தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

கற்பித்தலின் பரிணாமம்
கற்றல் என்பதற்குள் தகவல் திரட்டல், சேமித்தல், பயன்படுத்துதல் ஆகிய மூன்று பரிமாணங்கள் உண்டு . பள்ளிக் கல்வி தொடங்கி ஆய்வுக் கல்வி வரையிலான எல்லாவற்றிலும் இம்மூன்று நிலைகளும் வெவ்வேறு விதமாக நடை பெறுகின்றன. பாடத் திட்டம் சார்ந்து ஆசிரியர் தரும் தகவல்களை மனதில் சேமித்துத் தேர்வுத் தாளில் எழுதிப் பயன்படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வியின் மாணாக்கர்கள் செய்கிறார்கள். பள்ளிக் கல்வியில் அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், அதைச் சரியாகச் செய்பவர்களைச் சிறந்தவர்கள் எனப் பாராட்டுவதும் ஓரளவுக்குப் பொருத்தமானது. இந்நிலையைப் பள்ளிக் கல்வியோடு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அந்த அடிப்படையில் தான் உயர்கல்வியான கல்லூரிக் கல்வியின் தொடக்க நிலையிலேயே துறை சார்ந்த சிறப்புக் கல்விக்குள் மாணாக்கர்கள் நுழைக்கப் படுகின்றனர். சிறப்புக் கல்விக்கான பாடத் திட்டத்தில் படிக்க வேண்டிய பனுவல்கள் எனக் குறிப்பிடுவ தோடு பார்வை நூல்களையும் பாடத்திட்டக் குழுக்கள் தருவதற்கு அப்படியொரு நோக்கம் இருப்பதே காரணம்.

இளங்கலைப் பாடத்திட்டத்திலிருந்து விலகி முதுகலைப் பாடத் திட்டத்திற்குப் பல நோக்கங்கள் இருக்க வேண்டும். பாட நூல்களோடு (Text books) பார்வை நூல்களும் (References), மேலும் படிக்க வேண்டிய நூல்களும் (Further Readings) என்பனவும் பாடத்திட்டக் குழுக்களால் குறிப்பிடப் பட வேண்டும். முனைவர் பட்டத்திற்கு முந்திய பட்டமான இள நிலை ஆய்வுப் பட்டம் சிறப்புப் பாடங்கள் என்ற நிலை யிலிருந்து திரும்பவும் பொதுநிலைக்கு நகர வேண்டும். இப்பொதுநிலை பள்ளிக்கல்வியில் இருக்கும் பொதுக் கல்வி யிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பரந்த பரப்புக்குள் திறனாய்வுப் போக்கில் நுழையும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

நமது பாடத்திட்டங்கள் இத்தகைய வேறுபாடுகளைக் கொண்டனவாக இருக் கின்றனவா என்று கேட்டு விடை சொல்லும் வேலையை இங்கே நான் செய்யப் போவதில்லை. சில பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக் குழுக் களிலும், பல தன்னாட்சிக் குழுக்களின் பாடத்திட்டக் குழுக்களிலும் இருந் துள்ள அனுபவத்தைக் கொண்டு அதற்கான விடைகளை விவாதிக்க முடியும். புதிய வகைப் பாடத்திட்டங்களை உலகப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு உருவாக்கியுள்ளன என்பதை வலைத்தளங்கள் வழியாகப் பார்த்துள்ளேன். அந்த அடிப்படையில் சில முன் மொழிதல்களை நான் உறுப்பினராக உள்ள குழுக்களில் பரிந்துரை செய்துள்ளேன். பெரும்பான்மை காரணமாக எனது முயற்சிகள் விவாதிக்கப்படும் பொருளாகக் கூட இருந்ததில்லை என்பதைக் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையின் மைய நோக்கத்திற்குப் புறம்பானதும் கூட. இனி கட்டுரையின் மையத்தை நோக்கி நகரலாம் .

பொதுக் கல்வியும் கலை இலக்கியக் கல்வியும்

சிறப்புப் பாடங்களுக்குள் நுழையும் கல்லூரிக் கல்வி திரட்டுதல், சேமித்தல்,பயன்படுத்துதல் என்பனவற்றை மனம் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதிலிருந்து விலக்கி, தேடலை முதன்மைப் படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். தேடல் என்பது வகுப்பறைக்கு வெளியே நூலகங்களில், இதழ்களில், ஆய்வுக் கூடங்களில், அறைக் கூட்டங்களில் என விரியலாம். தேடித் திரட்டுதலில் ஏற்படும் மாற்றம் அதன் தொடர்ச்சியாகச் சேமித்தல், பயன்படுத்துதல் என்ற நிலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது தவிர்க்க முடியாதது. 

திரட்டப் படும் தகவல்கள், மனதில் சேமித்தல் என்பதாக இல்லாமல் குறிப் பேடுகளில் சேமித்தல், சொந்த நூலகங்களை உருவாக்கிக் கொள்ளுதல், அவற்றைப் பயன்படுத்தித் தனது தனித்தன்மைகளை வெளிப் படுத்துதல், படைப்பாக்கம் செய்தல், புலமையாளனாகக் காட்டுதல் என்பதாக முதுகலை கல்வியில் விரிய வேண்டும். இந்த விரிவும் ஆழமும் முதுகலைக் கல்வியில் சேரும் எல்லா மாணாக்கர்களுக்கும் சாத்தியப் படாமல் போனதற்குப் பல காரணங்கள் இருந்த போதிலும் முக்கியமான காரணமாக இருப்பது இப்போதுள்ள தேர்வு முறை தான்.

கேட்கப்படும் வினாக்களுக்கு மூன்று மணி நேரத்தில் எழுதப்படும் விடை களில் அதிகம் வெளிப்படக் கூடியன தகவல்கள் மட்டுமே. தகவல்களை வகைப்படுத்துதல், விளக்குதல், புத்தாக்க நிலையில் பயன்படுத்துதல் என்பன வெல்லாம் சாத்தியம் இல்லை. அதிலும் அனைத்து வகையான பாடங் களுக்கும் ஒரே வகையான வினா அமைப்புகளும் விடைகளுக்கான அளவு வரையறைகளும் கொண்ட தேர்வு முறைகளோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் இன்றைய கல்வி முறை எல்லாச் சோதனை முயற்சி களையும் மலினப் படுத்தும் முடிவுக்கே கொண்டுபோய்ச் சேர்த்து விடுகின்றது. இன்றுள்ள நிலையிலேயே கூட ஆய்வாளர்கள் முழுமையாக மனதில் சேமித்தல் என்பதாக இல்லாமல் குறிப்பட்டைகளில் சேமித்தல், வகைப்பாடு செய்தல், விளக்குதல், புத்தாக்க நிலையை வெளிப்படுத்துதல் என்பதைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவிற்¢குக் கொண்டு வந்தால் தேர்வுகள் சார்ந்த கல்வியின் குறைபாடுகள் புரிய வரலாம்.
கற்றலின் தொடக்க நிலையில் மாணாக்கர் ஒருவருக்குக் கற்பிப்பவன் தருவது தகவல்கள் மட்டுமே முதன்மையானது. இத்தொடக்கம் இடைநிலைக் கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி என நீளும் பள்ளிக் கல்வி வரை தகவல்களைத் தொகுத்துத் தருவனவாகவே இருக்கின்றன. ஆனால் திரட்டும் தகவல்களை வகைப் படுத்துவது, ரகசியப் படுத்துவது, விளக்குவது, ரகசியங்களை உடைத்துக் காட்டுவது என்பதன் மூலம் பயன் படுத்துவதே உயர்கல்வியின் இயங்குநிலையாக இருக்க வேண்டும். இவ்வியங்கு நிலைக்குப் பாடத்திட்டங்கள் தயாரிப்பதில் தொடங்கி, கற்பித்தல்,மதிப்பீடு செய்தல் வரையிலான ஆசிரியர்களின் பணியில் மாற்றங்கள் வரவேண்டும். அதேபோல் கற்றல், கற்றனவற்றைப் பயன்படுத்தித் தன்னை வெளிப்படுத்து தல் என்பதில் மாணாக்கர்கள் தீவிரமாக முயல வேண்டும். தங்களின் தேவைக்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அத்தகைய கோரிக்கை யின் முன் நிபந்தனையாகத் தேடுவதற்கான வாய்ப்புக்களையும் , தேடுவதை விவாதிப்பதற்கான சாத்தியங்களையும் , விவாதித்தலின் விளைவு களை முன் வைப்பதற்கான பரப்பையும் கல்வி முறை முன் வைக்க வேண்டும். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டதான கல்வியாக இலக்கியக் கல்வி மாற்ற வேண்டும். இதற்கு இன்றுள்ள வகுப்பறைக் கல்வியின் போதாமையைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதாமையின் புரிதலைச் சரிசெய்ய இன்றுள்ள ஒரே வழி, புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள நவீனத் தொழில் நுட்ப சாதனங்களை இலக்கியக் கல்வியின் கருவிகளாக ஆக்குவது தான் என்று உறுதியாகக் கூறுவேன்.

இப்படிச் சொல்லும்போது இதற்கெதிரான மாற்றுக் குரல் ஒன்று இருக்கிறது என்பதை அறிந்தே சொல்கிறேன். கற்றலின் பகுதிகளாகச் சுட்டப்படும் திரட்டுதல், சேமித்தல், பயன்படுத்துதல் என்பன அறிவியல் கல்வி, தொழில் நுட்பக்கல்வி போன்ற பயன்படுதுறை சார்ந்த கல்விக்கு மட்டுமே முழுமையும் பொருந்தக் கூடியன. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவு என்பது பெற்றுச் சேமித்துக் கொள்ளும் தகவல்களின் பெருக்கம் என்பதன் மேல் விரியும் தன்மையுடையது என அந்த மாற்றுக்குரல் வாதங்களை முன் வைக்கும் என்பதையும் நானறிவேன். இதே காரணங்களும், கூறுகளும் வரலாறு, சமூகவியல், நிலவியல் போன்றனவற்றிற்கும் பொருந்தக் கூடியன என்பதால், சமுதாய அறிவியலின் பிரிவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்து விட்டு, கலை இலக்கியக் கல்விக்கு இவையெல்லாம் பொருந்தாது என ஒதுக்கித் தள்ளும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு.

கலை இலக்கியக் கல்வி வெறும் தகவல் அடிப்படைகளின் மேல் கட்டப்படும் உண்மை அல்ல என்று படைப்பிலக்கியவாதிகள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர்.உண்மைக்குப் பின்னால் இருக்கும் இன்மையையும், இன்மையை உண்டாக்கும் உண்மையையும் உருவாக்கும் தன்மை கொண்டன கலை இலக்கியங்கள்.எனவே கலை இலக்கியக்கல்வியின் முறைகளும் நுட்பங் களும் முற்ற முழுதாக வேறு பட்டவை என வாதம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் இந்த வாதங்கள் எல்லாம் மொழி என்பதை அறிவியலின் ஒரு பகுதியாக விளக்கிக் காட்டிய நவீன மொழியியலின் வருகைக்குப் பின் அர்த்தமிழந்து விட்டன . கலை இலக்கியங்கள் என்பதை நவீன மொழியியல் மொழியின் தகவல் தொகுதி எனவும், மொழிக் கிடங்கில் சேமித்து வைக்கப்படும் அமைப்புகளின் வெளிப்பாட்டுக்கேற்பவே புரிந்து கொள்ளப் படுகின்றன எனவும் விளக்கிக் காட்டியுள்ளது. மொழியைப் பயன்படுத்தும் நபரின் /கூட்டத்தின் சேமிப்புக் கிடங்குப் படிமங் களுக்கேற்பவே வகைப்பாடும் வடிவமும் கூட வேறுபடுகின்றன என்பது அதன் தொடர்ச்சியான கண்டுபிடிப்பு. 

மொழியை அறிவியலின் பகுதியாகப் புரிந்து கொள்ளத் தொடங்கிய பின் மொழியின் தொகுதியான கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் அறிவியலின் பகுதிகளால் விளங்கிக் கொள்வதில் சிக்கல் இல்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில் அறிவியலின் பகுதிகளை விளக்கப் பயன்படும் தொழில் நுட்பக் கருவிகளை மொழிக் கல்விக்கும், அதன் விளைவுகளான கலை இலக்கியக் கல்விக்கும் பயன்படுத்துதல் தவிர்க்க முடியாதது என்றே நினைக்கிறேன். அத்துடன் இப்போதுள்ள அறிதல் முறையை விட- எண்ணிக்கை சார்ந்தும் தரம் சார்ந்தும் கூடுதல் பலன் அளிக்கும் புதிய வரவுகள் நமது துறைக்குள் நுழையும்போது அவற்றை ஏற்றுப் பயன்படுத்திக் கொள்வதே வளர்ச்சியை விரும்பும் மனிதக் கூட்டத்தின் இயல்பு.

தமிழர்கள் அண்மைக்காலத்தில் வாழ்வாதாரங்கள் சார்ந்து விரைவான வளர்ச்சிக்காக எதனையும் ஏற்றுக் கொள்ளும் வேகத்தில் நான்கு கால் பாய்ச்சலைக் காட்டி வருகின்றனர். அறிவியல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் என அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு உலகச் சந்தையின் உற்பத்தியாளர் களாகவும், நுகர்வோர்களாகவும் விரைந்து மாறிக் கொண்டிருக்கின்றனர். அதனை நோக்க, தமிழ் மொழிக் கல்வியும், இலக்கியக் கல்வியும் அதனோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டியது கட்டாயம். கட்டாயம் என்பதை விட நெருக்கடி என்றே குறிப்பிடலாம். இதை கற்பவர்களைவிடக் கற்பிப்பவர்களே முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியான புரிந்து கொள்ளலின் முதல் படியே இக்கட்டுரையின் முன் வைப்பு என்று கூடச் சொல்லலாம்.

கற்பித்தலும் கருவிகளும்

கற்றல்-கற்பித்தல் என்பதைப் பற்றி விரிவாகப் பேசும் பவணந்தியின் நன்னூல்

‘’ காலமும் இடனும் வாலிதின் நோக்கி 
கொள்வோன் கொள்வகை அறிந்து’’-36

பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி 
 சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி -40

ஒரு குறிகேட்போன் இருகால் கேட்பின்
 பெருக நூலில் பிழைபாடு இலனே’’ -42

முக்கால் கேட்பின் முறை அறிந்து /உரைக்கும் -43
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
காற்கூறு அல்லது பற்றலன் ஆகும் -44

அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் 
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மைஅறு புலமை மாண்புடைத்து ஆகும். -45

எனச் சூத்திரங்களை எழுதி வைத்துள்ளது. இச்சூத்திரங்கள் கற்பிப்பவனும் கற்பவனும் எவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்தும் நோக்கம் கொண்டன. இச்சூத்திரங்களில் வலியுறுத்தப் படும் நிலைக்கேற்ப அமையும் பள்ளிகள் ஆசிரியனை அண்டிக் கற்கும் குருகுலக் கல்விமுறையாகத் தான் இருக்க முடியும். நிகழ்காலக் கல்வி உலகம் ஆசிரியரை மையமிட்ட கல்வி முறையிலிருந்து மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு நகரும் போது கற்பித்தலில் முக்கியப்பங்கு வகித்த ஆசிரியரின் இடம் கேள்விக்குறியாக ஆக்கப்படுவதும்,இடத்தைக் கருவிகள் பிடித்துக் கொள்வதும் இயங்கியல் நிலை என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இங்கே கருவிகள் என்று பன்மையில் சொன்னாலும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கருவியாக இருப்பது கணினி மட்டும் தான் .

மரபான வகுப்பறைக் கல்வியில் நீண்ட காலமாகப் பயன் பாட்டில் இருந்து வரும் கருவிகள் கரும்பலகை களும் வெண்கட்டிகளும். ஆசிரியனின் குரலால் மட்டுமே தகவல்களையும், சூத்திரங்களையும், கருத்துக் களையும், விளக்கங்களையும், வழிமுறைகளையும் சொல்லி, மாணவர்களின் மனதில் பதிய வைத்து நிலை நிறுத்த முடியாது என்ற காரணத்தால் எழுதிப் போட்டுக் குறித்துக் கொள்ளும்படி ஆசிரியர்கள் வலியுறுத்தும் பொருட்டே கரும் பல¢ சுண்ணாம்பினால் உருவாக்கப்பட்ட வெண்கட்டிகளும் பயன்பாட்டில் இருந்தன; இப்போதும் இருக்கிறது. எழுதிப் போடும் ஆசிரியரின் உடல் நலம் கருதி வண்ணப் பலகைகளும் எழுதுகோல்களும் பின்னர் பயன்பாட்டுக்கு வந்தன.பலகைகளில் எழுதிப் போட்டதற்கு முன்பு எண்ணும் எழுத்தும் மணல் பரப்பில் எழுதிப் பயிற்சி செய்யப்பட்டது.

கரும்பலகைகள் வெண்கட்டிகளின் இடத்தை அட்டைகளால் தயாரிக்கப் பட்ட அட்டவணைகளும் சுவரொட்டிகளும் நிரப்பியது கருவிசார் கல்வி நோக்கில் அடுத்த கட்ட வளர்ச்சி. நிலைத்த தன்மையிலான அட்டவணைகள், சுவ ரொட்டிகள் போன்றவைகளுக்கு மாற்றாக - மின்சாரத்தைப் பயன்படுத்திய தொழில் நுட்ப மாற்றமாக - குறிப்புப் பலகை விரிப்புக் கருவி வந்தது. பிளாஸ்டிக் தாள்களில் எழுதி விரித்து காட்டிய விரிப்புக் கருவி கரும்பலகையின் எழுதிப் போடுதல் என்பதற்கு மாறாக முன்னரே தயாரித்த பாடங்களையும் உட்குறிப்புக்களையும் நிரந்தரமாக வைத்துக் கொள்ளப் பயன்பட்டன . இவையெல்லாமே கற்பித்தல் என்னும் வினையைச் செய்யும் ஆசிரியர்களுக்கு உதவும் கருவிகள் தான்.

கருவிகள் சார்ந்த கல்வியின் வரலாற்றில் தொடர்ந்து கற்கின்ற மாணாக் கருக்கு உதவும் கருவிகள் எதுவும் வரவில்லை. அவர்கள் தங்கள் குறிப்பு களைத் தாள்களில் எழுதி வைத்தும், பிரதி எடுத்தும் மட்டுமே படித்து வந்தனர். வகுப்பறையில் கிடைக்காத தகவல்களையும் விளக்கங்களையும் தேடி நூலகத்திற்குச் செல்லவும் வேண்டியிருந்தது.

கற்பித்தல் -கற்றல் என்ற வினையில் இருசாராருக்கும் சம அளவில் பயன்படும் தொழில் நுட்பக்கருவியாக கணினி வந்துள்ளது என்பது ஒருவிதத்தில் கல்வியில் ஏற்பட்டுள்ள புரட்சி தான். புரட்சி என்பது அடித் தளத்திலிருந்து ஏற்படும் பெரும் மாற்றத்தைக் குறிக்கும் சொல். கணினி மரபான வளாகக் கல்வியின் வெளியான வகுப்பறைகளிலும்,புதிய முறை களான திறந்த நிலைக் கல்வியிலும் புதிய புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கணினி கற்பிக்கும் ஆசிரியர்களின் வேலைப் பளுவையும் கற்பித்தல் உத்தியையும் மட்டுமே மாற்றி விட்ட கருவி அல்ல. மாணாக்கர்களின் கற்றல் முறையையும் வெளிப்படுத்தும் முறையையும் மாற்றி விடும் கருவியாக ஆகிக் கொண்டிருக்கிறது.

கணினி என்னும் மந்திரப் பெட்டி

கணினி உருவாக்கும் சாத்தியப்பாடுகளையும் வெளியையும் பற்றிப் பேசும் இந்த நேரத்தில் சமகாலத் தமிழின் மிக முக்கியக் கவியான சேரன் பயன்படுத்திய அந்தச் சொற்றொடர் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.ஆறாம்திணையும் ஏழாம்திணையும் என்ற அவரது பத்தித் தலைப்பு ஆழமான உள் அர்த்தங்கள் கொண்ட ஒன்று. வாழும் நிலப் பரப்பையும் அதன் சார்புப் பகுதிகளையும் இணைத்துக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரித்துப் பேசியவர்கள் தமிழர்கள். தமிழ் அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்பதில் பற்றுறுதி கொண்ட இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டுப் புலம் பெயர வேண்டிய நெருக்கடிக்கு உள்ளான போது புலம் பெயர் தேயங்களை ஆறாம் திணையாகக் கருதிக் கொண்டார்கள். அப்புலம் பெயர் தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் உசாவிக் கொள்ளவும் விவாதிக்கவும் கூடிய வெளியாக இன்று கணினியின் வெளியையே கருதுகின்றனர். அவ்வெளியையே சேரன் ஏழாம் திணை எனக் குறிப்பிட்டார்.

புலம் பெயர் தேயங்களின் நிலத்தையும் பொழுதையும் முதல் பொருளாக ஏற்றுக் கொண்டு எல்லாவகைத் தொழிலையும் செய்பவர்களாக மாறிக் கருப்பொருள் அடையாளங்களை இழந்து விட்ட அவர்களின் தாய் மண் ஏக்கமும், ஏக்கத்தின் நிமித்தமும் ஆறாம் திணையின் உரிப்பொருளாக மாறி விட்டன. அதிலிருந்து விலகிய புலம்பலும், புலம்பல் நிமித்தமும் ஏழாம் திணையின் உரிப்பொருள் எனக் கூறத்தக்க வகையில் கண்புலனாக ஏழாம் திணையின் வெளி விரிந்து விட்டது. கணினி உருவாக்கித் தந்துள்ள ஏழாம் திணைக்குள் வாழவும் பழகிக் கொண்டு வருகிறது ஈழத்துத் தமிழ் மனம். இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் என்னும் நெருக்கடியைச் சந்திக்காமலேயே இந்தியத் தமிழர்களும் ஏழாம் திணைக்குள் வாழ வேண்டியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். தாராளமயத்தின் தொடர்ச்சியான உலகமயம் என்னும் நெருக்கடி அதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கட்புலனாக வெளிப்பரப்பைத் தன்னகத்தே கொண்ட கணினியின் பகுதிகளை முதலில் காணலாம்.

கணினியின் பகுதிகள்

ஒருவரின் இருக்கைக்கு முன்னால் இருக்கும் மேசையில் வைத்துக் கொள்ளப்படும் தனியாள் கணினியில் மூன்று பகுதிகள் உண்டு. முதலாவது மையப்படுத்தப்பட்ட வினைபுரி அலகுப் பகுதி . ஆங்கிலத்தில் சி.பி.யூ (CPU) எனக் குறிக்கப்படும் கொள்கலன் பகுதி ஆகும். இரண்டாவது பகுதி விரித்துகாட்டும் திரவப்படிகத் திரைப் பகுதி (Monitar)யாகும். மூன்றாவது பகுதி இவ்விரண்டையும் இணைத்து இயக்கப் பயன்படும் விசைப் பலகை (Keyboard). இம்மூன்றைத் தவிர அச்சிடும் கருவி (Printer) யையும் தடையற்ற மின்சார விநியோகத்திற்கான மின்மாற்றியையும் இணைத்து வைத்துக் கொள்ளும் போது எளிமையான கணினி அலகு முழுமையாகி விடுகிறது. அச்சிடும் கருவியைத் தவிர்த்த முதன்மையான மூன்றையும் இணைத்து ஒரே கருவியாக வந்து விட்டது மடிக்கணினி. ஓர் ஆசிரியரின் பயணப் பெட்டிக்குள் மடித்து வைத்துக் கொள்ளும் மடிக் கணினியோடு மின்சாரச் சேமிப்புக் கலனையும் இணைத்துக் கொள்ள வேண்டும். மின் வசதி உள்ள இடத்தில் நேரடி மின்சாரம் மூலமும், மின்சார வசதி இல்லாத இடத்தில் மின்சேமிப்புக் கலன் மூலம் அதை இயக்கலாம்.

மடிக் கணினியோ அல்லது தனியாள் கணினியையோ சொந்தமாக்கிக் கொள்ளும் ஒர் ஆசிரியர் தனது பயன் பாட்டிற்கெனக் குரல் பதிவானையும் (Voice Recorder), பிரபஞ்சத் தொடர் பேருந்து (USB) என அழைக்கப்ப்படும் எழுதுகோல் சேமிப்பானையும் (Pen Drive) வாங்கி வைத்துக் கொண்டால் நூலகம், வகுப்பறை, தேர்வுக் கூடம் என அனைத்திலும் நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியோடு கற்பிக்கும் தொழிலைச் செய்து விட முடியும். ஆசிரியரின் நேரடி வருகை இல்லாமலேயே கூட இக்கருவிகள் அவரது இடத்தை நிரப்பி விடும் தன்மை கொண்டவை. கணினியின் திரவப் படிகத் திரை வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையின் மாற்று வடிவமாக விளங்கத் தக்கது. அதனை இணையத்தின் மூலம் இணைத்து விடும் நிலையில் அதுவே ஒரு நூலகம். சாதாரண நூலகம் அல்ல உலக நூலகங்கள் அனைத்தோடும் இணைத்துக் கொள்ளும் மாபெரும் நூலகம். அந்நூலகத்தில் அச்சிட்ட நூல்கள் மட்டுமே கிடைக்கும் என்பதில்லை. குரல் வடிவ நூல்களும் காட்சி வடிவ நூல்களும் கூடக் கிடைக்கின்றன.

அ.ராமசாமி, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மாணாக்கர்களுக்கு ஒருமுலை இழந்த திருமாவுண்ணியின் கதை இளங்கோவடிகள் தொடங்கி இந்திரா பார்த்த சாரதியின் கொங்கைத் தீ, ஜெயமோகனின் கொற்றவை வரை அடைந்துள்ள மாற்றத்தைச் சொல்வதற்காகத் தயாரித்த பாடக் குறிப்புகளை எந்தப் பல்கலைக் கழகத்திலும் கல்லூரியிலும் பயன் படுத்தலாம். இப்போதுள்ள கற்பித்தல் முறையில் வல்லுநர்களை வரவழைத்து அவரிடம் பாடம் கேட்கும் முறைக்கு மாறாக, இணையவழி வகுப்பறைகளில் வல்லுநரும் மாணாக்கரும் இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்து கொள்ளலாம். பாடம் நடத்தலாம்; பங்கேற்கலாம். தேர்வு எழுதலாம்; மதிப்பீடு செய்யலாம்.

தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களாகவும் வல்லுநர்களாகவும் விளங்குபவர்களின் குறிப்புகளைக் குரல் பாட மாகவும், நகரும் காட்சிப் படிமங்களாகவும் மாற்றி விட்டால், அவரது இன்மைக்குப் பின் வரும் அடுத்த தலைமுறை மாணவனும் அவரிடம் பாடங்கேட்க முடியும். இத்தகைய சாத்தியங்களை வழங்கும் நவீனத் தொழில் நுட்பத்தை வேண்டாம் என்று மறுப்பதன் மூலம் இலக்கியக் கல்வியையும் இலக்கிய மாணாக்கர் களையும் பின் நோக்கிய பயணத்திற்குத் தூண்டும் வேலையை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமா..? என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பின்னோக்கி நடப்பதில் சாதனைகள் நடத்தி உலக சாதனைகளைப் பதிவு செய்யும் நூல்களில் தங்கள் பெயர்களைத் தனி நபர்கள் பதிவு செய்து கொள்ளட்டும். ஒரு சமூகம், மொழி சார்ந்த பண்பாட்டுக் குழுமம் அப்படிப் பட்ட சாதனைகளைச் செய்ய வேண்டியதற்கான அவசியங்கள் எவையும் இல்லை.

கற்க வேண்டிய கணினிப் பாடங்கள்

நவீனத் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலக்கியக் கல்வியைக் கற்பிக்க விரும்பும் ஆசிரியருக்குத் தெரிய வேண்டிய கணினிப் பாடங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலானவை தான். பாடங்கள் அல்லது மென் பொருட்கள் என அவற்றைக் குறிப்பிடுகிறார்கள். மைக்ரோசாப்ட் என்னும் மென் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரால் அழைக்கப்படும் அலுவலப் பணிசார் வார்த்தை (Microsoft office word) என்னும் மென்பொருள் அவற்றுள் முதன்மையானது. அம்மென் பொருள் காலத்தின் தேவைக் கேற்ப அவ்வப்போது புதுப்பிக்கப் பட்ட பதிப்புகளாக விற்பனையில் உள்ளன. ஒருவரின் தேவையை யொட்டி எந்தப் பதிப்பு தேவையோ அதனை வாங்கித் தனது சொந்த உபயோகக் கணினியில் பதிவு செய்து கொள்ளலாம்.முதலில் விண்டோஸ் என அழைக்கப்பட்ட அந்த மென்பொருள் தற்போது விண்டோஸ் எக்ஸ்பி என்ற மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பாகக் கிடைக்கிறது.முதல் தலைமுறைக் கணினி என்பதில் தொடங்கி வரிசையாகக் கற்க வேண்டும் என்ற தேவை இல்லை. நேரடியாக சமீபத்திய தலைமுறைப் பதிப்புக்கே போய் விடலாம். கணினிக் கல்வியில் எப்போதும் வரிசைக் கிரமம் பின் பற்றப்படுவதில்லை. அண்மைக்காலப் பதிப்பே அதற்கு முக்கியம்.

கற்பித்தலில் தொடக்க நிலைக் கூறாக இருப்பது எண்ணும் எழுத்தும் என்பதை நாமறிவோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது பழைய வாக்கியம். இவ்வடிப்படைக் கூறுகள் இரண்டும்¢ அலுவலப் பணிசார் வார்த்தை என்ற மென் பொருளில் இருக்கின்றன. பல கூறுகள் கொண்ட அம்மென் பொருளில் ஒரு சில கூறுகளை மட்டும் ஒரு மொழி ஆசிரியன் கற்றுக் கொண்டால் போதும். கணினிக் கல்வியில் மைக்ரோசாப்ட் வேர்ட் என அழைக்கப்படும் கூறு அடிப்படையானது. அலுவலகப் பயன்பாட்டில் உள்ள கடிதங்கள், வரைவுகள், தயாரிப்பதற்கான இந்தக் கூறு ஆசிரியனின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்வதாக இருக்கிறது. குறிப்புகள், பாடங்கள். கட்டுரைகள், என எழுதித் தனித்தனிக் கோப்புகளில் சேமித்து வைத்துக் கொள்ள இந்த மென் பொருள் பயன்படும். இதன் தொடர்ச்சியாக உள்ள மைக்ரோசாப்ட் எக்ஸல் என்னும் கூறு எண்சார் கணித ஆசிரியர்களுக்கும், கணக்குப் போடுபவர்களும் பயன்படும் பகுதியாக உள்ளது. அதையும் கற்று வைத்துக் கொண்டால் ஆசிரியப் பணியோடு நிர்வாகப் பணியையும் சேர்த்துச் செய்யலாம்.

மைக்ரோசாப்ட் அலுவலக வார்த்தை என்னும் மென்பொருளில் இருக்கும் இன்னொரு கூறு சக்தி மையம் - பவர் பாயிண்ட் - என அழைக்கப்படுகிறது. இந்த கூறும் கறபித்தல் -கற்றல் வினையில் முக்கியப் பங்காற்றும் தன்மை கொண்டது. கரும்பலகையில் எழுதிப் போட்டுப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக வண்ண வண்ண எழுத்துக்களோடும் படங்களோடும் கூடிய பாடங்களை வெண் திரையில் வழங்கலாம். தேவையான கால அளவில் நிறுத்தித் தங்கள் விருப்பம் போலப் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பாடம் நடத்தலாம். அல்லது ஒவ்வொரு பக்கமும் இத்தனைக் கால அளவிற்குத் தெரிய வேண்டும் என முடிவு செய்து நகர்த்தும் வாய்ப்புகளும் உண்டு. நகரும் குறிப்புகளுக்கேற்ற விளக்கங்களை ஆசிரியர் நேரடியாக இருந்து விளக்கவும் செய்யலாம். அல்லது அவற்றைக் குரலாகப் பதிவு செய்துவிட்டு இயக்கவும் செய்யலாம்.

மைக்ரோசாப்ட் அலுவலக வார்த்தைகள் என்ற அடிப்படை மென்பொருளைக் கற்கும் போதே அதன் முதல் கூறான மைக்ரோசாப்ட் அலுவலகக் கருவிகள் (Microsoft office Tools) என்பதையும் கற்றுக் கொள்ள முடியும். ஒரு புத்தகத்தைப் படிப்பவன் அல்லது குறிப்பேட்டில் எழுதுபவன் செய்யும் வேலைகளான ஆரம்பிப்பது, முடிப்பது, விரிப்பது, பக்கங்களைப் புரட்டுவது, அடிக்கோடிட்டுக் கொள்வது, அடித்துத் திருத்துவது, போன்ற பணிகளையெல்லாம் கணினியில் செய்வதற்கான வழிகளைச் சொல்லித் தருவதுதான் மைக்ரோசாப்ட் கருவிகள் என்னும் பகுதியின் பாடங்கள். கோப்பு, வெட்டு, பார்வை, நுழைப்பு, அமைப்பாக்கம், உள்கருவிகள், கட்டங்கள், அட்டவணைகள், திறப்பு, உதவி என்ற தலைப்புகளில் விரியும் அதன் பாடங்கள் கணினி இயக்கத்தின் அடிப்படைகள். அவ்வடிப்படைகளின் பகுதியாகவே ஒட்டு, நகர்த்து, கட்டமிடு, பெருக்கு, சுருக்கு,எண்ணிடு, வரிகளிடை வெளியை விரி, சேமித்து வை என்ற ஆணைக¬ளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படைகளையெல்லாம் தனியாகக் கற்றுக் கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும் என்பதும் இல்லை. கடிதம் எழுதுதல், கட்டுரை எழுதுதல் என்ற நிலையில் தொடங்கி, அதன் பகுதியாகவே இவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.ஒரு கட்டுரையில் தலைப்பிடுதல், வண்ணமிட்டுக் காட்டுதல், சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்துதல், தவறுகளைத் திருத்துதல், அடிக் குறிப்பிடுதல் என வடிவம் சார்ந்த பணிகளின் போதும், அச்சிட்டுப் பிரதியைப் பெறுதல் என்ற பணி நிறைவின் போதும் இந்தக் கருவிகள் சார் பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.

மைக்ரோசாப்ட் அலுவலக எழுத்து என்ற அடிப்படைப் பாடத்தைக் கற்பதோடு தகவல் பதிவுகளைச் செய்ய உதவும் இன்னொரு மென்பொருளாக உள்ள பக்கவடிவமைப்பு (Page Maker) என்ற மென் பொருளைக் கற்றுக் கொள்வதும் கூடுதல் பலன் அளிக்கும். மைக்ரோசாப்ட் என்பதைப் போல அடோப் என்ற மென்பொருள் நிறுவனம் தயாரித்துள்ள (Adobe Page Maker) இதில் அதிகம் புழக்கத்தில் உள்ளது. நூல்களின் பக்க அமைப்பு, வடிவ அமைப்பு,இதழ் உருவாக்கம் போன்றவற்றில் இந்த மென் பொருள் அதிகம் பயன்படுகிறது. இதனோடு வரைகலை பற்றிய மென்பொருளையும் ஆசிரியர்களும் மாணாக்கர் களும் கற்றுக் கொள்வது கூடுதல் சாத்தியங்களைத் தரும்.

இப்போதைய கணினிச் சந்தையில் குறுந்தகடுகளில் பதிவு செய்யப் பட்ட தமிழ் இலக்கியப் பகுதிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உங்கள் கணினியில் பதிவு செய்து நூலகமாக மாற்றிக் கொள்ளலாம். திரைப்படக் குறுந்தகடுகளைப் போலவே இலக்கியக் குறுந்தகடுகள் அதிகம் விற்பனை ஆவதில்லை என்பதால் அதனை உற்பத்தி செய்பவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. பாரதியார் கவிதைகள், பக்தி இலக்கியங்கள், போன்றன குரல் பாடங்களாகக் கிடைக்கின்றன.

தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் அடிப்படை நூல்கள் அனைத்தும் குறுந்தகடுகளாக ஆக்கப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் இவை அனைத்தும் இப்போது வலைத்தள நூலகங்களில் சேமிக்கப்பட்டு விட்டன. அச்சேமிப்பதிவிலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால், தனியாகக் குறுந்தகடுகளை வாங்கிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. கனேடிய இலக்கியத்தோட்டம் வழங்கும் சுந்தரராமசாமி விருதைத் தனது தமிழ் தகவல் தொழில்நுட்பச் சேவைக்காகப் பெற்றுள்ள முனைவர் கல்யாணசுந்தரத்தின் மதுரைத்திட்டம் கணினிக்குள் தமிழ் இலக்கியப் பகுதிகளை உள்ளிடும் வேலையைப் பாஷா இண்டியா என்ற அமைப்பிற்காகச் செய்துவருகிறார். தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் தொடங்கிச் செவ்வியல் இலக்கியங்களும், பக்திக் கவிதைகளும், காப்பியங்களும், வலைத்தள நூலகங்களில் கிடைக்கின்றன. இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ச்சியாக உள்ளீடு செய்யப்பட்டு வாசிக்கக் கிடைக்கின்றன. தற்கால இலக்கியவாதிகளிடம் உரிமம் பெறும் சிக்கலால் உள்ளீடு செய்வதில் தடங்கல் ஏற்படுவதாகத் தெரிகிறது.

இணையத்தளம் என்னும் ஏழாம் திணை

இவைகளையெல்லாம் பயன் படுத்த வேண்டும் என்றால் அலுவலகப் பயன்பாடு அல்லது பக்க அமைப்பு என்ற அடிப்படை மென்பொருளோடு அவசியமாக இன்னொரு மென் பொருளையும் கற்றுக் கொள்ள வேண்டும். இணையதள இயக்கத்திற்கான மென் பொருளே அது. இப்போது அதிகம் புழக்கத்தில் உள்ள இண்டெர்னெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) வழியாக இணையத்திற்குள் நுழைவது எளிமையானது. இதன் பயன்பாட்டைக் கற்றுக் கொள்ளும் போது , உலகத்தின் எந்த மூளையில் உள்ளவர்களோடும் உடனடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதைவிடவும் இணைய வலைத் தளங்களில் கொட்டிக் கிடைக்கும் நூலகங்களைப் பயன்படுத்தவும், நமது பாடங்களையும் கட்டுரை களையும் அவற்றில் ஏற்றிப் பொதுத்தளத்திற்கு அனுப்பவும் முடியும்.

இணைய வசதி கொண்ட கணினி உங்களிடம் இருந்தால் நீங்கள் விரும்பும் தினசரியை வாசிக்கலாம். வார இதழையும் படிக்ககலாம். இசைக்கச் சேரிகளைக் கேட்கலாம். திரைப் படங்களைப் பார்க்கலாம். தமிழில் வரும் இடைநிலைப் பத்திரிகைகளையும் இலக்கியச் சிறுபத்திரிகைகளையும் சில வலைத்தளங்கள் தொகுத்து அளிக்கின்றன. கீற்று, பதிவுகள், திண்ணை, தமிழ்நாதம் போன்ற தமிழ் வலைத்தளங்களின் இணைப்பாகப் பல தினசரிகளும் வார, மாத இதழ்களும், இணைய இதழ்களும் இருக்கின்றன.துறை சார் ஆய்வு இதழ்களின் இணைப்புகளும் கூடக் கிடைக்கின்றன. இவையெல்லாமல் இன்று பலரும் தங்களுக்கென வைத்திருக்கும் தனி இணைய இதழ்கள், வலைப்பூக்கள் தமிழின் இடத்தை இணையத்தில் விரிவு படுத்தி விட்டன. தனி நபர்கள் தினசரி எழுதும் கட்டுரைகளை வாசிக்கும் வாசகன் உடனடியாகத் தனது விருப்பமான எழுத்தாளனோடு கடிதம் மூலமும், குரல் மூலமும் தொடர்பு கொள்ளும் வசதிகள் இணைய வழியில் உள்ளன. பின்னூட்டங்கள் வழியாக விவாதங்களைத் தொடரலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுத்துருக்கள் சார்ந்த சிக்கலைச் சந்தித்து வந்த தமிழ்மொழி இப்போது அந்தப் பிரச்சினையிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுனிகோட் என்னும் தமிழ் விசைப்பலகைப் பரவலாக உள்ள தமிழ் எழுத்துருக்களை மாற்றித் தரும் வல்லமை உடையதாக இருக்கிறது. ஏறத்தாழ பதினைந்து எழுத்துருக்களை மாற்றித் தருகிறது யுனிகோட். பாமினி, அமுதம், இளங்கோ,இண்டோடைப், கெய்மேன், டாம், டாப், அஞ்சல், முரசு, விகடன், தினமணி, தினபூமி, தினகரன், குமுதம்,வெப்உலகம்,பல்லவர்,லிபி, டிஎஸ்சி, ¢டிசிஐஐ- இணைமதி, அருள்மதி, முதலான எழுத்துருக்களை யுனிகோட் அதன் வழியாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்காலக் கணினியில் யுனிகோட் விசைப்பலகை பொருத்தப்பட்டால் எல்லாத் தமிழர்களும் அது ஒன்றையே பயன்படுத்தும் நிலை உருவாகும். அப்படியான நிலையை உருவாக்குவதில் அரசுகளின் பங்கு கட்டாயம் இருக்க வேண்டும். தமிழர்கள் வாழும் தேசங்களான மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் இணைந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.

இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் கூகுள் (Coogle) என்ற இணைய தளம் உலக அறிவு அனைத்தையும் கணினிக்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது. ஆங்கிலத்தில் அதன் பக்கங்கள் லட்சக்கணக்கிலா, கோடிகளின் எண்ணிக்கையிலா என யாரும் கணக்கிட்டு விட முடியாது. கணந்தோறும் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கின்றன. எண்ணிக்கையிலடங்கா பக்கங்களில் விரிந்து கிடக்கின்றது கணினியின் உலகம். ஒவ்வொரு தமிழனும் தனக்கான வெளியையும் கோப்புகளையும், பக்கங்களையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். தாங்கள் விரும்பினால் அவ்வளவு விசயங்களை உருவாக்கிப் பதிவு செய்யலாம். தடையற்ற அந்த வெளியைத் தான் கண்ணுக்குப் புலப்படா ஏழாம் திணை எனக் குறிப்பிட வேண்டியுள்ளது.

மழலையர் பள்ளிக்கல்வியை முடித்த சிறார்கள் தங்களுக்கான விளையாட்டுக் களைத் தேடி இணையத்தளங்களுக்குள் பயணம் செய்கிறார்கள். பிடித்துப் போன விளையாட்டைப் பதிவிறக்கம் செய்து தனிக் கோப்பில் வைத்து அலுத்துப் போகும் வரை விளையாண்டு முடிக்கிறார்கள்.அறிவை மட்டும் அல்ல; மனிதனின் நினைப்பையும் விருப்பத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் பணியைத் தலையாய வேலையாகச் செய்து வரும் கூகுள் தமிழ்ப் பதிவுகளைத் தமிழிலேயே தேடும் வாய்ப்பை உண்டாக்கித் தந்துள்ளது. இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்தபடியாகத் தமிழுக்குத்தான் அந்த முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

இன்று தமிழை முதன்மைப் பாடங்களாக எடுத்துக் கற்கும் மாணாக்கரின் இலக்கு ஆசிரியராக ஆவது என்பதாக மட்டுமே இருக்கிறது. தமிழ்க் கல்வியின் பகுதிகளாக மொழிப் பயன்பாட்டில் தேர்ச்சி, இலக்கியப் படைப்பாக்கத்தில் ஈடுபாடு, பண்பாட்டுப் போக்கின் மீதான புரிதல் , தமிழக வரலாற்றின் இயங்குநிலையைக் கணிப்பதில் தெளிவு ஆகியனவற்றைப் பெற்றுக் கொள்ளும் தமிழ்க் கல்வியாளன் ஆசிரியத் தொழிலை மட்டுமே இலக்காகக் கொள்ள வேண்டியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். கணினிப் பயன்பாட்டின் அடிப்படைகளோடு இவற்றைக் கற்றுத் தரும் பாடத்திட்டம், அவர்களுக்கு தமிழ் பயன்படு புலமாக இருக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஏராளமான வேலைகளைத் திறந்து விடும் என்பதை அனைவரும் அறிவர். ஊடகத்துறைகளில் மட்டும் அல்ல. பதிப்புத்துறை, விளம்பரத்துறை, பதிவுகள் துறை, படியெடுத்தல் துறை, தகவல்களை உள்ளீடு செய்யும் வேலைகள் எனப் பலவும் தமிழ்க் கல்வியாளர்களை முதன்மையாக வேண்டுவன தான்.தமிழ்க் கல்வியைக் கற்பவர்கள் இவைகளை யெல்லாம் அறியாமல் அல்லது ஈடுபாடு காட்டாமல் கற்றுச் சொல்லிகளாக இருக்கும் ஆசிரியத் தொழிலையே முதன்மை இலக்காகக் கொள்கின்றனர்.

மொழி பெயர்ப்பின் அடிப்படைகள் தெரிந்திருந்த போதிலும் பிற மொழி அறிவின் அடிப்படைகளைக் கூடக் கற்க வேண்டாம் என நாம் தவிர்த்து விட்ட நிலையில் மொழி பெயர்ப்புப் பணிகள் அனைத்தும் பிறதுறைப் படிப்பாளிகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. துறைசார் மொழிபெயர்ப்பு களுக்கு அவ்வத்துறைப் புலமையாளர்களோடு சேர்ந்து பணியாற்றும் அளவுக்காவது மொழிக் கல்வியாளர்கள் பிறமொழிகளின் அறிவை - குறிப்பாக ஆங்கில மொழியறிவைப் பெற்றாக வேண்டும்.

இலக்கியக் கல்வியின் எதிர்காலமும், இலக்கிய மாணவனின் எதிர்காலமும் முறையான நோக்கங்களைக் கொண்ட பாடத் திட்டங்களோடு தொடர்பு டையவை என்பதை நாம் நம்ப வேண்டும். அப்பாடத் திட்டங்களை முறையாகக் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஈடுபாடு குறைந்தால் பாடத்திட்டம் எதனையும் சாதித்து விடாது. ஈடுபாடு கொண்ட ஆசிரியர்கள் தங்களின் பணிகளுக்கென அடிப்படையான தொழில் நுட்ப அறிவையும் இணைத்துக் கொள்ளும் போது அதன் சாத்தியங்கள் விரிவான எல்லைகளுக்குள் பயணம் செய்யும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கலைச்சொல் அகரவரிசை

அச்சிடும் கருவி -Printer
அட்டவணைகள் -Table
அமைப்பாக்கம்- Format
அலுவலப் பணிசார் வார்த்தை - Microsoft office word
அறி- Know
அறிவு - Knowledge
அறிவியல் -Science
இணையம் -Internet
இணைய நூலகம் -E -Library
இணைய பாடம் E-Lesson உதவி-Help
இண்டெர்னெட் எக்ஸ்புளோரர் -Internet Explorer
உள்கருவிகள்-Tools
கட்புலனாகா வெளி -Virtual Space
கரும்பலகை வெண்கட்டி- Black board and chalk piece
குரல் பதிவான் -Voice Recorder
குறிப்புப் பலகை விரிப்புக் கருவி-Slide projector
குறுந்தகடு-Compact Disc
கூகுள் - Coogle
கோப்பு -File
சமூக அறிவியில்- Social Sciece
சாளரம் - Window
தடையற்ற மின்சார விநியோகம் (UPS) -Un interrepted Power Supply
தனியாள் கணினி- Personal Computor
திரைப் பகுதி -Monitar
திறப்பு -Start
நுழைப்பு -Insert
பக்கவடிவமைப்பு -Page Maker
பதிவிறக்கம்- Download
படிகத்திரை விரிப்பு- liquid crystal display projector
பார்வை-View
பாடத்திட்டம் -Syllabus
பாட நூல்கள்-Text books
பார்வை நூல்கள்-References
படிக்க வேண்டிய நூல்கள்- Further Readings
பிரபஞ்சத் தொடர் பேருந்து (USB) -Universal Serial Bus
பின்னூட்டங்கள் - Comments and Addisions
எழுதுகோல் சேமிப்பான் - Pen drive
மடிக் கணினி- Desk Top Computor
மையப்படுத்தப்பட்ட வினைபுரி அலகு -(CPU) - Central Processing Unit
வகுப்பறைக்கல்வி -Class room teaching
வலைத்தள இணைப்புகள் -Links
விசைப்பலகை- Keyboard
வெட்டு- Cut
வெளி வளாகக் கல்வி -Off Campus Education
யுனிகோட் –Unicode
பின் இணைப்புகள்
பாஷா இண்டியா என்னும் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை
___________________________________________________________________________

ஆபீஸ் 2003 சிறப்புகளும் பயன்களும் விண்டோஸை வெளியிட்டு வெற்றிபெற்ற மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் அதைத் தொடர்ந்து எம்எஸ்ஆபிஸ் தொகுப்பையும் வெளியிட்டது. எளிதான பயன்பாடு, மற்றும் சுலபமான ஆப்ஷன்கள் என்று பலவற்றை உள்ளடக்கிய எம்எஸ் ஆபிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று எம்எஸ் ஆபிஸ் தொகுப்பை பயன்படுத்தாத வர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த எம்எஸ் ஆபிஸின் பயன்பாடுகள் அனைத்தும் தற்போது ஆபிஸ் 2003 என வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆபிஸ் 2003 மற்றும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை தற்போது முழுக்க முழுக்க தமிழிலேயே இயக்கிக்கொள்ளலாம். இதன் கட்டளைகள், மெனுக்கள் மற்றும் பயன்பாட்டு முறைகள் அனைத்தையும் மைக்ரோ சாஃப்ட் தற்போது தமிழிலேயே அமைத்துள்ளது. தமிழில் ஆபிஸ்2003-யில் டைப் செய்ய லதா எழுத்துருவை நாம் தேர்வு செய்திருந்தாலே போதும். மேற்கூறிய அனைத்து அப்ளிகேஷன் களிலும் தமிழில் டைப் செய்துகொள்ளலாம். எம்எஸ் ஆபிஸ் தொகுப்பில் ஐந்து சாஃப்ட் வேர்கள் உள்ளடங்கியுள்ளது. அவை 1. எம்எஸ் வேர்டு 2. பவர்பாயின்ட் 3. எம்எஸ் எக்சல் 4. எம்எஸ் ஆக்சஸ் 5. ஃபிரன்ட்பேஜ் எடிட்டர் 
எம்எஸ் வேர்டு எம்எஸ் வேர்டில் டாக்குமென்டை டைப் செய்ய, அதை எடிட் செய்ய, புகைப்படங்களை உள்ளீடு செய்ய, ப்ளோசார்ட், பேனர்ஸ், டேபிள், ஃபான்ட்களுக்கு விதவிமான வண்ணங்கள் கொடுக்க , ஏரோக்கள், கால்அவுட்ஸ் போன்றவற்றை வரைய என்று பலவித ஆப்ஷன்களை இது உள்ளடக்கியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு தேவையான ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை அழகாக டைப், லேஅவுட் செய்து கொடுப்பதற்கும் எம்எஸ் வேர்டு ஒரு வலிமையான சாஃப்ட்வேர் ஆகும். மேலும் இதைக் கொண்டு ஒரு புத்தகம் அச்சிடும் அளவுக்கு இதில் நாம் லேஅவுட் செய்து கொள்ள முடியும். 
கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பு டைப்ரைட்டர் மிஷினைக் கொண்டே ப்ராஜெக்ட் ரிப்போர்ட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதில் நேரம் அதிகம் செலவாகும். அதே போல் அழகாகவும் நாம் நினைத்தவாறும் செய்ய முடியாது. எம்எஸ் வேர்டில் நாம் நினைத்தவாறு பக்க வடிவமைப்பை கொண்டு வர முடியும். மேலும் நாம் டைப் செய்து சேமித்து வைத்த ப்ராஜெக்ட்டை நினைத்தபோது மாற்றங்களை செய்து கொள்ளலாம். 

டைப் செய்த ஆங்கில வார்த்தைகளின் ஏதேனும் இலக்கணப் பிழையோ அல்லது சொற்பிழையோ நம்மை அறியாமல் ஏற்பட்டால் உடனே அந்த வார்த்தைகளை அடிக்கோடிட்டு காட்டும். அடிக்கோடிட்ட இடத்தை மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்தால் அந்த இடத்திற்குரிய பலவகையான வார்த்தை அமைப்புகளை காட்டும். அதில் நமக்கு தேவையானதை செலக்ட் செய்து கொள்ளலாம். மற்ற எந்த சாஃப்ட்வேரிலும் இந்த பயன்பாடு கிடையாது. 
ஏற்கனவே டைப் செய்த டாக்குமென்ட்டில் உள்ள சொற்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகளை கண்டுபிடித்து நீக்குவதற்கு கிராமர் (spelling & grammer) ஆப்ஷனை செலக்ட் செய்யலாம். அல்லது F7 கீயை பயன்படுத்தி விரைவாக இயக்கலாம். வேர்டில் நாம் சேமிக்கும் ஃபைல்கள் .doc என்ற ஃபார்மெட்டில் சேமிக்கப்படும். 

பவர் பாயிண்ட் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பில் அனிமேஷன் எபெக்ட்ஸ்கள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்ணைக் கவரும் கிராபிக்ஸ் காட்சிகளை உள்ளடக்கிய சாஃப்ட்வேராக பவர் பாயிண்ட் விளங்குகிறது. இதில் ப்ரசன்டேஷன் பணிகளை மிக எளிமையாக செய்ய முடியும். 
ஒரு நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, அதன் படிப்படியான வளர்ச்சி, அதில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள், அதன் தற்போதைய நிலவரம் போன்ற அனைத்து விபரங்களையும் பவர்பாயிண்டில் மிக எளிமையாகவும், கண்ணைக்கவரும் ஒலி, ஒளி அமைப்புடன் அழகாக செய்யலாம். வேர்டு டாக்குமென்டில் இந்த வசதி கிடையாது. 

அனிமேஷன் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட டெக்ஸ்டின் மேல் மவுஸ் சென்றால் அதற்கு ஒலி அமைப்புகளை கொடுத்துக் கொள்ள முடியும். பவர் பாயிண்ட் உள்ளேயே நிறைய சவுண்டு ஃபைல்கள் உள்ளது. புதிதாக ஏதேனும் சவுண்டு ஃபைலை சேர்க்க வேண்டுமென்றால் இம்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி சவுண்டு ஃபைலை சேர்த்துக் கொள்ள முடியும். 

பவர் பாயிண்ட்டின் உள்ளேயே பல வகைகளில் கிளிப் ஆர்ட்கள் உள்ளது. டெக்ஸ்டிற்கு ஏற்றவாறு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக கிளிப் ஆர்ட்களை பயன்படுத்த வேண்டுமென்றால் இம்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதில் உள்ள ஸ்லைடு ஷோ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் உள்ள வியூ ஷோ என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் ஃபுல் ஸ்கிரின் மோடுக்கு நாம் செய்த பணிகள் வந்து விடும். ஒவ்வொரு முறை மவுஸின் மூலம் கிளிக் செய்து அடுத்தடுத்த பக்கத்திற்கு போகலாம். ஸ்லைடு ஷோவை F5 கீயை அழுத்தியும் விரைவாக இயக்க முடியும். பவர் பாயிண்டில் சேமிக்கப்படும் ஃபைல்கள் ppt என்ற ஃபார்மெட்டில் சேமிக்கப்படும். 

எக்சல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பெயர், முகவரி, அவர் வாங்கும் சம்பளம் போன்ற அனைத்து விபரங்களையும் மைக்ரோசாஃப்ட் எக்சலில் பதித்து உரிய நேரத்தில் குறிப்பிட்ட தொழிலாளர்களின் தேவைப்படும் விபரங்களை எடுத்துக் கொள்ளலாம். 

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பெயர், முகவரி, அவர் வாங்கும் சம்பளம் போன்ற அனைத்து விபரங்களையும் மைக்ரோசாஃப்ட் எக்சலில் பதித்து உரிய நேரத்தில் குறிப்பிட்ட தொழிலாளர்களின் தேவைப்படும் விபரங்களை எடுத்துக் கொள்ளலாம். 
பெரும்பாலும் கணக்கு சம்பந்தமான பணிகளை எளிமையாக செய்ய எக்சல் பெரிதும் பயன்படுகிறது. ஒரு நிறுவனத்தில் மாதம் மொத்தம் எவ்வளவு தொகை செலவாகியிருக்கிறது. மீதம் எவ்வளவு இருக்கிறது. செலவிடப்பட்ட தொகைக்கான சதவீதம் போன்ற அனைத்து விபரங்களையும் சில நொடிப்பொழுதில் கொண்டு வந்து விடலாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்து கணக்கு சம்பந்தமான பணிகளை மிக எளிமையாக குறைந்த நேரத்தில் முடித்து விடலாம். கால்குலேட்டரை வைத்து பயன்படுத்துவதை விட இதில் விரைவாக பயன்படுத்த முடியும். 
----------------

தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

 2. ஆபீஸ் 2003யை முழுமையாக தமிழிலேயே பார்வையிட 

உலக அரங்கில் அலுவலக பயன்பாட்டில் ஆபீஸ் எக்ஸ்பி மென்பொருள் இல்லையேல் எதுவுமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இம்மென்பொருள் அலுவல் பணிக்கு நூறு சதவீத தேவை என்ற மாற்றம் உருவாகியுள்ளது. எம்எஸ் வேர்ட், பவர்பாயிண்ட், எக்ஸல் ஆகிய மூன்று பிரதான மென்பொருட்களை உள்ளடக்கியதே ஆபீஸ் எக்ஸ்பி ஆகும். இதன் புதிய வெளியீடான ஆபீஸ் 2003யின் மெனுக்கள், கட்டளைகள், கேள்விகள் மற்றும் உதவிகளையும் தமிழிலேயே கணினியில் இயக்கலாம். 
ஆபீஸ் 2003 மென்பொருளை நம் கம்ப்யூட்டரில் பொருத்தினால் அதன் அனைத்து பகுதிகளும் ஆங்கிலத்திலேயே தோற்றமளிக்கும். ஆங்கிலத்தில் தோற்றமளிக்கும் ஆபீஸ் 2003-யை அப்படியே தமிழில் மாற்றிக் கொள்ளலாம். அதன் மெனுக்களையும், கட்டளைகளையும் தமிழில் மாற்றுவது எப்படியென பார்ப்போமா? 
ஆபீஸ் 2003 நம் கணினியில் பொருத்தியவுடன் தமிழில் மாற்றிட www.bhashaindia.com இணையத்தளத்திலுள்ள “தமிழ்” பகுதியை தொடர்பு கொள்ள வேண்டும். தமிழ் பகுதியில் “Download Office LIP” என்ற மெனுவை கிளிக் செய்தால் பல இந்திய மொழிகளின் பட்டியல் தோற்றமளிக்கும். இதில் நமக்கு வேண்டிய தமிழ் மொழியை Get it now என்ற கட்டளையை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும். இதன் அடுத்த பகுதியாக நம்முடைய சொந்த குறிப்புகளை கேட்டு கேள்வியெழுப்பும். இதனை பூர்த்தி செய்வதால் நமக்கு bhashaindia தளத்தின் புதிய தகவல்களும், மைக்ரோ சாஃப்ட்டின் புதிய தயாரிப்பு தகவல்களும் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 

இதன் அடுத்த கட்டத்தில் நமக்கு இலவச டவுன்லோடாக “லேங்குவேஜ் இன்டர்பேஸ் பேக்” அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள LIP.EXE & TAMIL-GS.EXE ஆகிய இரு பைல்கயையும் டவுண்லோட் செய்ய வேண்டும். நாம் ஆபீஸ் 2003 பொருத்திய கணினியில் இந்த “ஆபீஸ் லேங்குவேஜ் இன்டர்பேஸ் பேக்” -இன் இரு பைல்களையும் முதல்கட்டமாக இயக்கவேன்டும், இதன்பின் விண்டோஸின் ஸ்டார்ட் (start) மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் (All Programs) பகுதியில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பொருத்திருக்கும் தொகுப்பு பட்டியலை பார்க்கவேண்டும். தொகுப்பு பட்டியலில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் டூல்ஸ் என்ற பகுதியில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்2003 லேங்குவேஜ் செட்டிங்ஸ் மெனுவை இயக்கிவுடன் புதிய மெனு தோற்றமளிக்கும். இம்மெனுவில் யூசர் இன்டர்பேஸ் அண்டு ஹெல்ப் தேர்வு செய்யப்பட்டவுடன் டிஸ்ப்ளே ஆபீஸ் 2003 இன் தமிழ் என்ற பகுதியில் தமிழ் என்பது தழிலேயே தோற்றமளிப்பதை கிளிக் செய்து தேர்வு செய்யவேண்டும். இத்துடன் தமிழில் ஆபீஸ்2003 யை தமிழில் இயக்குவதற்கான பணி முடிந்தது. 


ð¤ù¢ Þ¬í𢹠3

“?????????? ??????? ????????????? ???????” இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.
எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகலாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிழ்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.
மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்திருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகிறோம்.
தமிழ் இலக்கியக்களின் சரித்திம் மிக பழமையானது. முதற் சங்க கால நூல்கள்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது. காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.

ð¤ù¢ Þ¬í𢹠4. திரு. கு. கல்யாணசுந்தரம் 
தமிழ் டிஜிட்டல் நூலக துறைக்கு பிள்ளையார் சுழி போட்டவர். இணையத்தில் புகழ் பெற்ற மதுரைத்திட்டத்தின் முன்னோடி. சென்னை மாநகரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்புவரை பயின்றவர். சென்னை லயோலா கல்லூரியில் இரசாயனத் துறையில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி பட்டப் படிப்பு முடித்த பிறகு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் இரசாயனத் துறையில் ஆராய்ச்சி மேற்க்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் மேல்நிலை ஆராய்ச்சியில் பங்கு பெற்ற பின், 1979ல் தற்போது வசித்து வரும் ஸிவிஸ் நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள லுசான் நகர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் முதுநிலை விரிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் தற்போது பணிபுரிந்து வருகிறார். பாஷா இணையத்தளத்திற்காக முனைவர் கு. கல்யாணசுந்தரத்தின் வெற்றி உரைகளை தொகுத்த போது... 
இணையத்தில் நூல்களை தொகுக்கும் ஆர்வம் தங்களுக்கு எப்படி உருவானது? 
பத்து ஆண்டுகளுக்கு முன் மக்கின்டாஷ், வின்டோஸ் கணினிகளில் தமிழிலேயே நேரிடையாக உள்ளிட மயிலை என்னும் தமிழ் எழுத்துரு தயாரித்து அதை பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை காண்பிக்க திருக்குறள் 1330 குறள்களை உள்ளிட்டு மின்அஞ்சல் மூலம் உலகில் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன். அதை தொடர்ந்து பாரதியார் பாடல்கள், அவ்வையார் பாடல்கள் போன்றவற்றை உள்ளிட்டு அனுப்பினேன். 1997 ம் ஆண்டு பாலா பிள்ளை ஆரம்பித்து நடத்தும் தமிழ்.நெட் என்னும் மின்னஞ்சல் குழுவில் இணைந்தேன். இக்குழு முறையில் தழிழ் இலக்கியங்களை உலகில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தயாரித்து பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு கேள்வி எழுந்தது. அதை தொடர்ந்து 1998ம ஆண்டு பொங்கல் திருநாளன்று மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்பு தொகுப்புத் திட்டம் என்ற ஒரு தன்னார்வு திட்டத்தை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தோம். 
நூல்கள் காகிதப்பதிப்பு, இணையப்பதிப்பு வெற்றி தோல்விகள் என்ன? 
காகிகப் பதிப்புக்கு தேவையான அச்சுயந்திரங்கள் 19-ம் நூற்றாண்டிலேயே இருந்த போதிலும், பாரதியார் போன்றவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற ஒரு அச்சத்தினால் தமிழ் அச்சுயந்திரங்கள் 20-ம் நூற்றாண்டின் பின்பாதி வரை அதிகமாக பயன்படுத்தப் படவில்லை. தமிழ் நூல்கள் சங்ககால நூல்கள் முதல் ஆயிரக் கணக்கி்ல் இருந்தபோதிலும் பெரும்பாலானவை புத்தக வடிவில் அதிக அளவில் அச்சிடப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல், 20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் புதினங்கள் பெருமளவில் வந்து பொதுமக்களை கவர்ந்தது. இதனால் தமிழ் இலக்கிய நூல்கள் காகிதப்பதிப்பாக வருவது தற்காலத்தில் பெருமளவு குறைந்துவிட்டது. இணையத்தில் இந்திய மொழிகளில் தமிழ் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இணையத்தில் மின்னஞ்சல் மடலாடற்குழு மூலம் தகவல் தொடர்பு, கருத்துப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் முன்னோடியாக உள்ளது. அதேபோல் இணைய தளங்கள் எண்ணிக்கைகளிலும் , பிளாக் தளங்கள் மூலம் கருத்தைப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் மொழி இந்திய மொழிகளிலே முதலிடம் பெற்றுள்ளது. இணையம் வழியே விநியோகிக்கப்படும் தமிழ் நூல்களின் மின்பதிப்புகள் எண்ணிக்கை மிகக் குறைவானதே. தமிழ்நாட்டில் உள்ள பல தமிழ்நூல் பதிப்பாளர்கள் மின்பதிப்புகள் காகிதப் பதிப்புகள் விற்பனையை ெபருமளவில் பாதிக்கும் என்ற ஒரு தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். மின்பதிப்புகள் இணையம் வழியாக உலகில் பல நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ் நூல்களைப் பற்றி முதன்முறையாக தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. மதுரைத் திட்டம் போன்றவை காப்புரிமை காரணமாக பழங்கால தமிழ்நூல்களின் மூல செய்யுள்கள்/ பாடல்களை மட்டுமே மின்பதிப்பாக வெளியிடுகின்றன. இந்நூல்களின் உரைகளை காகிதப்பதிப்பு மூலமே முழுமையாக படித்து தெரிந்து கொள்ளமுடியும்.
தங்களுடைய மதுரை திட்டத்தின் பணிகள், இலக்கு ஆகியவற்றை விவரிக்கவும். 

மதுரைத் திட்டம் என்பது தமிழர்களும் தமிழ்மொழிமேல் பற்றுள்ள மேலைநாட்டவரும் அவரவர் தங்களது கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களை உள்ளிட்டு, பிழைதிருத்தி பிறகு இம்மின்பதிப்புகளை இணையம் வழியாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் இலவசமாக இறக்கிக்கொள்ள வசதி செய்வதே. www.projectmadurai.org , இத்திட்டத்தில் இன்றுவரை 300க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை இலவச மின்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது குறைவான விற்பனை காரணமாக பெரும்பான தமிழ்நூல்கள் காகிதப் பதிப்பாக வெளிவராமல் இன்றும் ஓலை வடிவிலேயே இருக்கின்றன. யாழ்ப்பாண நூல் நிலையம் தீயில் எரிந்து போன பொழுது ஈழத் தமிழர் படைத்த தமிழ் நூல்கள் அனைத்தும அழிந்துவிட்டன. பெரும்பாலான ஈழத் தமிழர்கள் நாடு புலர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதால் ஈழத் தமிழர் இலக்கியம் சிதைந்த போகக்கூடிய நிலையில் உள்ளது. பணவசதி குறைவு காரணமாக தமிழ்நாட்டு நூலகங்களில் நூல்களும் ஒலைச்சுவடிகளும மோசமான நிலையில் காக்கப்பட்டு வருகின்றது. இன்னும் 50 ஆண்டுகள் அவை அனைத்தும் செல்லரித்து பாழடையும் நிலையில் உள்ளது. மதுரைத்திட்டத்தின் இலக்கு காலம், நாடு, மதம்/சமயம் போன்ற எந்தஒரு வேறுபாடின்றி, பல்விதமான தமிழ இலக்கியங்களை மின்வடிவத்தில் உள்ளிட்டு, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ்மொழிமேல் பற்றுளர்களுக்கும் அடையச் செய்வதே ஆகும். 

தமிழ் தகவல் தொழிற்நுட்பம் எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது? நீங்கள் இதில் எதிர்பார்க்கும் வளர்ச்சிகள் என்னென்ன? 
உலகில் பல லட்சக்கணக்கான தமிழர்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கணினியில் பல விதமான தொகுப்புகளை தயாரித்து இணையம் வழி பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஆங்கில மொழியில் உள்ளதுபோல் அனைவரும் ஒரு தகுதரம் கொண்டு தயாரிக்கப்பட்ட எழுத்துருக்களையோ அல்லது மென்பொருள்களையோ பயன்படுத்தும் நிலையில் இல்லை. முன்பு கூறியது போல் இணையத்தில் தமிழ் மொழி தகவல் தொடர்பு. கருத்துப் பறிமாற்றம், இணைய தளங்கள எண்€ணிக்கை போன்றவற்றில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் அவை அனைத்தும் தகுதரங்களை பயன்படுத்தாததால் இவற்றின் பயன் பெருமளவில் பாமர மக்களை அடையாமல் இருக்கிறது. இன்றும் பலர் பாமினி போன்ற ஒருமொழி 8-பிட் எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர். பன்மொழி முறையில் அமைக்கப்பட்ட யூனிகோடு தமிழர்களிடையே இன்றும் முழுமையாக ஏற்கப்படவில்லை. இந்நிலை மாறவேண்டும். மாறினால் தான் கணினியில் தமிழ் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்களை உள்ளிட்ட வாய்ப்புகளை அதிகரிக்கும். 
உத்தமம் அமைப்பு பற்றியும் அதில் தங்களது பங்கு என்ன என்பது பற்றியும் கூறமுடியுமா? 
உத்தமம் என்று அைழக்கப்படும் “உலகத் தகவல் தொழில்நுட்ப மன்ற” அமைப்பு www.infitt.org ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன. உத்தமத்தின் குறிக்கோள்கள் உலகெங்கிலும் உள்ள தமிழ் ெமன்பொறி தயாரிப்பாளர்களும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவர்களுக்கும் இன்றியமையாத தகுதரங்கள் வளர்ப்புக்கு வசதி செய்து தருவதே. இதற்காக மின்னஞ்சல் குழு வசதி செய்துகொடுப்பதோடு ஆண்டுதோறும் இவர்கள் ஒன்றுகூடி நேரிடையாக கருத்துப்பறிமாற்றம் செய்ய வசதியாக தமிழ் இணைய மாநாடுகளை உலகில் வேறுவேறு மாநகர்களில் நடத்திவருகிறது. சென்னை, சிங்கப்பூர், கோலாலம்பூர் (மலேசியா), சான் பிரான்சிஸ்கோ (கலிபோர்னியா, அமெரிக்கா) போன்ற நகர்களில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளில் தமிழர்கள் கலந்துகொண்டு பயனடைந்துளளார்கள். ஆரம்ப காலத்திலிருந்து உத்தமத்தின் நிர்வாகக் குழுவில் பங்குகொண்டு வருகிறேன். தமிழ் இணைய மாநாடுகளுக்கு கருத்தரங்கு அமைப்புக்குழு தலைவராகப் பணியாற்றியுள்ளேன். தற்போது உத்தமத்தின் நிர்வாகக்குழு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன். 
தமிழ் அறிவியல் உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? தங்கள் சொந்த இலக்கு என்ன? 
ஆரம்பத்தில் கூறியதுபோல இரசாயனத் துறையில் பல்கலைக்கழக அளவில் கல்வி கற்பிப்பதும் இரசாயனத் துறையில் ஆராய்ச்சியில் பங்குபெறுவதுமே எனது முழுநேர முயற்சிகள். இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளுக்குமேல் என்னால் முடிந்தளவு கணினி, இணைய வழியில் தமிழ் மொழி வளர, உலகெங்கிலும் உள்ள தமிழர்களை சென்றுடைய என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். மதுரைத் திட்டத்தில் பங்குபெறுவது மனதிற்கு பெருமளவில் திருப்தியை கொடுத்துவருகிறது. தமிழ் இலக்கிய நூல்களின் மொத்த எண்ணிக்கைப் பார்த்தால் இதுவரை 300 முக்கிய நூல்களுக்கு மின்பதிப்பு தயாரிப்பது ஒரு சிறு துளியே. பாதுகாக்கப்பட வேண்டிய நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. குறிப்பபாக காகிதவடிவ புத்தகமாக வராமலேயே மடிந்துகொண்டிருக்கும் நூல்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன. கணினியில் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தமிழ் மொழியில் விரைவில் பெற உத்தமம் போன்ற அமைப்புகள் இன்றியமையாதவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதனால் உத்தமம் மேலும் விரிவடைந்து உலகளவில் ஒரு பெருமைப்படக் கூடிய அமைப்பாக ஆவேண்டும் என்பது எனது அவா. அதற்கு என்னால் முடிந்த அளவு பணி செய்வேன். தமிழ் மரபு அறக்கட்டளை www.tamilheritage.org முனைவர் கண்ணன் தலைமையில் தமிழரது கலாசாரம் சம்பந்தப்பட்டவைகளை பல்லூடக மின்வடிவில் பாதுகாக்க முயன்றுவருகிறது. இதிலும் இயக்கத்தின் துணைதலைவராக என்னால் முடிந்த உதவிகளை ெசய்துவருகிறேன். பாஷா இந்தியா வாசகர்களூக்கு வாழ்த்துகள்.

கருத்துகள்

மணிவானதி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்து அமைந்த கட்டுரை. இன்றைய தொழில்நுட்பத்தைக் கொண்டு கற்றலில் புதுமை செய்துவிடலாம். நன்றிங்க ஐயா.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கலைச்சொல்லாக்க நிரலில் பிழைகள் உள்ளனவே!
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
குறிப்பிட்டுக் காட்டினால் நல்லது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்