துயரத்தின் பாடல்கள்

சட்டையின் பாடல்
புது மோஸ்தருக்குள் புகுந்து விட்ட கூட்டம்
அல்லது சாதி என எங்களைச் சொல்லக் கூடும்.

எனது பாட்டன் மாயோ தேட்டன்*
அணிந்த சட்டைக்கு மூன்று கைகள் இருந்தன**.
அவனது தந்தையின் சட்டை ஊர்ப் பிணங்களை மூடிய துணிகளே.
அவனது தந்தைக்கு அந்தத் துணிகளும் கிடைத்ததில்லை;
வெயிலில் காய்ந்த தோல் தான் ஆடை.

இப்போது நான் நாகரிகமான ஆடைகளையே அணிகிறேன்.
பையில்லாத, கையில்லாத, பொத்தானில்லாத
பீட்டர் இங்கிலாண்ட்டு வகையறாக்கள்…
இரண்டாவது விற்பனையில் கிடைக்கின்றன.
தெருவோரத்து ஓவியனின் சித்திரம் போல
ரோட்டோரத்தில் கிடந்தவற்றைக்
கொஞ்ச நேரத்திற்கு முந்தித்தான் அள்ளிக் கொண்டு வந்தேன்.

என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருத்தரும் அதன் பெயருக்காக-
அதன் உடைமையாளருக்காக மதிக்கவே செய்கின்றனர்.
ஆனால் என் கழுத்தெலும்பில் கைபடாமல் மரியாதை செய்கிறார்கள்.

பாடுவதற்கென எங்கள் சட்டைகளுக்கு ஒரு பாடல் இருக்கிறது..
இயல்புக்கு மீறிய நாகரிகத்தின் பாடல்.

=========================
* இடைக்கால குஜராத்தில் தலித்துகள் மூன்றுகைகள் கொண்ட சட்டைகள் அணிய வேண்டும் என வலியுறுத்தப் பட்டனர். அதன் மூலம் தீண்டத்தகாதவர்களை அடையாளப்படுத்தும் குறியீடாக அந்த வழக்கம் இருந்தது. அதனை எதிர்த்துத் தனது உயிரைத்தியாகம் செய்தவர் மாயோ தேட்டன் என்னும் நாட்டுப் புறக் கதைப்பாடல் நாயகன்.

நிரவ் பட்டேல் குஜராத்தியில் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததைத் தமிழில் : அ.ராமசாமி
INDIAN LITERATURE /255:120/JAN-FEB.2010



தற்குறியாகவே இருந்திருக்கலாம்

விஞ்ஞான வகுப்பில் புவியீர்ப்பு விசை குறித்த நியூட்டனின் விதி
ஆப்பிள் விழுவதைக் கவனித்தேன்.
எனது முதல் நினைப்பு
சாப்பிடுவதற்காகவே விழுகிறது என்பதுதான்.

சமூகவியல் வகுப்பில் சமூக வாழ்க்கையும் இருப்பும் குறித்த விதி
ஹரிஜன் ஆஸ்ரம் சாலையில் கண்ணாடி மாளிகை.
எனது முதல் நினைப்பு
அதன் மீது கல்லெறிய வேண்டும் என்பதுதான்.

தாகத்தை அடக்கிக்கொண்டு
கிராமத்திற்கு வெளியே இருந்த தண்ணீர்ப் பானையைப் பார்த்தேன்.
எனது முதல் நினைப்பு
காலைத்தூக்கி மூத்திரம் பெய்யும் நாயைப் போல
நானும் செய்ய வேண்டும் என்பதுதான்.

“காடு விட்டு நாட்டுக்குள் வழி தவறி வந்த நரி
சாயத்தொட்டியில் விழுந்ததும்
திட்டுத் திட்டாய்த் ஒட்டிய சாயக்கலவையால்
சிங்கராஜாவாய் நினைத்துக் கொண்டதும்”
பற்றிப் புதுப்புது அர்த்தங்களுடன்
விதம் விதமாய்க் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
இப்போது தோன்றுகிறது.
இதற்குப் பதிலாகத் தற்குறியாகவே இருந்திருக்கலாம்

உமிழப்பட்ட வெறுப்பையும்
செலுத்தப்பட்ட வன்முறையையும்
அறிந்து கொள்ளும் படிப்பைப் பெறாமல்
தற்குறியாகவே இருந்திருக்கலாம்.
கோபத்தை அடக்கவும் செயல்பாட்டைத் தடுக்கவும்
காரணமாகி விட்ட படிப்பைப் பெறாமல்
தற்குறியாகவே இருந்திருக்கலாம்

காட்டப்பட்ட வேறுபாடுகளைக் கவனிக்காமல்,
செத்த மாடு சுமக்கும் கம்பைத் தூக்கிப் போட்டுத்
தலையால் தட்டி விளையாடிக் கொண்டிருக்கலாம்
செய்யப்பட்ட அவமானங்களை நினைத்துக் கொண்டிராமல்,
மாட்டுத்தலைக் குழம்பைக் குதூகலத்துடன்
ஆசையோடு அள்ளிக் குடித்துக் கொண்டிருக்கலாம் .

நிரவ் பட்டேல் குஜராத்தியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: கண்பத் வங்கர். தமிழில் அ.ராமசாமி / INDIAN LITERATURE /255:121-122/JAN-FEB.2010

நிரவ் பட்டேல் – குஜராத்திக் கவிஞர், தலித் செயலாளி

கருத்துகள்

வித்யாஷ‌ங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
duraibharathy@gmail.com.sir iam durai@vidyashankar. yesterday ireadur writtings.higly impressed me .dura

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்