விபத்துகள் அல்ல; ஆபத்துகள்

           


முகம் தெரிந்த மனிதர்களும் முகம் தெரிந்திராத மனிதர்களும் சந்திக்க நேரும்போது விவாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று வாகன  விபத்துகள். தினசரி ஒன்றிரண்டு பேருந்து விபத்துகளைக் காணொளியாகக் காண்கிறோம்.  சராசரியாக மாதத்திற்கு இரண்டுக்கும் குறையாமல் பெரும் ரயில் விபத்துகளைக் காட்சி ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காட்டுகின்றன. 
அடுத்த நாள் கூடுதல் விவரங்களாக இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைத் தருவதோடு இத்தகைய விபத்துகளின் வரலாற்றையும் தருகின்றன செய்தித்தாள்கள். பொறுப்போடு இருப்பதாக நினைக்கும் அதன்  ஆசிரியர்கள் ஆலோசனைகளைக் குறிப்பிட்டுத் தலையங்கம் ஒன்றை எழுதிவிட்டு அடுத்த பெரும் நிகழ்வொன்றிற்காகக் காத்திருக்கிறார்கள்.  

”விபத்துக்கள்  தவிர்க்க முடியாதவை” என்ற மனநிலைக்கு ஒவ்வொருவரையும் ஊடகங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ நடுத்தர வர்க்கம் அந்த மனநிலையைத் தாண்டி விபத்துக்களைப் பல்வேறு கோணங்களில் பிம்பங்களாக ரசித்து விட்டு அடுத்த காட்சிக்களுக்காகக் காத்திருக்கும் மனநிலைக்கு வந்து விட்டது.
ஊடகங்களின் பெருக்கத்தால் நடுத்தர வர்க்கம் அடுத்த காட்சிக்குக் காத்திருக்கும் மனநிலையிலிருந்து அடுத்த விபத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனநிலைக்குத் தயாராகவும் கூடும். அந்த நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. ஏனென்றால் விபத்துகளைச் செய்திகளாகவும், விபத்துக் காட்சிகளைச் செய்திகளின் நம்பகத் தன்மைக்குச் சாட்சி களாகவும் ரசித்து விட்டுச் செல்லும் போது அதனை வேறு எப்படிப் புரிந்து கொள்வது?  விளக்குவது?
கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் இந்தியாவை அதிரச் செய்த போபால் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்ததை சாதாரண விபத்தாகவே இன்றும் நம் மனம் நம்புகிறது. ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் லட்சக்கணக்கானோரின் உடல் ஊனத்திற்கும் காரணமாக இருந்த அந்த நிகழ்வை விபத்து என்று குறிப்பிட்டே கருணைத் தொகையை எதிர்பார்க்கிறோம். உரிய கருணைத்தொகையை வழங்கவில்லை என்ற போது தான் அது விபத்தல்ல; ஆபத்து என்ற அடுத்த கட்டத்திற்கு நமது மனம் நகர ஆரம்பிக்கிறது. ஆனாலும் நமது அரசுகளும் அதிகார நிறுவனங்களும் அதனை ஏற்கத்தயாராக இல்லை; தொடர்ந்து விபத்து; சாதாரண விபத்து தான் என்று சாதிக்கத் துடிக்கின்றன. இந்தப் போக்கு தான் ஆபத்தானவை.

ஊடகங்களின் பெருக்கம் நகல்களின் பெருக்கமாக மாறி ஆபத்துக்களை விபத்துக்களாக மாற்றிக் கட்டமைத்து மனிதர்களின் தன்னிலையை உருவாக்கி வருகின்றன. விபத்துக்களை விபத்துகளாகவே எதிர்கொள்ளலாம். ஆனால் ஆபத்துக்களை விபத்துகளாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடக்கூடாது. அது விபத்தாக இருக்காது; பேராபத்தாக அமைந்து விடும்.
விபத்துகள் மனித மனத்தின் முன் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஆபத்துகள்  முன்பே நினைத்துப்பார்த்து – திட்டமிட்டுச் சந்திப்பவை. சாதகமான முடிவின் போது வெற்றியாகவும் சாதனையாகவும் கருதப்படுபவை; பாதகமான முடிவின் போது தோல்வியாகவும் வேதனையாகவும் ஆகி விடுபவை. இந்த இரண்டிற்குமே எதிர்கொள்ளத் தயாரான மனிதர்கள்தான் பொறுப்பு. ஆனால் விபத்துக்களுக்கு யாரையும் நாம் பொறுப்பாக்கி விட முடியாது.
சாமியார்களைத் தேடிச் செல்வது ஆன்மீகப் பயணம். ஆனால் போலிச் சாமியார்களைத் தேடிச் செல்வது ஆபத்தான பயணம் என்பதை நமது காலம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஆன்மீகத்தை ஆபத்தாக மாற்றும் வேலையை போலிகள் செய்கிறபோது உண்மைச் சாமியார்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால் எல்லாச் சாமியார்களும் போலிகள் தானோ என்ற ஐயம் எழுவதை தடுத்து நிறுத்த முடியாது.
சாமியார்கள் போலிகளாக இருப்பதற்காக ஒட்டு மொத்த சமூகமும், பெரிதாகக் கவலைப் படவேண்டியதில்லை. சாமியார்களால் ஏற்படும் விளைவுகள் அவர்களை நம்பிப் போன மனிதர்களின் பிரச்னைகள். அத்தோடு அவர்களிடம் போனவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை ஒத்துக்கொள்வதில்லை; மனம் ஒத்துக்கொண்டாலும் வெளிப்படையாகச் சொல்லக் கூச்சப்படுவார்கள். ஆனால் போலி மருத்துவர்களும் போலி மருந்துகளும் சமூகத்தின் பிரச்சினைகள். உடனடி விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினைகள். போலி மருத்துவர்கள் நின்று கொல்லும் வியாதிகள் என்றால், போலி மருந்துகள் அன்றே கொல்லும் வியாதி. ’உணவே நோய்’ என்று சொன்னதை மாற்றி ’உணவே மருந்து’ ஆனது போல் மருத்துவமே வியாதியாக மாறி விட்டது.
இத்தகைய போக்கின் இன்னொரு வடிவம் தான் போலி மதிப்பெண் சான்றிதழ்கள். போலி மதிப்பெண் சான்றிதழ்கள் புழக்கத்தில் இருப்பது இந்த வருட நிகழ்வு இல்லை என்பதைக் கல்வித்துறையில் இருக்கும் ஒவ்வொருவரும் அறிவார்கள். ஆனால் இந்த ஆண்டு வெளிப்பட்டிருக்கும் போலிமதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வெளிவராத பரிமாணங்கள் கொண்டவை. அடிப்படைத் தேவைக்காகச் செய்த குற்றம் என்பதைத் தாண்டிப் பேராசையின் காரணமாகத் தோன்றிய குற்றமாக அவை வடிவம் பெற்று விட்டன. 
தொழிற்கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் அதனை மனம் ஏற்றுக் கொள்ளாமல் ஆகச் சிறந்த கல்லூரியில் இடம் பிடித்து விட வேண்டும்; தங்கள் பிள்ளைகள் மட்டும் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் எளிதாகப் பெற்று வாழ வேண்டும் என்ற நீண்ட காலத்திட்டத்தின் விளைவு. எல்லா விளைவுகளையும் மனம் அலசிப் பார்த்து வருவதுவரட்டும் என்ற முடிவின்படி எதிர்கொள்ளப்பட்ட ஆபத்தின் எதிர் விளைவு. இன்று அந்தப் பிள்ளைகள் எந்தக் கல்வியையும் பெறமுடியாமல் சமூகத்தின் முன்னே குற்றவாளிகளாக நிற்கிறார்கள். பிடிபட்டவர்கள் மட்டுமே இன்று குற்றவாளிகள். பிடிபடாதவர்கள் சாதனையாளர்கள்.
தங்கள் பிள்ளைகள்  தேர்வில் தோல்வியடைந்து விடக்கூடும் என்பதை அறிந்து பணம் கொடுத்து மதிப்பெண்ணைக் கூட்டிப் போட ஏற்பாடு செய்யும் பெற்றோர்கள் பலரை இந்தச் சமூகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. தேர்வுத் தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களைக் கெடுப்பதில் தொடங்கி, கல்வித்துறை நிறுவனங்களான தேர்வுத் துறைகளைச் சீரழிப்பதில் அது முடியும் என்பதை நாம் மறந்ததின் விளைவு அது.  பாவம் பிழைத்துவிட்டுப் போகட்டும் என்ற இரக்க மனநிலையின் வெளிப்பாட்டில் ஊழலின் – அரசு நிறுவனச் சீரழிப்பின்- ஊற்றுக் கண்கள் இருந்தன என்பதை இந்தச் சமூகம் பொறுப்பில்லாமல் தாண்டிக் கொண்டிருந்தது. கண் முன்னே நடக்கும் ஒவ்வொரு குற்றச் செயலையும் தன்னளவில் மன்னித்து விட்டதின் அல்லது நமக்கெதற்கு வம்பு  என்று கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போனதின் விளைவுகள் இவையெல்லாம். 
30 மதிப்பெண் வாங்கியவர்கள் 35 மதிப்பெண்கள் வாங்கினால் அடுத்த வகுப்பிற்குப் போய் விடுவார்கள் என்பதை அனுமதித்த இரக்ககுணம், 90 மதிப்பெண்கள் வாங்கியவர்கள் 95 மதிப்பெண்கள் வாங்கினால் ஆகச் சிறந்த கல்வி நிறுவனத்தில் இடம் பெற்று விடுவார்கள் என்கிற போது ஏற்க மறுக்கிறது. இரண்டிலுமே வித்தியாசம் ஐந்து மதிப்பெண்கள். போலி மதிப்பெண் சான்றிதழ் தந்து  அடுத்த வகுப்புக்குப் போகட்டும் என்பதை அனுமதித்த பொதுமனம் சிறந்த கல்லூரியில் இடம் பெறுவதற்காகச் செய்யப்பட்ட போலிச்சான்றிதழ் உருவாக்கத்தைப் பெருங்குற்றமாகக் கருதுகிறது என்பதுதான் விநோதம்.
போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பிடிபட்ட மாணவ மாணவிகள் பற்றிய பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக  முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.  வரவில்லை என்றால் இந்த ஆண்டு தொழில் கல்லூரிகளின் சேர்க்கை முடியும் போது நிச்சயம் முடிவுக்கு வந்து விடும். அதற்குப் பிறகு ஆகச் சிறந்த தொழில் கல்லூரிகளில் சேரும் ஆசையில் போலி மதிப்பெண் சான்றிதழ்களைக் கொடுத்து மாட்டிக் கொண்ட மாணவ, மாணவிகள் தண்டிக்கப்பட வேண்டுமா? தண்டிக்க வேண்டாமா? என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் ஆச்சரியமான முடிவே கிடைக்கும். அநேகமாகத் தண்டனை தேவையில்லை என்ற பெட்டியில் தான் அநேகம் பேர் வாக்களிப்பார்கள் என்று தோன்றுகிறது. தங்களுக்கான வாய்ப்பு இதனால் பறி போய்விட்டது என நினைத்தவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் மட்டுமே எதிர்த்துத் தண்டிக்க வேண்டும் எனக் கூறுவார்கள் என நினைக்கிறேன்.
பொதுமனத்தின் ஆழத்தில் இருக்கும் இந்தக் குணத்தை- மன்னிக்கும் குணம் எனக் கருதி நல்லது என முடிவு செய்யலாமா? அல்லது இப்படியொரு வாய்ப்பு வரும் போது நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதும் தீய போக்கின் வெளிப்பாடு என்ற கருதலாமா? தீதா? நன்றா?
போலிகளை ஒழிப்பது எளிதல்ல என்றே பலரும் கருதுகின்றனர். நல்ல பணம் எது? கள்ளப் பணம் எது என்று தெரியாமல் தான் பலர் ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் இது கள்ளப் பணம் என்று தெரிந்தே புழக்கத்தில் விடும் மனிதர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற அக்கறைகள் யாருடையவை? அரசாங்கத்தின் கடமை மட்டும் தானா? தனிமனிதர்களுக்குக் கொஞ்சமும் கிடையாதா? அரசாங்கம் என்பது மனம் அற்ற ஒரு நிறுவனம் தானே? மனிதர்களின் கூட்டு மனமாகத் தானே அரசாங்கம் செயல்பட முடியும்.?
வெளிவந்திருக்கும் போலி மதிப்பெண் சான்றிதழ்கள்  அம்பலம்  என்பது விபத்தல்ல; ஆபத்து.. இது போன்ற ஆபத்துகள் இன்னும் ஏராளமானவை இருக்கின்றன. இதில் ஈடுபட்டவர்களை அரசும் அதன் கருவிகளும் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கூடும். அதே நேரத்தில் போலிகள் தோன்றும் தருணங்கள் எவை என்று யோசித்துப் பார்த்தாக வேண்டிய கட்டாயமும் நம்முன்னே இருக்கிறது.
போலிகள் உருவாக்கத்தின் பின்னணியில் ”ஆகச் சிறந்த திறமையாளர்களுக்கு முன்னுரிமை” என்ற விளையாட்டு இருக்கிறது எனச் சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். எது ’திறமை’ என்பதற்கு எண்களால் விளக்கமளிக்கப்படும் மதிப்பெண்கள் மட்டுமே போதும் என்ற நிலை இருக்கும் வரை போலி மதிப்பெண் சான்றிதழ்கள் உருவாக்கமும் நடந்து கொண்டுதான் இருக்கும் போலும். அரசு நிறுவனங்கள் இன்னமும் எண் விளையாட்டைத் தாண்டி வேறு திசைக்குச் செல்வதை யோசிக்கவில்லை. அப்படி யோசித்தால் புதிய திசைகளும் வழிகளும் கிடைக்கக் கூடும்.
                                   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்