இந்திரனுக்கு வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது

வானம் அமைப்பு முன்னெடுக்கும் நிகழ்வுகள் அடையாள அரசியலோடு தொடர்புடையது.  அடையாள அரசியலுக்கும்  அவைசார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தற்காலிக நோக்கங்கள் மட்டுமே இருக்கும்; இருக்க வேண்டும். எல்லாவகையான அடையாளங்களும் மறைந்து மைய நீரோட்டத்தில் கலக்கும் நாளுக்காகவே உலகம் காத்திருக்கிறது.  அந்த நாளில் மனிதர்களும் மனித மேன்மையும் மட்டுமே மிஞ்சியிருக்கும். இதொரு கனவு தான். என்றாலும் காணவேண்டிய கனவு.
வானம் அமைப்பு தலித் இலக்கிய ஆளுமைகளுக்கு விருது வழங்கும் அமைப்பு என்பதை  வெளிப்படையாகச் சொல்கிறது. மைய நீரோட்ட அமைப்புகளாகப் பாவனை செய்யும் அமைப்புகள் அதனை மறைத்துக் கொண்டு தங்களின் நலன் சார்ந்த/ குழுக்கள் சார்ந்த/சாதி சார்ந்த ஆளுமைகளுக்கே விருதுகளையும் தகுதிப்பாடுகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. அரசின் அமைப்புகளில் பொறுப்புக்கு வரும் நபர்கள் அவற்றைத் தங்களின்  உரிமையாகக் கருதிக்கொண்டு அங்கேயும் அத்தகைய நிலைமையை உருவாக்கவும் செய்கிறார்கள். இந்தப் பின்னணியில் தான் வானம் அமைப்பின் செயல்பாடுகள் கவனம் பெறுகின்றன.
*****

தமிழ் இலக்கியத்திற்குள் நீண்ட காலமாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்திரனுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான வானம் - வேர்ச்சொல் விருது வழங்கப்படவுள்ளது. விருதுவிழா ஏப்ரல் 20,30 தேதிகளில் நடக்கும் விழாவில் நிறைவு நிகழ்வாக அமையுமென நினைக்கிறேன். கடந்த ஆண்டு இதே தேதிகளில் மதுரையில் நடந்த வானம் - வேர்ச்சொல் விழாவின் இரண்டு நாட்களும் கலந்துகொண்டேன். நிறைவாக அன்று விருதுபெற்ற திறனாய்வாளர் ராஜ்கௌதமன் குறித்த ஒரு மதிப்புரையை அந்த மேடையில் வழங்கினேன். ராஜ்கௌதமன் அறிமுகம் கிடைத்த அதே காலகட்டத்தில் தான் இந்திரனோடும் நேரடி அறிமுகம். இருவரையும் சந்தித்த இடம் புதுச்சேரி. 1990 -களின் தொடக்க ஆண்டுகளில்.  

இந்திரனின் சொந்த ஊர் புதுச்சேரி என்பதால் எப்போதும் அந்த நகரத்திற்கு வந்துபோகிறவராக இருந்தார். வரும்போது கலை, இலக்கியம் சார்ந்த நண்பர்களைச் சந்திக்கிறவராக இருந்தார். சந்திக்குமிடம் பெரும்பாலும் ரவிக்குமாரை மையமிட்ட இடங்களாக இருக்கும். ரவிக்குமார் பணியாற்றிய சிண்டிகேட் வங்கி அல்லது அவரது வீடாகவோ, பாரதி பூங்காவின் அருகில் இருக்கும் வணிக அவை என்னும் கூட்டரங்காகவோ இருக்கும். சென்னையில் நடக்கும் நிகழ்வுகளுக்குப் போகும்போதும் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பைத் தவறவிட்டதில்லை.  புதுச்சேரிக்கு அந்நியனான நான், புதுச்சேரியின் முன் வரலாற்று நிகழ்வுகளை - இடங்களின் முக்கியத்துவத்தை அவர் சொல்லும்போது கேட்டுக்கொள்ளும் ஆர்வத்தோடு இருப்பேன்.

தொடர்ச்சியாகத் தமிழில் செயல்படும் எழுத்தாளர்களையும் செயல்பாடுகளையும் கவனிப்பவராக இருந்தவர்; இப்போது பலரையும் முன்வைப்பவராக மாறியுள்ளார். அவரது கவனப்படுத்துதல் வழியாக எனது வாசிப்பு எல்லைகள் விரிந்துள்ளன. பிறமொழி எழுத்துகளை -எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய குறிப்புகள் வழியாக நடந்த அறிமுகங்கள் ஒருவகை.  நிகழ்காலத் தமிழ் எழுத்தாளர்களில் அவரது கலையியல் பார்வை சார்ந்து முன்வைக்க நினைத்த எழுத்தாளர்களைத் தொடர்ச்சியாக முகநூல் வழியாகச் சொல்லிக்கொண்டே இருப்பார். சில எழுத்தாளர்களைப் போலத் தங்களை அழைக்கும் அமைப்புகளில் கலந்துகொண்டு அவர்கள் தரும் மரியாதையைப் பெற்றுக்கொண்டு, வெளியேறிய உடனே அமைப்புகளைக் குறைசொல்லும் ஆளுமை அல்ல.  சாகித்திய அகாதெமி, பல்கலைக்கழகத்துறைகள் போன்ற அரசுத்துறை அமைப்புகளோடு சேர்ந்து செயல்படுவதில் ஒதுங்கல் மனப்பான்மை காட்டாதவர். குறிப்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து சென்னை எழுத்துகள் பற்றி அவர் நடத்திய கருத்தரங்கு முக்கியமானதொரு நிகழ்வு. பிடித்த எழுத்தாளர்களைப் புகழ்வதில் குறையே வைப்பதில்லை.
இந்திரனின் ஒட்டுமொத்தக் கலை, இலக்கியப்பங்களிப்பிற்காக வானம் - வேர்ச்சொல் விருது வழங்கப்படுகிறது. தகுதியான ஆளுமை. கவி. இந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்து.
********** 
கவி இந்திரனுக்கு மொழிபெயர்ப்புக்கெனச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டபோது எழுதியது:


மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது

உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் எழுதப்படும் கவிதைகளை வாசிப்பதின் வழி யாகத் தமிழ்க் கவிதை மொழியை வளப்படத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு இயங்குபவர் இந்திரன்.அவருக்குச் சாகித்ய அகாடெமி, மொழி பெயர்ப்புக்கான விருதை வழங்கி அங்கீகரித்துள்ளது. விருதுபெற்ற இந்திரனும் விருதை வழங்கிய அகாடெமியின் தேர்வுக் குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நான் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளிக்கு ஆசிரியராகச் சென்றது ஜூலை,1989. கவி இந்திரன் தொகுத்து மொழியாக்கம் செய்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு நூலான – அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்(1982) - வந்த நேரத்திலேயே வாசித்திருந்தேன். ஒரு மொழி பெயர்ப்புக் கவிதை நூலை வாசிக்கும் மனநிலை தோன்றாமல் வாசிக்கக் கூடிய தொகுப்பு. தமிழ்க்கவிதைகளை வாசிப்பது போலவே அக்கவிதைகளை வாசிக்க முடிந்தது. அக்கவிதைகளின் உள்ளடக்கம் தமிழ்க்கவிதைகளின் உள்ளடக்கத்தோடு நெருங்கிய உறவு கொண்டதாக இருந்ததும் கூட தடையற்ற வாசிப்புக்குக் காரணமாக இருக்கலாம். அத்தொகுப்பு வந்த காலத்தில் பெற்ற கவனத்தை விடவும் 1990 களில் தலித் இலக்கிய முயற்சிகள் வீர்யம் பெறத்தொடங்கிய போது அதிகம் கவனிக்கப்பெற்றது. ஒரு விதத்தில் தமிழ் தலித் இலக்கிய முயற்சிகளுக்கு முன்னத்தி ஏர் ஓட்டிய தொகுப்பு எனக் கூடச் சொல்லலாம். அதன் தொனியே பின்னர் உருவான தமிழ் தலித் கவிதைகளின் தொனியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியது என்பது எனது கணிப்பு.

அதே போல் அவர் தொகுத்து வெளியிட்ட “ பிணத்தை எரித்தே வெளிச்சம்(1995) “ தொகுப்பும் கூட தமிழ் தலித் இலக்கிய வரலாற்றில் முக்கிய தாக்கம் செலுத்திய ஒரு நூல். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைக் கன்னடம், மராத்தி, மலையாளம் எனப் பிற இந்திய மொழி எழுத்தாளர்களுடன் வைத்து வாசிக்கும் வாய்ப்பை உண்டாக்கியது. இந்தத் தொகுப்பு உருவாவதற்கு முன்பே புதுச்சேரியில் நாங்கள் பல தடவை சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் ஏற்பட்டது. நண்பர் ரவிக்குமார் பணியாற்றிய சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர் நாற்காலிகளில் அமர்ந்து உரையாடியிருக்கிறோம், அங்கிருந்து சைக்கிளில் கிளம்பி நேரு வீதியின் முடிவில் இருக்கும் தபால் அலுவலகத்தில் நண்பர் மதியழகனைச் சேர்த்துக் கொண்டு தேநீர் குடித்துப் பாரதி பூங்காவில் அமர்ந்தோ, கடற்கரையில் உட்கார்ந்தோ பேசிய காலங்கள் திரும்ப வராதவை.
 
கவிதை மனம் கொண்ட இந்திரன் தானே எழுதிய கவிதைகளில் நகரத்தின் நெருக்கடிகள், நகர மனிதர்களிடையே நிலவும் தொடர்பின்மை, இயற்கைசாராத வாழ்நிலை, அந்நியோன்யமற்ற மனித மனம் போன்றவற்றைப் பிடித்துக் கட்ட முயன்றுள்ளார். ஒரு தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளில் இருக்கும் தொடர்பின்மை கூட இந்த வெளிப்பாடுகளின் விளைவு தான் எனச் சொல்லலாம். அவரது அந்நியன், முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள் போன்ற கவிதை நூல்களை வாசித்த போது இப்படி நான் உணர்ந்ததுண்டு. அதே நேரத்தில் அவர் மொழிபெயர்த்தும் தொகுத்தும் அளித்த படைப்புகள் வேறு விதமானவை. அவை எழுதப்பட்ட காலத்தில் அம்மொழியைப் பேசும் மக்களில் ஒதுக்கப்பட்ட - விளிம்புகளில் வாழ்ந்தவர்களின் குரல்களைப் பதிவு செய்த கவிதைகள். 

அவரது முதல் மொழி பெயர்ப்புத் தொகுப்பான அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் தொடங்கிக் கடைசியாக வந்த கவிதைத் தொகுப்பு வரை இந்தக் கவனமே அதிகம் வெளிப்படுகிறது. அவரது மொழிபெயர்ப்புத் தொகுதிகள் பல தரப்புகளை விரிவான பரப்பில் அறிமுகம் செய்துள்ளன. அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் தொகுப்பு (1982) ஆப்பிரிக்க, அமெரிக்கக் கறுப்பினக் கவிதைகளின் தொகுப்பு. அடுத்தடுத்து வெளியிட்ட காற்றுக்குத் திசை இல்லை (1986) பசித்த தலைமுறை (1994) பிணத்தை எரித்தே வெளிச்சம் (1995) கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் (2003) முதலான தொகுப்புகளில் முறையே இந்திய இலக்கியம், உலக இலக்கியம், இந்திய தலித் இலக்கியம், ஆதிவாசிகள் இலக்கியம் எனத் தனித்தனிப் பொருண்மைகளைக் கவனப்படுத்தியிருந்தார். ஒரிய மொழிக்கவிதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தும் விதமாக “ மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள்” என்ற தொகுப்பையும்(2003) வெளியிட்டுள்ளார். ஒரியா, தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ஒரிய மொழிக்கவிதைகள் இடம் பெற்ற நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கவிதை மொழிபெயர்ப்புகளுக்காக அறியப் படும் இந்திரன், கலைவிமரிசனத்திற்காகவும் அறியப்பட வேண்டியவர்.ஆங்கிலத்திலும் தமிழிலும் ஓவியம், சிற்பம், திரைப்படம் பற்றிப் பல குறிப்புகளையும் விமரிசனங் களையும் எழுதியுள்ளார். நவீன கலையின் புதிய எல்லைகள்(1987), ரே: சினிமாவும் கலையும்(1989), தமிழ் அழகியல்(1994), தற்கால கலை: அகமும் புறமும்(1996), தேடலின் குரல்கள்: தமிழக தற்கால கலை வரலாறு(2001), நவீன ஓவியம்(2005) ஆகியன தமிழில் எழுதப்பட்ட கலை சார்ந்த நூல்கள். MAN & MODERN MYTH (1994), TAKING HIS ART TO TRIBALS(1999) என்பன ஆங்கில நூல்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்