வட்டார வரலாற்றுக்கான ஆதாரங்கள்

அரசதிகாரத்தின் வரலாறாகவும் அதனைக் கைப்பற்றிட நடந்த போர்கள் மற்றும் சதிகளைப் பற்றிய தொகுப்பாகவும் இருந்த வரலாற்று நூல்கள் இன்று புனைகதைகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. அதன் காரணமாகவே அத்தகைய வரலாற்று நூல்களை வாசிப்பவர்களும் குறைந்து விட்டனர். புனைகதை வாசிப்பின் விதிகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் நின்று போன வரலாற்றை உயிர்ப்புடன் வளர்த்தெடுக்கும் முயற்சிகளும் இல்லாமல் இல்லை.அந்த முயற்சியின் ஒரு பகுதியாக வரலாற்றையும் வரலாற்றெழுதியலையும் மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்திய போக்கைச் சொல்ல வேண்டும். விளிம்பு என்ற பதத்திற்குள் இன்று எல்லா வகையான விளிம்புகளும் இடம் பிடிக்க முனைகின்றன என்பது தனியாக விரித்துப் பேச வேண்டிய ஒன்று.
விளிம்பு நிலைகளின் வரலாற்றை எழுதுவதற்கு முனையும் ஒரு வரலாற்றாய்வாளன் செய்ய வேண்டிய முதல் வேலை களப்பணி. அந்தக் களப்பணி இதுவரை கவனிக்கப்படாமல் விடப்பட்ட புள்ளிகளைக் கண்டு பிடித்துக் கொண்டு வருவதை முதல் நோக்கமாகக் கொள்ளும். கொண்டு வந்து சேர்க்கும் புள்ளிகளை இணைத்தும், மையத்தோடு தொடர்படுத்தியும் புதிய வரலாற்று நூல்களை உருவாக்கிக் காட்டலாம். அப்படி உருவாக்கும் வரலாற்று நூல்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட மைய நீரோட்ட வரலாற்று நூல்களோடு ஒத்தும் போகலாம்; முரண்பட்டும் நிற்கலாம். வரலாற்றுத் துறையில் உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைக் கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்கள் முறைப்படியான அறிதலின் வழியாக உணர்ந்து, அந்தப் பணியைச் செய்கின்றனர். கல்வித் துறை சாராத ஆர்வலர்கள் தன் விருப்பம் காரணமாக அதே பணியைச் சிறப்பாகச் செய்கின்றனர்.
தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தன் விருப்பம் காரணமாக படிப்பது , எழுதுவது என அயராது ஈடுபடுபவர் என்பதைப் பல பத்திரிகைகளை வாசிப்பவர்கள் அறிந்திருக்கக் கூடும்.
வாசக எதிர்வினையில் தொடங்கி, பின் குறிப்பு, மறுப்பு , விவாதம், விளக்கக் கட்டுரை, வாசித்து நிறுவுதல் என அவரது எழுத்துப் பாணிகள் பலவற்றை நான் வாசித்திருக்கிறேன். அந்தப் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு வட்டார வரலாற்றை எழுத உதவும் தரவுகளைச் சேகரித்துத் தரும் ஓர் ஆய்வாளனின் பொறுப்புணர்வுடன் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ள பணி ஆச்சரியபடத் தக்கதாக இருக்கிறது.
நிமிர வைக்கும் நெல்லை என்ற தலைப்பில் அவர் தொகுத்துத் தந்துள்ள தகவல்களும் குறிப்புகளும் நேரடியாக வட்டார வரலாற்றை எழுதும் ஆசிரியனுக்குப் பயன் படக்கூடிய சான்றுகள். இந்தச் சான்றுகளை எந்த நூலகத்திலும் படித்துத் தொகுத்து விட முடியாது. பயணங்களையும் அலைச்சலையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஓர் களப்பணியாளனால் மட்டுமே தேடித் தொகுக்க கூடிய சான்றுகள் அவை. தாமிரபரணி நதி பாயும் திருநெல்வேலி மாவட்டத்தின் சிறு நகரங்கள், குக்கிராமங்கள் எனப் பல நிலைப்பட்ட இடங்களுக்கும் பயணம் செய்து தரவுகளைச் சேகரித்துத் தந்துள்ளார். அவர் பிறந்த மாவட்டத்தின் தரவுகளைத் தருகிறார் என்ற தற்சார்பு வெளிப்படும் இந்த நூலின் வெளிப்பாடு சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்தவையாகவும் அவற்றிற்கிடையே சார்புகளை வெளிப்படுத்தும் மொழிநடையைத் தவிர்த்ததாகவும் உள்ளது என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.
பொதுநிலைப் பட்ட கருத்தியலுடன் திருநெல்வேலி மாவட்டத்தின் வட்டார வரலாறுகளை எழுதும் எந்தவொரு வரலாற்றாசிரியனுக்கும் முன்னோடித் துணை நூலாக இந்த நிமிர வைக்கும் நெல்லை இருக்கும் எனச் சொல்லலாம். அந்தப் பணியைச் செய்துள்ள நூலாசிரியர் ராதாகிருஷ்ணன் பாராட்டுக்குரியவர்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
தலை நிமிர வைக்கும் நெல்லை, ( விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பு)
பொதிகை-பொருநை-கரிசல்,
விற்பனை உரிமை: உயிர்மை பதிப்பகம்,
சென்னை- 18பக்.344;விலை ரூ.200/-
இந்தியாடுடேயில் வெளி வந்த மதிப்புரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்