்தார்கள். இப்படி நடப்பது தமிழ்ப் பிரிவில் மட்டுமல்ல. எல்லாப் படிப்பிலும் இப்படித்தான் அங்கே நடக்கும். பாதியிலேயே வேறு பாடங்களுக்குப் போவதும் வேறு பாடங்களில் இருந்து இங்கே வருவதும் முதலாம் ஆண்டில் நடக்கக் கூடியது தான்.


அக்டோபர் தொடங்கி ஜனவரி முடிய நடக்கும் முதல் பருவத்தில் தமிழின் பெயர்ச்சொற்களை ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து வினைச்சொற்களுக்குள் நுழைந்தேன். எழுதிக் காட்ட மொழியியலில் பயன்படும் ஒலியனியல் வடிவ எழுத்துகள் தான். அவை பெரும்பாலும் ரோமன் வரிவடிவங்களும் குறிகளும் கொண்டது. அந்த வடிவத்தில் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து சின்னச் சின்ன வாக்கியங்கள் அறிமுகம் ஆனபின் தமிழ் வரிவடிவத்தை அறிமுகம் செய்தேன். ஒலியனியல் வடிவத்திலிருந்து தமிழ் வரிவடிவத்திற்கு மாறும் போது தொடக்க நிலையில் பெரும் தடுமாற்றங்களைச் சந்தித்தார்கள். எழுதுவதற்குச் சிரமமாக இருந்த அதே நேரத்தில் அவற்றை உச்சரிப்பது அவர்களுக்கு எளிமையாக இருந்தது. காரணம் ஒலியனியல் வடிவில் சொல்லிப் பார்த்த சொற்கள் தான். மூன்றாவது வாரத்தில் ஆரம்பித்த வரிவடிவ அறிமுகம் ஆறாவது வாரத்தில் முழுமையடைந்து விட்டது. ஆறு வாரத்தில் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும் எழுதிப் பழகிக் கொண்டார்கள். அந்தப் பருவம் முடியும் போது சொற்களை எழுத்துக் கூட்டி வாசித்தார்கள்.


வாசிப்புப் பயிற்சி இப்படி என்றால் பேச்சுப் பயிற்சி வேறு வகையானது. முதல் பருவம் முடிவில் சின்னச் சின்னக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொற்களில் பதில் சொல்வார்கள். முதல் வருடம் முடியும்போது சொற்களை சொல்லச் சொல்லத் தமிழ் வரிவடிவத்தில் எழுதிக் காட்டுவார்கள். போலந்தில் மட்டுமல்ல; செக், ப்ரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆஸ்திரேலிய எனப் பல நாடுகளில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள் தமிழைத் தமிழ் நெடுங்கணக்கின் உதவியோடு தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கணிணியில் இருக்கும் யுனிகோட் உதவியில் எழுதவும் செய்கிறார்கள்.


அவர்களிடம் போய் எங்கள் ஊரின் முக்கியமான எழுத்தாளர் தமிழ் வரிவடிவம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்;அதனை ஏற்று உடனடியாக மாற்றி விட்டோம். இனி நீங்கள் தமிழை உரோமன் வரிவடிவத்திலேயே படித்துக் கொள்ளலாம் என்று சொன்னால் என்ன நினைப்பார்கள் என்பதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. காலனியாதிக்கத்திலிருந்து விடுபடவே இல்லை என்பதைத் திரும்பவும் சொல்கிறீர்களா? என்று கேட்பார்கள். ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளின் மொழிகளுக்குப் பொதுத் தன்மைகள் அதிகம் இருந்த போதிலும் தனித்துவத்தைத் தக்க வைப்பதற்காகச் சிறப்பு எழுத்துகளையும், குறியீடுகளையும் ஓசைக்குறிப்புகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. பெயர்களைக் கடன் வாங்கும் அம்மொழிகள் தங்களின் வினைச்சொற்களை தங்கள் மொழியின் வேர்களிலிருந்தே உருவாக்குகின்றன. இன்னொன்றும் சொல்ல வேண்டும்.

வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் படித்தாலும் சரி சமஸ்கிருதம் படித்தாலும் சரி இன்னொரு இந்திய மொழியைப் படித்துத் தான் ஆக வேண்டும். இவையல்லாமல் அவர்களது தேசமொழியான போல்ஸ்கி. அப்புறம் இன்னொரு ஐரோப்பிய மொழி . முந்திய தலைமுறையினர் படித்தது ரஷ்யன். இப்போது ஜெர்மன், பிரெஞ்சு, அல்லது ஆங்கிலம். ஆம் ஆங்கிலம் முதல் விருப்பம் அல்ல. இம்மொழிகளைப் படிப்பதால் அவற்றின் மூல மொழியான லத்தீனும் அதன் வரிவடிவத்திலேயே அறிமுகமாகி விடுகிறது. இந்தியப் பண்பாட்டு அடையாளம்,

-----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியக் கல்விமுறை, இந்திய இலக்கியம் என “ இந்திய” தாகம் கொண்டலைந்த ஜெயமோகனுக்குத் திடீர் என்று எப்படி ஒட்டுமொத்த உலகத்திற்குமான எழுத்து வடிவத்த்தைப் பரிந்துரைக்கும் யோசனை வந்தது? தொடர்ந்து ஆச்சரியங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை தான்.

கருத்துகள்

தங்கமணி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. பொருத்தமான பதிலும் கூட.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்