திமுகவில் குஷ்பு : தேர்தல் அரசியலின் கச்சிதமான தேர்வு

கோட்பாடுகளையும் சித்தாந்தங் களையும் மையப் படுத்திச் செய்யப்படும் அரசியல் கணக்குகளைத் தேர்தல் முடிவுகள் பெரும் பாலான நேரங்களில் பொய்க்கச் செய்திருக்கின்றன. கடந்த கால முன் மொழிதல்கள் அப்படியிருந்த போதிலும் இந்திய ஊடகங்களில் அரசியல் விமரிசனங்கள் செய்பவர்களும், தேர்தல் வெற்றிகளைக் கணக்கிட்டுச் சொல்பவர்களும் இன்னமும் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் கைவிடுவதாகக் காணோம். பெரும்பாலும் அவற்றை நம்பியே கருத்துக்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது அரசியல் விமரிசகர்கள், கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்று கருத்துரைக்க இயலாதவர்களாக இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இரண்டு காரணங்கள் அவற்றுள் முக்கியமானவை. இந்திய சமூகத்தின் தனித்தன்மையாகவும், தேர்தல் அரசியலில் முக்கியமான பங்காற்று வதாகவும் இருக்கும் சாதிகளின் ஒன்றிணைவு பற்றிய தவறான கணிப்புகள் முதலாவது முக்கிய காரணம். இரண்டாவது முக்கியக் காரணம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் இருக்கும் தனித்துவமான தனிநபர்களின் பங்களிப்புகளைக் கணக்கிட முடியாமல் தவிப்பதும், தவிர்ப்பதும் எனச் சொல்லலாம்.

இவ்விரு காரணங்களில் முதலாவது காரணத்தை அரசியல் கட்சிகளும் உணர்ந்துள்ளன; ஊடகங்களில் செயல்படும் அரசியல் விமரிசகர்களும் ஒதுக்குவதில்லை. வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தொடங்கி, கூட்டணிகளை உருவாக்குவது வரை அரசியல் கட்சிகளின் தலைமைகள் சாதிக் கணக்குகளோடு தான் திட்டமிடுகின்றன. சாதி அடையாளம் காட்டாத அரசியல் கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் அதே நேரத்தில் சாதி அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் சிறிய கட்சிகளோடும், அமைப்புகளோடும் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொள்ளவும் விரும்புகின்றன. சாதியக் கட்சிகளின் கூட்டணி ஆபத்தானவை என்று தள்ளவும் முடியாமல், ஆதாயம் தரக்கூடியவை என அணைக்கவும் முடியாமல் தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகள் அல்லாடுவதை ஒவ்வொரு தேர்தலும் காட்டிக் கொண்டே இருக்கின்றன.

ஆங்கிலம் மற்றும் மாநில மொழி ஊடகங்களில் கருத்துரைக்கும் அரசியல் விமரிசகர்களும் வெற்றி வாய்ப்பைப் பற்றிய கணிப்புகளைச் செய்யும் அலசல்காரர்களும் சாதிக்குழுமங்களின் இணைப்பை ஒரு காரணமாகக் காட்டாமல் விடுவதில்லை. ஒரு தொகுதியில் பெரும்பான்மை சாதி, அத்தொகுதியில் இணையக் கூடிய சாதிகளின் சாத்தியங்கள் பற்றியெல்லாம் போடும் கணக்குகள் எல்லாக் கட்சிகளிலும் உண்டு என்றாலும், இத்தகைய கணக்குகள் போட்டு அரசியல் வெற்றியைச் சாத்தியமாக்கிய முன்னோடி மாநிலம் தமிழ்நாடு என்பதையும், முதன்மையான கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதையும் நுட்பமாகக் கவனித்து வரும் அரசியல் நோக்கர்கள் மறுக்க மாட்டார்கள். மாநிலக் கட்சிகளை ஆளுங்கட்சிகளாகத் தேர்வு செய்துள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தக் கணக்கும், ஒன்றிணைப்பும் வெற்றியின் காரணிகளாக இருந்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி இக்காரணத்தை வெளிப்படையாகச் சொல்லியே வெற்றிகளைப் பெற்று வருகிறார்.

சாதியம் என்னும் முதலாவது முக்கியக் காரணத்தைச் சரியாகக் கணக்கிட்டுத் தேர்தலைச் சந்திப்பதில் திமுகவோடு பல அரசியல் கட்சிகள் இன்று போட்டிக்கு வந்து விட்டன. ஆனால் இன்னொரு முக்கிய காரணமான தனிநபர்களின் – பிரபலங்களின் பிம்பங்கள் தரும் பங்களிப்பைத் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு போட்டி போட இந்தியாவில் இன்னொரு அரசியல் இயக்கம் இல்லை என்றே சொல்லலாம். ஆட்சியைப் பிடித்த 1967 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி பயன்படுத்திக் கொண்ட பிம்பங்கள் பலவிதமானவை; பன்மைத்தன்மை கொண்டவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகப் பயன்பட்டு திமுகவின் வெற்றிக்குக் காரணிகளாக இருந்திருக்கின்றன. எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற திரைப்படக் கவர்ச்சி பிம்பத்தை மட்டுமே அது பயன்படுத்தியது என்று சொல்வது அதன் அடிப்படை நம்பிக்கையான பரப்பியல் வாதத்தை அறியாதவர்களின் கூற்று மட்டுமே. பரப்பியல் வாதத்தின் சகல பரிமாணங்களையும் அறிந்துள்ள திமுக புதிய புதிய பிம்பங்களை உருவாக்கித் தேர்தல் வெற்றிகளைச் சாத்தியமாக்கி இருக்கிறது.
அரசியல் விஞ்ஞானத்தில் பரப்பியல் வாதம் (பாப்புலிசம்) என்ற கலைச்சொல் ஒருவித எதிர்மறைத் தன்மையோடு விளக்கப்படும் கலைச்சொல் என்றாலும் பொதுப்புத்தி சார்ந்த வெற்றிக்குப் பல நேரங்களில் உத்தரவாதமான ஒன்று.

வெகுமக்களிடம் தங்கள் இயக்கத்தை வேகமாகக் கொண்டு போய்ச் சேர்க்க விரும்பும் இயக்கம், புனைவான சில செய்திகளையும், நிகழ்வுகளையும் உருவாக்கி அவற்றைக் கதைகளாக மாற்றிக் கட்டமைப்பது பரப்பியல் வாதத்தின் முக்கியமான போக்கு. கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பேச்சுகளாகவும், காட்சிகளாகவும் முன்னிறுத்திப் பெருங்கூட்டத்தை ஏற்கச் செய்ய இயலும் என்ற நம்பிக்கை அதன் அடிப்படை. அத்தகைய நம்பிக்கையில் செயல்படும் இயக்கத்தைப் பரப்பியவாத இயக்கம் (Populist movement) என அரசியல் விஞ்ஞானம் சுட்டும். செய்திகள், நிகழ்வுகள் மட்டுமே புனைவுகளாக ஆக்கப்படும் என்றில்லை. ஓர் இயக்கம் முன் வைக்கும் கொள்கைகள், கொள்கைகளை முன் வைக்கும் நபர்கள் போன்றனவும் கூடப் புனைவுகளாகவே கட்டமைக்கப் படுவது பரப்பியவாதத்தின் அம்சங்களே. இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பரப்பியல் வாதத்தைத் தங்களது கருத்தியல் அடிப்படையாகக் கொண்டவையே என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகமே அதில் முன்னோடியாக இருந்த இயக்கம் என்பதை அதன் கடந்த கால வரலாற்றின் பக்கங்கள் தெரிவிக்கின்றன.

பொதுப்புத்திக்கெதிரான மாற்றுக் கருத்துக்களைத் தீவிரமாக முன் வைத்த இயக்கமான பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகமாக உருவாகிய காலத்திலிருந்து தமிழக வரலாறு பற்றியும், தமிழ்ச் சமூகத்தைப் பற்றியும் திமுக முன் வைத்தவை பெரும்பாலும் புனைவுகள் சார்ந்தவையே. இதனைப் பல காத்திரமான ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. அத்தகைய புனைவுகள் வழியாக முன் நிறுத்தப் பட்ட இலக்கியம் மற்றும் வரலாற்றுப் பாத்திரங்களையும் ( திருவள்ளுவர், கண்ணகி, ராஜராஜன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்), நிகழ்வுகளையும் (இமயமலையில் கல்லெடுத்துக் கண்ணகிக்குக் கோயில் கட்டியது, மனுநீதிச் சோழன் நீதி வழங்கியது), கருத்தியல்களையும் (பொற்காலப் புனைவுகள்) நகரும் பிம்பங்களாக்கித் தேர்தல் அரசியலுக்குத் தி.மு.க.வைப் போல் வேறு எந்த அரசியல் இயக்கமும் பயன்படுத்திக் கொண்டதில்லை. வரலாற்றுப் பாத்திரங்களைப் புனைவுகளாக மாற்றியதைப் போலவே நிகழ்கால மனிதர்களுக்கும் புனைவுகளைத் தந்து பிம்ப அடுக்குகளால் நிரப்பிக் கட்டமைப்பதைத் தேர்ந்த அரசியல் செயல்பாடாகச் செய்த இயக்கமும் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

தனது திரைப்படங்களில் பத்துப் பேரைப் புரட்டி எடுக்கும் எம்.ஜி. ராமச் சந்திரனைப் புரட்சி நடிகராகப் புனைந்து மேடைகளில் ஏற்றிய திமுக., தனது இயக்கத்தில் விதம் விதமான பிம்பங்கள் இருப்பதை எல்லாக்காலத்திலும் உறுதி செய்து கொண்டே இருக்கிறது. பேரறிஞர், கலைஞர், நாவலர், நாவுக்கரசர், நகைச்சுவைத் தென்றல், இலட்சிய நடிகர் எனத் தொடக்ககாலப் புனைவுகள் தந்த பலனை நன்கறிந்த இயக்கம் அத்தகைய பிம்பங்களை நோக்கி உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு போலக் கவனத்துடன் இருந்து வந்திருக்கிறது. உலக அளவில் அறியப் பட்ட கவிஞர்கள், கலைஞர்கள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்களோடு தொடர்பு கொண்டதாக அவ்வியக்கம் காட்டிக் கொண்டதைப் பெயரிடல் வழியாகவும், பட்டப் பெயர்களாக ஆக்கிக் கொள்ளுதல் வழியாகவும் தக்க வைத்திருக்கிறது. இப்போது சரியானதொரு மீனாக -முற்போக்கான எண்ணங்கள் கொண்ட –தனித்திறமைகள் நிரம்பிய பெண்மணியாகக் குஷ்பு நிறுவிக் கொண்டபோது கொக்கி போட்டு வளைத்துக் கொண்டு விட்டது. நடிகை குஷ்பு தி.மு.க.வால் அடையப்போகும் பலன்களை விட, அவரால் திமுகவிற்குக் கிடைக்கப் போகும் பலன்களே அதிகம் என்பது சித்தாந்தம் சாராத- கோட்பாடாத சாராத- ஆனால் வெகுமக்கள் மனநிலை சார்ந்த ஒரு கணிப்பு.


தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உயிர்ப்புள்ள கட்சியாக இருப்பதற்கு அக்கட்சி ஆளுங்கட்சியாக இருப்பது மட்டுமே காரணம் எனச் சொல்லுவது தவறான கணிப்பாகும். ஆளுங்கட்சியாக இருக்கும் போது அந்தக் கட்சி தனது வளர்ச்சியில் எத்தகைய உத்திகளைக் கவனப்படுத்தி வருகிறது என்பதைப் பிற கட்சிகள் புரிந்து கொண்டனவாகத் தெரியவில்லை. வெகுமக்கள் அரசியலில் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகள் சார்ந்த செயல்பாட்டுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விடத் தனி நபர்களின் பிம்பங்கள் சார்ந்த அலைவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் கூடுதலானது என்பதைத் திமுகவின் சிந்தனைக் குழு சரியாகக் கணித்துச் செயல்பட்டு வருகிறது. இத்தகையதொரு சிந்தனைக்குழு முக்கிய எதிர்க்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதற்கான சாத்தியங்களே இல்லை. தனிநபர் தலைமையை மட்டும் நம்பும் எல்லாக் கட்சிகளும் இதே தான் நிலை.


2000-க்குப் பிந்திய இந்திய அரசியலில் இரண்டு போக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒன்று அறிவுசார் அரசியல்(Intellectual Politics); இன்னொன்று பெண் அரசியல்(Women Politics). இவ்விரண்டையும் சரியாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ள திமுகவின் சிந்தனைக்குழு அதனை நடைமுறைப் படுத்தும் கட்சியாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு வருகிறது. கடந்த பொதுத் தேர்தலிலும் ஊராட்சித் தேர்தலிலும் திமுக அளவிற்கு வேறு எந்த அரசியல் கட்சியும் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை என்பதை இங்கே நினைவு படுத்திக் கொள்வதோடு தனித்துவமான பெண்களைத் தனது கட்சியின் உறுப்பினர்களாக ஆக்குவதில் அது காட்டி வரும் அக்கறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமான பெண்ணியக் கவியாக அறியப்பட்டு ஊராட்சித்தலைவியாகச் செயல்பட்ட கவி சல்மா கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர். இன்னொரு நவீனக் கவியான கனிமொழி ராஜ்யசபா உறுப்பினர். தனது கல்லூரிப் பேராசிரியர் பணியை விட்டு விட்டு இளைஞர் மாநாட்டின் கொடியை ஏற்றுவதற்காக அழைக்கப்பட்ட தமிழச்சி தங்கப் பாண்டியனும் இன்னொரு முக்கியமான கவி. இவர்கள் எல்லாம் ஏற்கெனவே அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அரசியல் குடும்பத்துப் பெண்கள் எனத் தள்ளி விட முடியாதவர்கள். ஏனென்றால் இவர்கள் அனைவரும் தங்களுக்கான தனித்த அடையாளங்களை ஏற்கெனவே நிரூபித்துக் கொண்டவர்கள். அரசியல் அறிவைப் பெற்றுக் கொள்ளவும் செயல்படவும் தயங்காத ஆளுமை கொண்ட பிம்பங்கள். இவர்களின் பிம்பங்கள் வெகுமக்கள் அரசியலில் மட்டுமே விளைவுகளை உண்டாக்கும் என்பதில்லை. அவர்களின் கவி பிம்பங்களும், தேர்ந்த பேச்சு மற்றும் நிதானமான அணுகுமுறைகளும் ஊடகங்களின் கருத்துருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றக் கூடியன என்பதை மறுத்து விட முடியாது. பெண்ணியக் கவிகள் மட்டுமல்லாது வெளிப்படையாகத் தன்னைத் திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர் எனச் சொல்லிக் கொள்ளும் இமையம் போன்ற நவீனப் புனைகதை ஆசிரியர்களும் கூட அடுத்த கட்டப் பிம்பங்களாக வலம் வரக் கூடியவர்களே. தேர்தல் காலத்தில் கூட்டம் சேர்க்கப் பயன்படும் துணை நடிகர்களைப் பணம் கொடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழகக் கட்சிகள் திமுகவின் அடுத்த கட்ட நகர்வில் செயல்படும் ஆழமான எதிர்காலவியத்தை உணர்ந்தனவாகத் தெரியவில்லை.

நிகழ்காலத் தேர்தல்களில் வாக்காளர்களுக்குத் தரப் பணமும் இலவசத் திட்டங்களும் போதும் என்றாலும், அதற்கான அதிகாரத்தை மைய அரசிடமிருந்து பெறுவதற்கு, பேச்சுவார்த்தை வழி அதிகாரத்தைக் கையகப்படுத்தும் அறிவுசார் அரசியலின் தேவையையும் திமுக அளவிற்கு வேறு கட்சிகள் உணரவில்லை. அத்தேவையை நிரப்ப தயாநிதி மாறன், கவி கனிமொழி, ஆ.ராசா போன்ற இளம் தலைமுறை அரசியல் வாதிகளைத் திமுக உருவாக்கி விட்டது என்றாலும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க விரும்பும் ஓர் அரசியல் கட்சிக்கு இரண்டு மூன்று பேர்கள் மட்டுமே போதுமானவர்கள் அல்லர். மேலும் மேலும் பலவிதமான தளங்களில் இயங்கக் கூடிய- தனித்துவமான கருத்துகளைக் கொண்ட - பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான பிம்பமாக அலைந்து உலா வரக்கூடிய நபர்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். அத்தகையதொரு நவீனப் பிம்பம் நடிகை குஷ்பு என்பதைக் காலம் உறுதி செய்யப் போகிறது. இந்தி பேசும் மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து , சொந்தமாகத் தமிழ் பேசித் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியைத் தானே பொறுப்பேற்று நடத்தும் அளவிற்குத் தமிழைக் கற்றுக் கொண்டதோடு, தேசிய அளவில் வெளிவரும் ஆங்கில இதழ்களின் கருத்துரையாளராகச் செயல்படும் அறிவுசார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ள குஷ்புவின் வரவு அத்தகைய முக்கியமான ஒரு வரவு என்றே திமுக கருதியிருக்க வேண்டும்.

நடிகை குஷ்பு , ஒரு நடிகையாக மட்டுமின்றி தனி மனுஷியாகவே சவால்கள் பலவற்றைச் சந்தித்தவர். கடந்த காலம் மிகவும் வெளிப் படையானது; தடைகள் நிரம்பியது; சவால்கள் கொண்டது. பதினாறு வயதுப் பெண்ணாக இருக்கும் போது நடிக்க வந்து முதல் படத்திலேயே வெற்றிப் பட நாயகியாக வெளிப்பட்டவர். முதல் படமான வருஷம் 16 வின் கதை மட்டும் அல்ல; பின்னர் வந்த பல படங்களின் கதை அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை மையப்படுத்தியே அமைந்தன; அவையெல்லாம் வெற்றியும் பெற்றன. தமிழ்ச் சினிமா ரசிகனின் கனவுக் கன்னியாக மட்டும் அல்லாமல் கோயில் கட்டி வணங்க வேண்டிய தெய்வமாகவே ஆனவர்.திரைப் படத்துறையில் பெரும்பாலான நடிகைகள் சந்திக்கும் சொந்த வாழ்க்கை சார்ந்த தோல்விகளை அவரும் எதிர் கொண்டார் என்றாலும், அவற்றைச் சவால்களாக மாற்றி வெற்றி கண்டு தனித்துவமான தமிழ்நாட்டு மருமகளாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். அவற்றையெல்லாம் தாண்டி தனது மனம் சரியென நம்பிய ஒரு கருத்துக்காக இரண்டு ஆண்டுகள் போராடித் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட உறுதியான மனம் படைத்தவர்.

பரப்பிய வாதம் ஒரு நபரை அல்லது பிம்பத்தை எப்போதும் ஒற்றைப் பரிமாணத்திலேயே பயன்படுத்திக் கொள்ளாது. ஓரிடத்தில் அதன் ஒரு பரிமாணத்தைப் பயன்படுத்தும். அந்தப் பரிமாணம் இன்னோரிடத்தில் எதிர்மறை விளைவை உண்டாக்கும் என்றால், அதனை ஒதுக்கி வைத்து விட்டு அப்பிம்பத்தின் மற்றொரு பரிமாணத்தை முன் வைக்கும். நடிகை குஷ்புவின் பரிமாணங்கள் பல விதமானவை என்பதைத் திமுகவும் அறியும்; தமிழகமும் அறியும். தனது நிலைப்பாடுகளைக் காட்டிய பின் அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவது என முடிவு செய்துள்ள குஷ்புவும், அவரது கடந்த காலப் போக்குகள் அனைத்தையும் அறிந்த பிறகு தனது கட்சிக்குத் தேவையானதொரு பிம்பம் என அவரை ஏற்றுக் கொண்டுள்ள திமுகவும் சரியான திசையில் பயணம் செய்துள்ளதாகவே தோன்றுகிறது..
=======================================================================

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
திமுகவின் இந்த செயல்பாடுகள் ஒன்றும் புதிய கண்டு பிடிப்புக்கள் அல்ல.

எம் ஜி ஆர் முன்பு இப்படிதான் ஜெயலலிதாவை கட்சிக்குள் சேர்த்தார், நாவலர், ஆர் எம் வீ, முத்துசாமி போன்றோர் வெண்ணிற ஆடை நிர்மலாவை சேர்த்தனர். காங்கிரஸ் ஜெய சித்ரா, வைஜந்தி மாலா போன்றோரை இணைத்தது


பாரதிய ஜனதா ஹேமா மாலினியை சேர்த்தது, தெலுங்கான கட்சி விஜயசந்தியியா, சந்திர பாபு நாய்டு ரோஜாவை.. அதிமுகவே சிம்ரன், விந்தியாவை சேர்த்து.

குஷ்பூ வின் வாகு வாங்கும் திறமையை பார்ப்போம். குஷ்பூ அரசியலில் இன்னொரு ஜெயலலிதாவா அல்லது விந்தியாவ என்று பார்ப்போம்.
குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
Iyaa
Kushbu ponra perum alakikal moolamaaka kidaika pokum urimaikalai sutti kaata maranthu witteerkal

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்