தீர்க்கவாசகன் கவிதைகள்-2

கறுப்பின் பயணம்
மூடப்பட்ட புதைகுழியிலிருந்து
எழுந்து புறப்பட்டது
கறுப்பு.
சாப்பிட நினைத்து முடியாமல்
போனதெல்லாம் நினைவில்
இருந்தது.
நினைவுகளெதற்கெனப் பிடிவாதம்.

புதிய விருப்பங்களும்
ஆசைகளும்
நினைவுகளாயின.
ரத்தங்குடிப்பதோ மயானக்கொல்லையோ
ஆழ் மனமாகிட மிதந்து நகர்ந்தன.

கிளிப்பச்சைப் புடவைகள்,
வெண்பட்டுக்குஞ்சங்கள்.
காலைக்குளிரில்
மென்பாதம்உரசும் கொலுசுகளோடு
ஜெபமாலை உருட்டும்
விரல்கள் வேண்டும்.

கண்கள் மூட நெற்றியில் சுழலும்
அக்னிக்கு மாற்றாய்
நெய்விளக்கோடு நெகிழ்ந்து
நழுவும்.
புன்னகை வேண்டும்.

புழுதி கிளம்பப் போட்ட
குதியாட்டம் போதுமென்றானது.

வாகனமில்லா வாழ்க்கை
வெறுத்து
ஊழி பலவாச்சு.
சாலைதழுவி
விரைவு காட்டும்
வாகனமொன்றைநேர்த்திக் கடனாக்கு.

பக்தனே
உனது பக்தியை மெச்சிட
வழியெதுவென்றால்
சாலை வரிகட்டி
இன்ஸ்யூர் செய்த
வாகனக்காணிக்கை
முடிவது ஒன்றே.
கறுப்பின் பயணம் காற்றில் அல்ல
காற்றினும்கடிதாய் விரையும் காரில்.
==================

அவன் நின்றநேரம்
அவளும் நின்றிருந்தாள்
அவன் சொன்ன வார்த்தைகள்
திருப்பி அனுப்பப்பட்டன.
இடைமறித்த ஆந்தை
விதைத்த இடம் களர்நிலம்.
அனாதைகளாகிக் காற்றில்
வார்த்தைகள் அலைகின்றன.
பிச்சிக் கொடியின் பரவல்
மறிக்கப்பட்ட வேலி.
கதவுகளைக் காணோம்.
ஜன்னல்களில் மட்டுமல்ல;
வாசலிலும்கூடத்தான்.
முகம் தேடி அல்ல
கொலுசுச் சத்தம் கேட்க
அலைகிறது மனம்.
பவள மல்லிகை மட்டும்தான்
பாவனையில் இருக்கிறது.
அழுகைதான் பிடிக்குமெனில்
கேட்டுத் தெரிந்துகொள்ள
என்ன இருக்கிறது.
ஆட்சேபனைகள் ஏதுமில்லை.'
இருட்டில் என்ன கனவு ' 'என்றவன்,
மூடாதே நினைவு திரும்பும் ' என்கிறான்.
வானமும் நிர்வானமும்
அழகெனச் சொன்னது யார்... ?
செம்பருத்திப் பூவில்
வண்ணத்துப்பூச்சியின் பிறப்பு;
பிறந்தவுடன் பறப்பது அதனின் சாத்தியம்.
போடு மண்ணும் பொரி மணலும்
ஆற்றுநீர் உண்ணச் செங்களிம்புப் பூசுமண்.
அடுக்கப்பட்ட செங்கல்சூளை
வீடாகும்; கல்லாகும்.ரத்தம் குடித்த மண்குழம்பு
கரும்பழுப்புக்கல்லாகும்.
ஈசான மூலையிலோ
தென்வடல் சுவற்றிலோ
இல்லை அதன் இடம்.
மண்ணாகலாம்..
கல்லாகலாம்..
இரும்பின் பாகாகலாம்..
நரம்புகளின் திணவு..
சூளையின் தீனி..
சாம்பலின் ருசியில் அவனது புலம்பல்.
கொன்றை மரத்துக்
கிளை ஏறி
கேட்டுவிட்டுப் போகிறதுசெம்போத்து.

=====================28-07-04

அந்தரங்கக் காதலியின் துர்மரணம்

ஒன்பது; அழகின் விரோதம்.
எப்பொழுதும் பட்டியல் எட்டைத் தாண்டாது.
கடைசி நான்கும் தற்காலிக இடங்கள்.
முதல் மூன்றும் நிரந்தர இடங்கள்.
நான்கு மட்டும் இரண்டுக்கும் இடையில்.
ஏக்கத்தைச் சொல்லி
இயலாமையில் போனவளும்,
முதல் ஸ்பரிஷம் பெற்று
முதல் கலவி தந்தவளும்
விதிகள், விளையாட்டுக்கள், வினைகள்
என விவாதங்கள் புரிந்தவளும்
செத்துப்போவது நிச்சயம் இல்லை.
தோற்பதற்கெனவே களமிறங்கும் வீராங்கனையும்,
சூட்டியபோது வாய்பிளந்த அழகுராணியும்
தற்கொலையில் செத்துப்போனதிரை நட்சத்திரமும்,
அட்டைப் படத்தில் இடம்பிடிக்கும்
ஆதிவாசிப் பெண்ணும்,
வருவார்கள்;போவார்கள்.
ஆனால் இவள் மட்டும்
போவாள்; வருவாள்...
வருவாள்; போவாள்....
புதுமை நழுவிய மரபின் முழுமை.
நளின வகிடு; வட்டப் பொட்டு.
அதிராப்பேச்சு;
அதிரும் உதடுகள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளின்அதிகார தேவதை.
வெண்துகில் போர்த்திகூந்தல்
களைய விரும்பி யுரைத்தாள்.
நான்காமிடமும் காலியாச்சு..
இல்லை.. இல்லை.. செத்துப் போச்சு.
====================== 28-05-2004
காணவில்லை
=======================
எழுந்திருங்க பெண்டுகளே..விடிவெள்ளி வந்திருச்சி
பொழுது மறையுமுன்னே போரடிச்சுக்குமிக்க வேணும்
எழுந்திருங்க பெண்டுகளே..எழுந்திருங்க..
கொத்தன் குரல்கேட்டு கிராமம் முகம் அலம்பும்
கம்மம்புல் மாளிகைகள் கதவு இமைதிறக்கும்
ககனவெளித்தேடலுக்கு காற்றோடு பறவை போதும்
கலைந்தெறிந்த சருகு கொண்டு
ஆலமரம்குளிர்காயும்;அருகே சிறுவருடன்.

தினந்தோறும் வீட்டுமுன் சாணியில் பாதம்படும்.
மாக்கோலம் முகம்வெளுக்க முழங்கையும் சடையுரசும்
இடுப்புக்குடம் சலசலத்து வளையலுக்குப் போட்டியாகும்
பிறைக்குப் பிடிபோட்டு கையில் எடுப்பார்கள்
காலைமென்பனியில் கால்கள் பதிப்பார்கள்.

இந்தக் கிராமத்தில் வளர்ந்து பிரிந்துவந்தேன்
ஆண்டுகள் இரண்டுபத்து உருண்டோடிக்காலமாச்சு.
திரும்பி வந்து பார்த்தபோது
திசையெங்கும் அருகம்புல் தீய்ஞ்சு விரிஞ்சிருக்கு
திணைக்கதிர்கள் படப்புமில்லை; கேழ்வரகுக்கூழுமில்லை.
திரண்டு மேய்ந்துவரும் ஆட்டுச் சத்தந்தானுமில்லை
அருவாள் நெழிபோல நீண்டுவிழும் அருவியில்லை
நீரோடைதானுமில்லை;ஓரத்து நாணலுடன்.

கொண்டுபோனார் யாரென்று அறிந்திருந்தால் சொல்லுங்களேன்.சொன்னவர்க்குப்
பரிசாக பாராட்டுச் சொல்தருவேன்
நிதிகூட நான் தருவேன் திருப்பித்தரும் அறிவினுக்கு.
பசுமைப்புரட்சியென்று
பெயர்சொல்லி திருடிச் சென்ற
எனது ஊர் கிடைத்திடுமா..?
தொடித்தலை விழுத்தண்டூன்றி நடந்துசெல்ல ஆசையுண்டு.

==============

எதுவுமற்றுப் போகவில்லை
தோட்டம்.
முல்லை சிரிக்கவில்லை,
குரோட்டன்களும் குளிரவில்லை,
செம்பருத்தியைக்காணாமல்
ரோஜாவும் தூங்கவில்லை.
கனவு காணாமல் விழிப்பென்பதேது.
என்றாலும்,
செவ்வந்தி பூக்கவும்
மல்லிகை மணக்கவும்
தடையெதுவும் இல்லை.

நாயகியாகவோ வில்லனாகவோ
அன்றி நடித்தலும் கூடும்.
உள்ளாகவும் வெளியாகவும்
இருத்தலும் கூடும்
மாவீரனாதலெனக்குச்சாத்தியமில்லையாதலின்
கோழையாதலும்....

எதுவுமற்றுப் போகவில்லைதோட்டம்.
=================17-11-200


வில்வளைப்பு
=========================
1200/- ரூபாய்
வாடகை வீட்டுமொட்டை மாடியில் அவள்,
தவணை முறையில் பாக்கி நிற்கும்ஸ்கூட்டருடன் அவன்.
அவளும் நோக்க அண்ணலும் நோக்க
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தி...

பத்தாயிரத்திச் சொச்சம் சம்பளம் வாங்கியும்
அவள் தகப்பன்
வரதட்சணை வில்லை
இன்னும்
வளைக்கவேயில்லை.

அப்புறம் தானே
ராமன் வீட்டிற்கு வருவதும்
அம்பை எடுப்பதும்,
வில்லை வளைப்பதும்
அல்லது முறிப்பதும்.
========================

சொல்லத்தொடங்கினால்
விடுபடும் பெயர்கள் குறித்தேஅக்கறை.
தாள்கள் உள்ளன.
பேனாக்கள் உள்ளன.
குறித்து வைத்துக் கொள்ள நினைவுகள் தான்...

விசிறியடித்தபின்
வரிசை காட்டினால்பல்லிளிப்பே மிஞ்சும்.
எழுதத் தொடங்கியபோது
இல்லாமல் போன நீ
கசக்கி எறிந்தபின்
கனவாகலாம்.
யாருக்கு இல்லையென்றாலும்
அவனுக்கு உண்டு.
அழிரப்பர் கொண்டு அழிக்க நினைத்துக்
கறையெனச் சொல்லி காணாமல் போனவன்.

நன்றி..நன்றி...நன்றி... நன்றி...

==============19-11-2003
=====================
சைக்கிள் பழகுதல் சாலச்சிறந்தது
நடத்தலைவிடவும் கூடுதல் பயிற்சி
நடந்து செல்வோரை முந்தவும் இயலும்.
போட்டியென வந்தால்
மைகள் ஜெயிப்பது கதையின் சுவாரசியம்;
முயல்கள்தோற்குமென நம்புதல் விரயம்.
இருசக்கர வாகனங்கள்
விபத்துக்குள்ளாக்கிவிடும் என்பதுபோல.
இயக்குவதற்கு இன்னொருவனிருந்தால்

காயமார்க்கமும் பத்தில்லைதான்.
நம்பிக்கையின் கதவுகள்மட்டும் மூடியே கிடக்கின்றன.
================01.10.03

======================
காசு சுண்டலில் தீர்மானமாகிறதுபோட்டியின் தொடக்கம்.
அலையும்பந்து ஒன்றேயாதலின்
உதைக்கப்படுவதும் உதைபடுவதும் அதன் மேலானது.
அடிக்கப்படும் பந்து
தடுக்கப்படவேண்டும்;
திருப்பப்பட வேண்டும்;
நகர்த்தப்படவேண்டும்.
அல்லது பிடிக்கப்படவேண்டும்
இவை விளையாட்டின்விதிகள்
அதிகநேரம் பந்துவசமாதல்
நுட்பத்தின் சாதுரியம்.
விளையாட்டாக வாழ்தலென்பது கனவில் இருக்கு.
பந்துகள் எகிறும்
மைதானவெளியும் கண்முன் இருக்கு.
==============08-10-03

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்